You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிகாரிகளை கடுமையாக விமர்சித்த கிம் ஜாங்-உன்: திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன?
பொருளாதார திட்டங்களை நிறைவேற்றுவதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகாரிகளை விமர்சித்துள்ளார் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்.
பொதுவாக நாட்டிலுள்ள தொழிற்சாலைகளை பார்வையிடும்போது அங்குள்ள அதிகாரிகளை பாராட்டுவதை கிம் ஜாங்-உன் வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில், ஒரு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமான பணி 70 சதவீதமே நிறைவடைந்துள்ளதை கண்டு கிம் 'பேச்சற்று' போனதாகவும், மேலும் ஓட்டல் ஒன்றில் 'மீன் தொட்டிகளைவிட மோசமான நிலையிலுள்ள' குளியல் தொட்டிகளை கண்டு அவர் 'அதிர்ச்சியடைந்ததாகவும்' அந்நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அணுஆயுதங்களை உருவாக்குவதற்கு அடுத்து, தனது பொருளாதார வளர்ச்சிக்கு வட கொரியா முன்னுரிமை அளித்து வருகிறது.
சீனாவின் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள வட ஹம்யோங் மாகாணத்திலுள்ள நான்கு இடங்களை இந்த ஆய்வுப்பணியின்போது கிம் ஜாங்-உன் பார்வையிட்டார்.
குறிப்பாக ஓரஞ்சான் மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதை அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், யோம்புஞ்சின் நகரத்திலுள்ள ஒரு ஓட்டலின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகளாகியுள்ள நிலையில், அதன் மேற்பூச்சு வேலைகள்கூட இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
அதேபோன்று, ஆன்போ சுற்றுலா விடுதியை பார்வையிட்ட அவர், அங்குள்ள குளியல் தொட்டிகள், "அழுக்காகவும், இருட்டாகவும், சுகாதாரமற்ற" நிலையிலும் உள்ளதாக குறிப்பிட்டதாக கேசிஎன்ஏ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
அதற்கடுத்து, அங்குள்ள பை தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்ட கிம் ஜாங்-உன், மாகாண அரசு "ஒழுங்கற்ற முறையில்" இயங்கி வருவதாக கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்