You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இயற்கை பேரிடர்களால் பாதிக்கக்கூடிய முதல் 15 நாடுகள் எவை?
இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் கடுமையான அபாயத்தில் உள்ள 15 நாடுகளில், 9 தீவுகள் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
2018 உலக ஆபத்து அறிக்கை, 172 நாடுகளில் பூகம்பம், சுனாமி, சூறாவளி மற்றும் வெள்ளம் போன்ற ஆபத்துகள் குறித்து ஆய்வு செய்தது. அப்படி இயற்கை பேரிடர்கள் வந்தால் எவ்வாறு அதனை அந்நாடுகள் எதிர்கொள்ளும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் உள்ள ரூர் பல்கலைக்கழகம், போசம் மற்றும் மேம்பாட்டு உதவி கூட்டணி என்ற அரசுசாரா நிறுவனம் சேர்ந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன.
முதல் 15
குழந்தைகளின் நிலையும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களின் தரவுகளின்படி, உலகில் நான்கில் ஒரு குழந்தை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கிறது.
மேலும், மோதல்கள் அல்லது இயற்கைப் பேரிடர்களால் 2017ஆம் ஆண்டில் இடம் பெயர்ந்த, பாதிக்கும் மேற்பட்ட மக்கள் 18 வயதுக்கு கீழ் உடையவர்கள் ஆவர்.
உயரும் கடல் மட்டம் உள்ளிட்ட பல்வேறு பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்படும் அபாயங்களில் உள்ள பல தீவுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தென் பசிஃபிக் பகுதியில் இருக்கும் சிறிய தீவான வனுஅடூ, உலகில் பாதிக்கப்படும் நாடுகளில் முதலில் உள்ளது. அதன் அருகில் உள்ள டொங்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.
தீவுகள்
சுமார் 104 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள பிலிப்பைன்ஸ் தீவுகள் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மத்திய மற்றும் தென் பசிஃபிக் கடலில் இருக்கும் தீவுகள் ஒட்டுமொத்தமாக அபாயகரமான பகுதியாக இருப்பதாக ஜெர்மன் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ள முதல் 50 நாடுகளில் ஆப்பிரிக்க நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
ஆய்வறிக்கையின் படி, குறைந்த அபாயம் உள்ள நாடு கத்தார்.
சமூக பாதிப்பு
இயற்கை பேரிடர்களுக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதற்கு சிறந்த உதாரணமாக ஐரோப்பிய நாடுகளை அவர்கள் கூறுகின்றனர். கடந்த வசந்த மற்றும் கோடை காலத்தில் ஐரோப்பிய நாடுகளை தாக்கிய கோடைக் காற்றால், விவசாயம் நேரடியாக பாதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை சிறப்பாக எதிர்கொண்டனர்.
"வறட்சியால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இங்கு குறைந்தளவே பாதிப்பு இருந்தது. இறுதியாக பேரழிவில் இருந்து தப்பித்தது" என்கிறார் ரூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கட்ரின் ரட்கே.
மேலே வழங்கப்பட்டுள்ள ஆபத்தில் இருக்கும் நாடுகள் பட்டியல், இயற்கை பேரிடர்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களை வைத்து மட்டுமல்லாமல் அதனை தாங்க அந்நாடு எவ்வளவு தயாராக உள்ளது என்பதும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இதனால்தான், அடிக்கடி பூகம்பம் ஏற்படும் ஜப்பான் மற்றும் சிலி போன்ற நாடுகள் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இல்லை.
அதேபோல, பல நூற்றாண்டுகளாக கடல்மட்ட உயர்வுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் ஹாலாந்து 65ஆவது இடத்தில் உள்ளது.
"இயற்கை பேரிடர்களால் ஏற்படக்கூடிய அழிவுகளை இந்த நாடுகளால் குறைக்க முடியாது. ஆனால், இவை மிகவும் பாதிப்படையும் நிலையில் இல்லை" என்று அந்த ஆய்வு கூறுகிறது.
"பருவநிலையைப் பொறுத்த வரை, 2018ஆம் ஆண்டு அதன் முக்கியத்துவத்தை பெரிதும் புரிய வைத்த ஆண்டு. தீவிர இயற்கை நிகழ்வுகளுக்கு நாம் தயார்படுத்திக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த ஆண்டு உணர்த்தியுள்ளது" என்கிறார் மேம்பாட்டு உதவி கூட்டணியின் தலைவர் ஏஞ்சலிக்கா பொஹ்லிங்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்