You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“என் மகன் ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்தது உண்மைதான்” - ஒப்புக்கொண்ட டிரம்ப்
கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.
டிரம்பின் மகன் - ரஷ்ய வழக்குரைஞர் சந்திப்பு
தன் மகன் ரஷ்ய வழக்கறிஞர் ஒருவரை அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில் சந்தித்தார் என்பதை டொனால்ட் டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு தகவல் பெறுவதற்காக நிகழ்ந்த சந்திப்பு அது என்றும், அது சட்டப்பூர்வமானதுதான் என்றும் தான் பகிர்ந்த ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளர் டிரம்ப்.
அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் ஆதிக்கம் குறித்து விசாரணை நடைபெற்றுவரும் சூழ்நிலையில் டிரம்ப்பின் இந்த ட்வீடானது இயல்பாக முக்கியத்துவம் பெறுகிறது.
பட்டினியில் குழந்தைகள்
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ பகுதியில் பட்டினியில் தவித்த 11 குழந்தைகளை போலீஸார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் மூன்றாம் உலக அகதிகள் போல இருந்தனர் என்றும், தன் 30 ஆண்டுகால அனுபவத்தில் இப்படியான சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை என்றும் கூறுகிறார் அந்தப் பகுதி தலைவர். இந்த குழந்தைகளை கடத்தியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விமான விபத்து, இருபது பேர் பலி
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தைச் சேர்ந்த பழமையான விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் சுவிட்ஸர்லாந்தில் இருபது பேர் பலியாகி உள்ளனர். 17 பயணிகள் மற்றும் மூன்று விமான பணியாளர்களுடன் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியம் புறப்பட்ட இந்த விமானமானது கிழக்கு சுவிட்ஸர்லாந்தில் உள்ள மலைப்பகுதியில் விபத்துக்கு உள்ளாகி உள்ளது. விபத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.
அமைதி ஒப்பந்தம்
தெற்கு சூடான் அரசாங்கமும், அந்நாட்டின் முக்கியமான போராட்டக் குழு ஒன்றும் அதிகாரத்தை பகிர்ந்துக் கொள்ளும் அமைதி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் மூலம் அந்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வருகிறது. இந்த உள்நாட்டு யுத்தத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் மூலம் போராட்டக் குழுவின் தலைவர் ரீயேக் மேட்ச்சர் துணை அதிபர் ஆகிறார்.
சுனாமி எச்சரிக்கை
இந்தோனீஷியாவில் உள்ள லோம்போக் தீவை ஞாயிற்றுக்கிழமையன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியதில் குறைந்தது 82 பேர் இறந்துள்ளது தெரிய வருகிறது.ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :