You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெனிசுவேலா: அதிபரை கொல்ல சதி, 14 பேர் கைது
கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.
அதிகாரிகள் கைது
வெனிசுவேலா அதிபரை கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒரு தாக்குதல் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்களில், தேசிய பாதுகாப்பு துறையை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். முன்னதாக வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் இந்த தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சியையும், கொலம்பியா தேசத்தையும் குற்றஞ்சாட்டி இருந்தார்.
அமைதி தொடருமானால்
இப்போது நிலவும் அமைதி தொடருமானால் காஸா பகுதியில் சரக்கு வாகன பாதை திறக்கப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவிக்டார் லைபெர்மென் கூறியுள்ளார். இந்த பாதையானது ஐந்து வாரங்களுக்கு முன்பு பாலத்தீன தாக்குதலை காரணம் காட்டி மூடப்பட்டது. இதனால் மனிதநேய உதவிகளும் பாதிக்கப்பட்டன. காஸா பகுதியில் வாழும் 20 லட்சம் மக்கள் இந்த சாலையைதான் போக்குவரத்துக்காக நம்பி இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த பகுதி பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த சாலை.
நடவடிக்கை எடுக்கப்படும்
ஒப்பந்தத்தை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் வெள்ளை மாளிகை உதவியாளரும், தொலைக்காட்சி நட்சத்திரமுமான ஒமராசா மனிகால்ட் நியூமேன் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசார குழு சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வெள்ளை மாளிகையில் நடந்த தனிப்பட்ட உரையாடலை பதிவு செய்ததன் மூலம் அவர் சட்டத்தை மீறிவிட்டார் என அதிபர் டிரம்பின் வழக்கறிஞர் ரூடி கிலானி தெரிவித்து இருந்தார். டிரம்பை விமர்சித்து ஒமராசா ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.
முப்பதாயிரம் பயங்கரவாதிகள்
ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த 20,000 முதல் 30,000 பேர் சிரியா மற்றும் இராக் பகுதிகளில் இருக்கலாம் என்று ஐ.நா தகவல் ஒன்று கூறுகிறது. அண்மையில் இந்த பகுதிகளில் மோசமான தோல்விகளை அந்த அமைப்பு சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இடிந்த பாலம்
இத்தாலியின் வடமேற்கு பகுதியில் இருக்கும் ஜெனோவோ நகரில் பாலம் ஒன்று இடிந்துவிழுந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. இந்த விபத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 15 பேர் மோசமாக காயமடைந்துள்ளனர் என்றும் போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் டஜன் கணக்கான வாகனங்கள் 45மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்ததுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களின் அழுகை தொடர்ந்து கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 12 பேரை காணவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :