2000 கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்த இரான் வணிகருக்கு தூக்கு

பட மூலாதாரம், TASNIM NEWS AGENCY/REUTERS
'சுல்தான் ஆஃப் காயின்ஸ்' என்றழைக்கப்பட்ட இரான் நாணய வர்த்தகர் ஒருவர் அதிக அளவு தங்க நாணயங்கள் பதுக்கி வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார்.
வாஹித் மஸ்லாமியன் என்ற அந்த வணிகருக்கும், மற்றொரு நாணய வர்த்தகருக்கும் 'உலகில் ஊழலை வேகமாக பரவச் செய்தனர்' என்ற குற்றச்சாட்டின் பேரில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மஸ்லூமியனும், அவரது கூட்டாளிகளும் கிட்டதட்ட 2000 கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்ததாக இரான் மாணவர்கள் செய்தி முகமை கூறியுள்ளது.
இரான் நாணயத்தின் மதிப்பு சரிந்துவரும் நிலையில் அந்நாட்டில் தங்க நாணயங்கள் மற்றும் அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது.
அண்மையில் மீண்டும் இரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், இரான் ரியாலின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 70 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டது. நாட்டில் அதிகமாக நிலவுவதாக உணரப்படும் ஊழலுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டக்காரர்கள் போராடினர்.
நாட்டை கடுமையாக பாதிக்கும் பொருளாதார குற்றங்களை தடுக்கவும், சமாளிக்கவும் இரானின் அதி உயர் தலைவரான அயத்துல்லா அலி கமேனியால் ஒரு முக்கிய முயற்சி தொடங்கப்பட்டது
பொருளாதார குற்றங்களை விசாரிக்க இரானில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் இந்த ஆண்டு மரண தண்டனை வழங்கப்பட்ட ஏழு பேரில் மஸ்லூமியனும் ஒருவர்.
இதில் சில விசாரணைகள் அரசுத் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிப்பரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












