அந்தரத்தில் அதிர்ந்த மலேசிய விமானம் அவசரமாக தரையிறக்கம்

அந்தரத்தில் அதிர்ந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்

பட மூலாதாரம், Reuters

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் பறந்துகொண்டிருந்தபோது அதிர்ந்ததால் மத்திய ஆஸ்திரேலியாவுக்கு வலுக்கட்டாயமாக திருப்பிவிடப்பட்டது.

எம்எச்122 என்ற அந்த விமானம் வியாழக்கிழமையன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரை நோக்கி பறந்து கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

224 பேர் பயணித்த அந்த விமானமானது ஆஸ்திரேலியாவின் அலிஸ் ஸ்பிரிங்ஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

விமானம் அதிர்வுற்றதுடன், அதிக அளவிலான இரைச்சலையும் ஏற்படுத்தியாக அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் தெரிவித்தனர்.

"தொழில்நுட்பம் சார்ந்த காரணத்தினால்" விமானம் திருப்பிவிடப்பட்டதாக தனது அறிக்கையில் மலேசியன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஆனால், பிரச்சனை குறித்த மேலதிக தகவல்களை வழங்கவில்லை.

நான்கு மணிநேரத்திற்கு இதுபோன்ற பிரச்சனையுடன் விமானம் பறந்ததாக அவ்விமானத்தில் பயணித்த சஞ்சீவ் பாண்டவ் என்ற பயணி கூறியுள்ளார்.

அந்தரத்தில் அதிர்ந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்

பட மூலாதாரம், SANJEEV PANDEY

"விமானம் ஆடியது, அதிர்வுற்றது மற்றும் இரைச்சல் அதிகமாகிக்கொண்டே இருந்தது" என்று பிபிசியிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

"விமானத்தில் பயணித்த சிலர் பிரார்த்தனை செய்துக் கொண்டும், இன்னும் சிலர் கண்ணீர் வடிந்துக் கொண்டுமிருந்த அந்த தருணம் மிகவும் மோசமானது" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

"பதட்டமாக மற்றும் அச்சமடைந்த" நிலையில் காணப்பட்ட பயணிகளுக்கு விமான ஊழியர்கள் அவசர நடைமுறைகளை விளக்கினார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த விமானத்தில் பயணித்த மற்றொரு பயணி தனது எதிர்வினையை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :