தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் வழிகள் என்னென்ன?
தாய்லாந்தில் குகையில் சிக்கி உள்ள 12 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரை மீட்கும் பணியில் ஆறு நாடுகளும், அந்நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்குளிப்பவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

முதல் முறையாக கேட்கப்பட்ட குரல்
தாய்லாந்து குகையில் கடந்த ஒன்பது நாட்களாக சிக்கித் தவிக்கும் தாய்லாந்தை சேர்ந்த 12 இளம் கால்பந்து வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் ஒருவரான குரல் முதல் முறையாக கேட்கப்பட்டுள்ளதாக பிரிட்டனை சேர்ந்த குகை மீட்பு வீரரான ஜான் வொலந்தன் கூறியுள்ளார்.
குகையிலுள்ள சிறுவர்களிடம், "நீங்கள் எத்தனை பேர் உள்ளீர்கள்?" என்று கேட்டதற்கு, "பதின் மூன்று பேர்" என்று பதிலளித்தனர்.
அதாவது, இதன் மூலம் கடந்த ஒன்பது நாட்களாக குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சரி, இந்த குகையில் சிக்கியுள்ள 12 வீரர்களையும் அவர்களது பயிற்சியாளரையும் எந்தெந்த வழிகளில் மீட்கலாம்?
இரண்டுவழிகள் இருக்கிறது என்கிறாகள் மீட்புத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள். அதாவது, முக்குளித்தல் (Diving), துளையிடுதல் முறை (Drilling) ஆகிய வழிகளில் குகையில் சிக்கி உள்ளவர்களை மீட்கலாம்.
முக்குளித்தல்
அமெரிக்க குகை மீட்பு ஆணையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அன்மர் மிர்ஸா, "முக்குளித்தல் முறையில் அந்த குகையில் சிக்கி உள்ளவர்களை விரைவில் மீட்டுவிடலாம். ஆனால், அது ஆபாத்தானதும் கூட" என்கிறார்.
தாய்லாந்து கப்பற்படையை சேர்ந்த முக்குளிப்பவர்கள், பிரிட்டன் குகை சிக்கியவர்களை மீட்பதில் நிபுணத்துவம் பெற்ற மூன்று பேர் மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் என பலர் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இவர்கள் மட்டுமல்லாமல், சீனா, மியான்மர், லாவோஸ் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மீட்பு பணியில் பங்கெடுத்துள்ளார்கள்.

பட மூலாதாரம், AFP/ROYAL THAI NAVY
மிகவும் திறமைவாய்ந்த தொழில்முறை முக்குளிப்பவர்களுக்கு, குகையில் சிக்கி உள்ளவர்களை நெருங்க இன்னும் பல மணி நேரம் தேவை. இதற்கிடையே அந்த குகையில் உள்ள நீரையும் வெளியேற்ற வேண்டும்.
இந்த முறை மிகவும் ஆபத்தானது மற்றும் அபாயகரமானது என்கிரார் சர்வதேச ஆழ்கடல் குகை மீட்பு அமைப்பை சேர்ந்த எட் சோரின்சன். மேலும் அவர், "இந்த முறையை கடைசி வாய்ப்பாகதான் பயன்படுத்த வேண்டும்" என்கிறார்.

பட மூலாதாரம், AFP/ROYAL THAI NAVY
அடர்த்தியான இருட்டில் சிக்கி உள்ளவர்கள் பயத்தில் தங்களை தாங்களே மாய்த்துக் கொள்ளவும் சில சமயம் முக்குளித்து மீட்பவர்களை கொல்லவும் வாய்ப்பு உள்ளது என்கிறார் எட்.
துளையிடும் முறை
இதுபோன்று குகையில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் இன்னொரு வழி, 'துளையிடுதல்'. அதாவது குகையை துளையிட்டு தண்ணீரை வெளியே இறைத்து அவர்களை மீட்கலாம்.

பட மூலாதாரம், EPA
ஆனால், இதற்கும் அதிக நேரம் பிடிக்கும். துளையிடும் இயந்திரங்களை குகையில் மேல் பொருத்த அதற்கான கட்டுமான அமைப்பை முதலில் ஏற்படுத்த வேண்டும்.
அமெரிக்க குகை மீட்பு ஆணையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அன்மர் மிர்ஸா, "இது முறை மேலோட்டமாக சுலபமானது போல தோன்றினாலும், உண்மையில் இது மிகவும் கடினமான ஒரு வழி" என்கிறார்.
"நாம் குகையில் துளையிடுவதற்கு முன்பு, அந்த குகை குறித்து முழுமையான புரிதல் வேண்டும். அந்த குகை குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறாக இல்லாமல், துளையிட தொடங்குவோமானால், தவறான இடத்தில் துளையிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது" என்கிறார் மிர்ஸா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













