‘ஹலோ‘, ‘பை பை‘ என்று மனிதரைப் போல பேசும் திமிங்கலம்

    • எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
    • பதவி, பிபிசி நியூஸ்

"ஹலோ", "பைபை" என்று மனிதர் போல பேசுகின்ற இந்த 'கில்லர்' திமிங்கலம்தான் மனித சொற்களை பேசுகின்ற இந்த இனத்தை சேர்ந்த முதல் விலங்கு என்று நம்பப்படுகிறது.

'ஹலோ', 'பை பை' என்று மனிதரைபோல திமிங்கலம் பேசும் புதுமை

பட மூலாதாரம், MARINELAND

பிரான்ஸிலுள்ள கடல்வாழ் உயிரினப் பூங்காவில், பயிற்சி அளிப்பவர் பேசியதைபோல, சில சொற்களை இந்த கில்லர் பெண் திமிங்கலம் பேசியுள்ளது.

அமி என்ற பெயரையும், ஒன், ட்டூ, திரி என்று எண்ணுவதையும் இந்த திமிலங்கமும் சொல்லி ஆச்சரியமூட்டியுள்ளது. இதனால், வெறுப்பை வெளிப்படுத்தும் அதிருப்தி குரலையும் எழுப்ப முடியும்.

மனிதருக்கு அப்பாற்பட்டு மனித சொற்களை பேசுகின்ற சில உயிரினங்களில், கேட்பதை மட்டுமே வைத்து, புதிய ஒலியை உருவாக்க கற்றுக்கொள்ளும் கடல்வாழ் உயிரினமாக இந்த வகை திமிங்கலம் விளங்குகிறது.

"பாலூட்டிகளில் இது மிகவும் அரிது" என்று இந்த ஆய்வை நடத்திய இணை ஆய்வாளரான புனித ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜோசப் கால் தெரிவித்துள்ளார்.

"மனிதர் இந்த திறமையில் மிகவும் சிறந்தவர்கள்...பாலூட்டும் விலங்குகளில் இதனை சிறப்பாக செய்யக்கூடியது கடல்வாழ் பாலூட்டிகள் என்பது சுவாரஸ்யமான விடயம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கில்லர் திமிங்கலங்கள்

பட மூலாதாரம், VALERY HACHE/AFP/Getty Images

பிறர் பேசுவதை கேட்டு, கொல்லும் திமிங்கலம் என்று அழைக்கப்படும் திமிங்கலங்களில் ஒரு வகையானது பேசுவதற்கு கற்றுக்கொள்ள முடியுமா? என்பதைக் கண்டறிய இந்த ஆய்வாளர்கள் விரும்பினர்.

இதற்காக பிரான்ஸில் அன்டிபஸிலுள்ள கடல்வாழ் உயிரினப் பூங்காவில் வாழும் "விக்கி" என்ற பெயருடைய பெண் திமிங்கலத்தை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் மூச்சுவிடும் பகுதி வழியாக மனித சொற்களை பேசுவதற்கு அதற்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. கீச்சொலி, வலுவான விசில் சத்தம், வெறுப்பை குறிக்கும் கண்டன குரல்களும் ஹலோ, அமி என்ற சொற்களும், ஒன், ட்டூ, த்ரி எண்ணுவது போன்ற சொற்களும் ஒலிப்பதிவு மூலம் கேட்கும் விதத்தில் ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

கில்லர் திமிங்கலத்தின் "மொழி வழக்கு"

தங்களுக்கே உரித்தான மொழி வழக்கோடு குழுக்களாக இந்த கில்லர் திமிங்கலங்கள் வாழ்ந்து வருகின்றன.

கடலில் அதனை போன்ற விலங்கின உறுப்பினர்களை போல இவற்றாலும் பேச முடியும் என்று தெரிய வந்துள்ளது. ஆனால், இதனை இன்னும் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டியுள்ளது.

கில்லர் திமிங்கலங்கள்

பட மூலாதாரம், Getty Images

"நாங்கள் ஆய்வு மேற்கொண்ட, கடல்வாழ் உயிரினப் பூங்காவில் வாழும் கில்லர் திமிங்கலங்கள் பிற கில்லர் திமிங்கலங்கள் எழுப்பும் ஒலியை கற்றுக்கொள்ளும் திறமையுடையது என்பதை அறிந்தோம்" என்று டாக்டர் கால் கூறினார்.

"எனவே, கடல்வாழ் உயிரினங்களில் பிற கில்லர் திமிங்கலங்கள் எழுப்பும் ஒலியை இந்த வகை கில்லர் திமிங்கலங்கள் எவ்வாறு கற்றுக்கொள்கின்றன என்பதற்கு முழுமையான விளக்கமான முடிவுகளையும், அவை எவ்வாறு அவற்றின் மொழி வழக்கை வளர்க்கின்றன என்பதையும் இந்த ஆய்வு முழுமையாக வழங்கவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

சொல்வதை கேட்டு திரும்ப சொல்வது என்பது மனிதர் பேசும் மொழியின் முத்திரையாக உள்ளது. இருப்பினும், பிற விலங்குகள் இந்த திறமையை கொண்டிருப்பது மிகவும் அரிதானதாகும்.

பிற உயிரினங்கள் மற்றும் சக உயிரினங்களின் ஒலிகளை அப்படியே ஒலிக்க செய்யும் சில பாலூட்டிகளில் டால்பின்கள் மற்றும் பெலுகா திமிங்கலங்களும் (வெள்ளை திமிங்கலங்கள்) உள்ளன.

பயிற்சியாளர்

பட மூலாதாரம், VALERY HACHE/AFP/Getty Images

கிளிகளை போல சில பறவைகள் மனிதரின் சொற்களை சொல்லும் திறமை கொண்டவை. சில காக்கை குடும்ப பறவைகளுக்கும் இந்த திறமை உள்ளது.

"விக்கி என்கிற இந்த கில்லர் திமிங்கலத்தோடு அடிப்படை "உரையாடல்கள்" நிகழ்த்துவது ஒரு நாள் நனவாகலாம்" என்று இணை ஆய்வாளரான ஸ்பெயினின் மாட்ரிட்டிலுள்ள கம்புளுடென்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜோஸ் அப்ராம்சன் தெரிவித்துள்ளார்.

"ஆம், என்ன விஷயங்கள் என்று அடையாள குறிப்புக்கள், விளக்கங்கள் நீங்கள் வைத்திருந்தால் இது நடைபெறலாம்" என்று தெரிவிக்கும் அவர் "இந்தப் பொருளை எனக்கு கொண்டு வா, அல்லது இந்தப் பொருளை அதற்கு மேலேயோ, கீழேயே வை, போன்ற சொற்டொடர்களை அமெரிக்க சைகை மொழியை பயன்படுத்தி, சாம்பல் நிற கிளி மற்றும் டால்பின்களுக்கு கற்பிக்கும் ஆய்வு முன்னதாக நடத்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

இருப்பினும், விலங்குகளிடம் மனிதரின் கருத்துக்களை புகுத்துவது தொடர்பாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

"விலங்குகளுக்கு மனித மொழியை கற்றுக் கொடுப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு விலங்கும் அதனுடைய சுற்றுச்சூழலில் தொடர்பாடல் செய்யும் இயற்கையான வழியை புரிந்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்வதன் மூலம் நாம் அதிகப் பயன் பெறலாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்டையில் கெட்டிக்கார விலங்கு

தன்னுடைய மூச்சுவிடும் பகுதியை நீருக்கு மேலே காற்று வெளியில் வைத்துக் கொண்டு ஓரளவு தண்ணீரில் மூழ்கியபடி "விக்கி" என்கிற இந்த கில்லர் திமிங்கலம் ஒலிகளை எழுப்பியுள்ளது.

கில்லர் திமிங்கலங்கள்

பட மூலாதாரம், Getty Images

தண்ணீருக்குள் இருந்தபோது எழுப்பிய ஒலி வித்தியாசமானதாக இருக்கலாம். இது வெறுமனே ஒரேயொரு திமிங்கலமாக இருப்பதால், கடல்வாழ் உயிரினங்களில் இது போன்று அதிக கில்லர் திமிங்கலங்கள் இந்த திறமையை கொண்டுள்ளனவா என்று ஆய்வாளர்கள் உறுதியாக கூறமுடியாமல் உள்ளனர்.

கில்லர் திமிங்கலங்கள் அல்லது அர்காஸ் எனப்படும் திமிங்கலங்கள், டால்பின்களில் மிகவும் பெரியவை. உலகில் மிகவும் சக்தி வாய்ந்த வேட்டையாடும் உயிரினம் இதுவாகும்.

சீல்கள், கடல் சிங்கங்கள் போன்ற கடல்வாழ் பாலூட்டிகளையும், ஏன், திமிங்கலங்களையும் கூட இந்த கில்லர் திமிங்கலங்கள் சாப்பிடுகின்றன. பனிப் பகுதியில் இருக்கும் சீல்களை கூட பிடித்து கொள்ளும் திறமை கொண்டவையாக இவை அறியப்படுகின்றன.

இந்த ஆய்வின் முடிவுகள் "புரொசீடிங்ஸ் ஆப் த ராயல் சோசைட்டி ஆப் லண்டன் பி" என்கிற சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

திமிங்கலம் குட்டிப்போடும் அரிய காட்சி

காணொளிக் குறிப்பு, திமிங்கலம் குட்டிப்போடும் அரிய காட்சி

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :