You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அவமானப்படுத்திய டிரம்ப், பாராட்டிய மெலனியா டிரம்ப்
கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.
அவமானப்படுத்திய டிரம்ப், பாராட்டிய மெலனியா டிரம்ப்
அமெரிக்க கூடைபந்து வீரரான ஜேம்ஸ், ஒரு நேர்காணலில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை பிரிவினைவாதி, இனவெறியர்களுக்கு தைரியம் தந்தவர் என்றெல்லாம் குற்றஞ்சாட்டி இருந்தார். இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருந்த டிரம்ப், ஜேம்ஸின் அறிவுதிறன் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால், டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப்பின் செய்தி தொடர்பாளர் , ஜேம்ஸ் ஒஹையோ மாகணாத்தில் உள்ள பள்ளியில் நற்காரியத்திற்காக பணி செய்வதாக அதே கூடைபந்து வீரரான ஜேம்ஸை பாராட்டி இருக்கிறார்.
டாக்கா ஆர்ப்பாட்டம்
சாலை பாதுகாப்பு தொடர்பாக வங்காள தேச தலைநகர் டாக்காவில் கடந்த 7 நாட்களாக நடந்து வரும் ஆர்ப்பாட்டத்தில் மோதல் ஏற்பட்டத்தில் 25-க்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மாணவர்களை யார் தாக்கினார்கள் என்று தெளிவாக தெரியவில்லை. ஆனால் ஆளுங்கட்சியுடன் தொடர்புடைய மாணவர் குழு ஒன்று தாக்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஊழலும்,அதிபர் வேட்பாளரும்
ஊழல் குற்றச்சாட்டு இருந்தாலும் அவரே எங்கள் அதிபர் வேட்பாளர் என்று முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை அக்டோபரில் நடக்க இருக்கும் பிரேசில் அதிபர் தேர்தலில் வேட்பாளராக தேர்ந்தெடுத்து இருக்கின்றனர் 2000-க்கும் மேற்பட்ட உழைப்பாளர் கட்சி உறுப்பினர்கள். ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லுலாவுக்கு 12 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் இருக்கிறார்.
வன்முறை, ராணுவம்
கூட்டரசு துருப்புகள் உள்ளூர் நிர்வாகத்தை கைப்பற்றியதை அடுத்து கிழக்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு நகரத்தில் வன்முறை வெடித்துள்ளது. சோமாலி பகுதியின் உள்ளூர் நிர்வாகத்துக்கும் தேசிய அரசாங்கத்துக்கும் ஏற்பட்ட பிளவை அடுத்து அந்தப் பகுதிக்கு ராணுவம் அனுப்பப்பட்டது. எண்ணெய் வளத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தேசிய அரசுக்கும் உள்ளூர் நிர்வாகத்துக்கும் கருத்து வேற்றுமை இருந்து வருகிறது.
கூட்டத்தில் வெடிகுண்டு
வெனிசுவேலா நாட்டு அதிபர் நீக்கோலஸ் மதுரோ கரகஸில் நேரலை தொலைக்காட்சி உரையாடலின்போது அங்கு பறந்த ஆளில்லா விமானத்தில் வெடிகுண்டு வெடித்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் அதிபருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் மதுரோவின் உயிரை குறிவைத்து இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டதாக குறிப்பிட்ட தகவல் தொடர்பு அமைச்சர் ஹோர்கே ரோட்ரிகஸ், இதில் ஏழு வீரர்கள் காயமடைந்ததாக தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :