You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கல்வியில் சாதிக்க மரபணுக்கள் உதவுகின்றனவா? ஆராய்ச்சியில் புதிய முடிவுகள்
- எழுதியவர், காய்லி ரிம்ஃபெல்டு &
- பதவி, மார்கெரிட்டா மலான்சினி
ஒரு குழந்தையின் மரபணுக்கள், பள்ளியில் கல்வித் திறமையைத் தீர்மானிப்பதில் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பள்ளிகளில் குழந்தைகள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. சமீப காலங்களில், குழந்தைகளின் திறமைகள் வித்தியாசப்படுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு காரணம் அவர்களது மரபணுக்கள்தான் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
ஆரம்பப் பள்ளியில், கட்டாயக் கல்வி முடிவுறும் தருவாயில், பலதரப்பட்ட பாடங்களில் குழந்தைகள் சிறப்பாக செயல்படுவதில் மரபணுக்கள் பங்கு வகிக்கின்றன.
ஆனால் ஒரு குழந்தை தொடர்ந்து பள்ளியில் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு மரபணுவும், சுற்றுச்சூழல் காரணியும் எப்படி பங்காற்றுகின்றன என்பது தெரியவில்லை.
இதைப் பற்றி ஆராய, இங்கிலாந்தைச் சார்ந்த 6,000 ஜோடி இரட்டையர்கள் "இரட்டையர்களின் (Twins) ஆரம்ப கால வளர்ச்சி" குறித்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களது ஆரம்பப் பள்ளி முதல் கட்டாயக் கல்வி நிறைவு பெறும் வரையிலான தேர்வு மதிப்பெண்கள் ஆராயப்பட்டன.
இந்த புதிய ஆய்வின்படி இரட்டையர்களின் கல்வி வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவுக்கு நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆரம்பப் பள்ளியில் நன்றாகப் படிக்கும் குழந்தைகள், கட்டாயக் கல்வி முடிவுறும் நேரத்தில் நடத்தப்படும் தேர்வுகளிலும் நல்ல செயல் திறனைக் காட்டுகிறார்கள்.
இரட்டையர்களை ஆய்வு செய்ததின் மூலமாக மரபணுக்கள் எந்த அளவுக்கு கல்வியில் சாதனை புரிவதற்குக் காரணமாக இருக்கின்றன என்பதை உறுதிப் படுத்த முடிந்தது.
இரட்டையர்களைப் பயன்படுத்துவதின் மூலமாக, மரபணு காரணிகளின் வித்தியாசங்கள் குறித்த விகிதங்களைக் கணக்கிட முடிந்தது.
ஒரு குறிப்பிட்ட பண்பை எடுத்துக் கொண்டால், ஒரே மாதிரியான இரட்டையர்களின் மரபணு 100 சதவீதம் ஒத்துப் போகிற அதே வேளையில், மாறுபட்ட இரட்டையர்களின் மரபணுக்கள் தோராயாமாக 50 சதவிகிதம்தான் ஒத்துப்போகின்றன.
அதாவது ஏனைய உடன் பிறந்தவர்களைப் போல. 'பள்ளிக் கல்வியில் சாதனை' போன்ற குறிப்பிட்ட சில பண்புகளில், மாறுபட்ட இரட்டையர்களை விட, ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒத்துப் போனால், அது மரபணுக்களால் ஏற்படுகிறது என்று நாம் யூகிக்கலாம்.
இதனை வைத்து குறிப்பிட்ட அந்தப் பண்பு எவ்வாறு பாரம்பரியமாக தொடர்கிறது அல்லது எந்த விகிதாசாரத்தில் வித்தியாசப்படுகிறது என்பதைக் கணக்கிட முடியும்.
70 சதவீத சாதனைகளின் நிலைத்தன்மை என்பது மரபணுக் காரணியால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதைக் கண்டுபிடித்தோம்.
ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையில், கல்விச் சாதனையின் தரம் ஒரே மாதிரியாக இருக்கையில், இந்த நிலைத் தன்மையை எந்தக் காரணிகள் நிர்ணயிக்கின்றன என்பதைப் பார்த்தோம்.
70 சதவிகித நிலைத் தன்மை மரபணுவாலும், 25 சதவிகிதம் இரட்டையர்களின் ஒரே மாதிரியான சூழலாலும் - அதாவது ஒரே குடும்பத்தில் வளர்வது மற்றும் ஒரே பள்ளியில் படிப்பது போன்ற காரணிகளாலும் தீர்மானிக்கப்படுவதாகக் கண்டறிந்தோம். மீதம் உள்ள 5 சதவிகிதம், மாறுபட்ட ஆசிரியர்கள், நண்பர்கள் போன்ற மாறுபட்ட சூழலால் தீர்மானிக்கப்படுகிறது.
கல்விச் சாதனைகளில் வித்தியாசம் ஏற்படுவது - அதாவது ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்விகளுக்கு இடையில், தரம் கூடவோ குறையவோ செய்வதற்கான பெரும்பான்மையான காரணம் இரட்டையர்கள் மாறுபட்ட சூழல்களில் வாழ்வதுதான் என்பதைக் கண்டறிந்தோம்.
பள்ளிகளில் குழந்தைகளின் திறமையில், கணிசமான அளவிற்கு மரபணு காரணமாக இருக்கிறது என்பதை அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால், இரட்டையர்களின் குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவங்களில், வாய்மொழியாகவும் ஏனைய வழிகளிலும் சோதனை செய்யப்பட்டதில், மரபணு என்பது கணிசமான அளவிற்கு - அதாவது 60 சதவிகித அளவிற்குக் காரணியாக இருப்பதைக் கண்டுபிடித்தோம்.
ஒரு இரட்டையர்களின் தரம் கூடவோ குறையவோ செய்வதற்கு மாறுபட்ட ஆசிரியர்களிடம் கற்பது போன்ற சூழல்கள் காரணமாக இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இரட்டையர்கள் பற்றிய ஆய்வுகள், பெரிய குழுக்களின் குறிப்பிட்ட பண்புகள் பற்றி மதிப்பீடு செய்கின்ற வேளையில், சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சிகள் தனிப்பட்ட மனிதர்களில் மரபணுக்கள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி வெளிப்படுத்துகின்றன.
சமீபத்தில், மரபணு குறித்த ஆய்வுகளுக்கான குழு (GWAS) மேற்கொண்ட ஆய்வில், கல்விச் சாதனையில் மரபணு மாற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை அடையாளம் காணுவதில் குறிப்பிட்ட அளவிற்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
இந்த ஆய்வுகள் மரபணுக்களின் குறிப்பிட்ட பண்புகள் குறித்துத் தெளிவுபடுத்துகின்றன. இருப்பினும், தனிப்பட்டவர்களின் பள்ளி செயல்திறனைப் பொருத்தமட்டில், ஒவ்வொரு மரபணுவும் மிகக் குறைந்த அளவே (0.1% க்கும் குறைவாகவே) விளக்குகிறது.
சமீபத்தில், இன்னும் சக்தி வாய்ந்த முறையில் ஆராயும் முறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தனித்தனியாக மரபணு மதிப்பீடு செய்வதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கான மரபணுக் குறியீடுகளை ஒன்று திரட்டி GWAS ஆய்வு செய்திருக்கிறது.
இந்த மதிப்பீடைப் பயன்படுத்தி, இன்னும் துல்லியமாக - ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத மனிதர்களிடையே, பள்ளிகளில் செயல்திறன் குறித்தும், அவர்களது பண்புகளில் ஏற்படும் வித்தியாசம் குறித்தும் ஆராயப்படுகிறது.
எங்களது புதிய ஆய்வின் ஒரு பகுதியாக, இதற்கு முந்தைய GWAS ஆய்வின் அடிப்படையிலான கல்வி குறித்த மரபணுக் குறியீடுகளின் தகவல்களைப் பயன்படுத்தினோம்.
நாங்கள் 6000 ஜோடி இரட்டையர்களுக்கான மதிப்பெண்ணைத் தனித் தனியாகக் (அதாவது இந்த ஆய்வில் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத வகையில்) கணக்கிட்டோம்.
அது அவர்கள் பள்ளிகளில் எவ்வாறு செயல்திறன் ஆற்றுவார்கள் என்பதைக் கணித்தது. இந்தக் கணிப்புகள்படி, ஆரம்பப் பள்ளிகளில் 4 சதவீதமும் பள்ளிக் கல்வி நிறைவுறும் தருவாயில் 10 சதவீதமும் வித்தியாசப்பட்டன.
இது முன்பு நாங்கள் மேற்கொண்ட இரட்டையர்கள் பற்றிய ஆய்வின் முடிவை - அதாவது எவ்வாறு ஒரே மரபணு கொண்ட குழந்தைகள் , சாதிப்பதில் ஒவ்வொரு நிலையிலும் வித்தியாசப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியது.
பிறந்தவுடன் மரபணு சோதனை மேற்கொள்வதால், கற்றல் தொடர்பாக குழந்தைகளின் மரபணு மூலம் ஆபத்து ஏதும் இருப்பது கண்டறியப்பட்டால், அவைகளில் கவனம் செலுத்த இயலும்.
மரபணுக்கள் பள்ளிக் கல்வி முழுவதுமான காலக்கட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதிகக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு கூடுதலான ஊக்கத்தைக் கொடுப்பது குறித்து எங்கள் ஆராய்ச்சி தெளிவுபடுத்துகிறது.
எதிர்காலத்தில், மரபணு பற்றிய கணிப்பு மற்றும் சுற்றுச்சூழல்கள், அதாவது அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் ஏற்படுத்தும் தாக்கம், குடும்பச்சூழல், பள்ளியின் பண்புகள் - பற்றிய கணிப்பு ஆகியவை குழந்தைகளின் கல்விப் பிரச்சினைகளைக் கண்டறியும் ஒரு கருவியாக அமையும்.
அதன் மூலம் அவர்களுக்குத் தனித் தனியான கற்றல் முறைகளைப் பயன்படுத்திப் பயிற்சி கொடுக்கலாம்.
எதிர்காலத்தில் மரபணுக்கள் மூலம் குழந்தைகளின் கற்றல் குறைபாடுகள் தொடர்பான பிரச்சினைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உதவ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பாக, பிறந்தவுடன் செய்யப்படுகிற மரபணு சோதனையால், கற்றல் தொடர்பானவற்றில் குழந்தைகளின் மரபணு மூலம் ஆபத்து ஏதும் இருப்பது கண்டறியப்பட்டால், அவைகளில் கவனம் செலுத்த இயலும்.
அந்த வகையில், வரும் முன்னர் காத்துக் கொள்வது வெற்றியைத் தரும் என்பதால், பிற்கால வாழ்க்கைப் பிரச்சினைகளை முன்னரே கண்டறிந்து, குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பெரும்பாலும் தடுக்க இயலும்.
நாளொன்றுக்கு 60 லிட்டர் பால் தரும் பிரேசில் பசு - பின்னணியில் இந்திய பசுக்கள்
பிற செய்திகள்:
- சினிமா விமர்சனம்: சீமராஜா
- சூறாவளி ஃபுளோரன்ஸ்: 'பேரழிவு ஏற்படலாம்' - பெரும் அளவில் மக்கள் வெளியேற்றம்
- ஜெர்மனி: 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல்
- ரஷ்ய முன்னாள் உளவாளி மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார்? புதின் தகவல்
- எட்டுவழி சாலைக்குப் பதில் ஆறுவழி சாலை: பாதிப்பை குறைக்குமா புதிய திட்டம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்