You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேட்டலன் தலைவரை கைது செய்ய ஆணை பிறப்பித்தது ஸ்பெயின்: அடுத்தது என்ன?
பெல்ஜியத்தில் உள்ள பதவி நீக்கம் செய்யப்பட்ட கேட்டலோனிய முன்னாள் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் அவரின் நான்கு கூட்டாளிகளுக்கு ஸ்பெயின் நீதிபதி ஒருவர் ஐரோப்பிய ஒன்றிய அளவிலான கைதாணையைப் பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே கேட்டலோனிய பிராந்திய அரசின் முன்னாள் உறுப்பினர்கள் ஒன்பது பேர் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை, இந்த ஐந்து பேரும் விசாரணைக்காக மேட்ரிட் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால், இந்த கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கேட்டலோனிய முன்னாள் அமைச்சர் ஒருவர் 50,000 யூரோ பிணை தொகை பெறப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அரசுக்கு எதிராக கலகம் செய்தல், தேசத்துரோகம் மற்றும் மக்களின் பணத்தை கேட்டலன் சுதந்திரம் பெறுவதற்காக தவறாக பயன்படுத்தியது ஆகிய குற்றங்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
முறையான விசாரணை நடக்கும் என்று உறுதி கிடைக்கும் வரை நான் ஸ்பெயின் திரும்பமாட்டேன் என்று பூஜ்டிமோன் கூறியுள்ளார்.
கைதாணையைப் பெல்ஜியம் ஆய்வு செய்யும் என அந்நாட்டு அரசு வழக்கறிஞரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளர்.
சுதந்திரத்தை அறிவிக்கும் வரை, தன்னாட்சி பிரந்தியமான கேட்டலோனியாவின் தலைவராக பூஜ்டிமோன் இருந்தார். பூஜ்டிமோனை ஸ்பெயின் மத்திய அரசு பதவி நீக்கம் செய்தபோதிலும், புதிதாக பிரகடனப்படுத்தப்பட்ட கேட்டலோனியா குடியரசின் தலைவராக தான் தொடர்ந்து நீடிப்பதாக பூஜ்டிமோன் கூறுகிறார்.
தனி நாடு குறித்த வழக்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிட பூஜ்டிமோனும் அவரது சகாக்களும் பெல்ஜியம் சென்றுள்ளனர்.
பெல்ஜிய நீதித்துறை அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதாக வெள்ளிக்கிழமை பெல்ஜியம் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பேட்டியில் பூஜ்டிமோன் கூறியுள்ளார்.
மேலும், அடுத்த மாதம் நடக்க உள்ள கேட்டலோனியா பிராந்திய நாடாளுமன்றத் தேர்தலிலும் பேட்டியிட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெல்ஜியம் அரசு வழக்கறிஞர்களுக்கு இந்த கைதாணை அனுப்பப்பட்டுள்ளது. ஆவணங்கள் சரியாக உள்ளதா என 24 மணி நேரத்தில் அவர்கள் சரிபார்க்க வேண்டும்.
அதன்பிறகு இந்த கைதாணையை நீதிபதிக்கு அனுப்புவார்கள். பூஜ்டிமோன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்ய வேண்டுமா என்பதை நீதிபதி முடிவு செய்வார்.
கைது செய்யப்பட்ட பின்னர், குற்றம்சாட்டப்பவர்களை அதிகபட்சம் 60 நாட்களுக்குள் ஸ்பெயினிடம் பெல்ஜியம் ஒப்படைக்க வேண்டும். குற்றம்சாட்டப்பவர்கள் எவ்வித சட்ட ஆட்சேபனைகளும் தெரிவிக்கவில்லை என்றால், விரைவிலே ஸ்பெயின் அரசிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்