விளையாட்டு அரங்கினுள் பார்வையாளர்களாக பெண்கள்: சௌதி அரசு உத்தரவு

பட மூலாதாரம், AFP
2018ஆம் ஆண்டு முதல், முதல்முறையாக, விளையாட்டு அரங்குகளில் பெண்கள் பார்வையாளர்களாக அமர, சௌதி அரேபிய அரசு அனுமதித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரீயாட், ஜெட்டா மற்றும் டமாம் ஆகிய நகரங்களில் உள்ள அரங்கினுள் குடும்பமாக அவர்களால் நுழைய முடியும்.
ஓட்டுநர் தடை நீக்கப்பட்ட பிறகு, சவுதி பெண்களுக்கு அதிக சுதந்திரம் அளிக்கும் வழியாக இந்த நகர்வு உள்ளது.
சௌதியின் இளவரசரான முகமது பின் சல்மான், பொருளாதாரத்தை உயர்த்தவும், சௌதி சமூகத்தை நவீனமாக்கும் வகையில் சென்றுகொண்டு இருக்கிறார்.
சௌதி அரேபியாவின் விளையாட்டுத்துறை அதிகாரம், இந்த மூன்று அரங்கங்களிலும், `2018இன் துவக்கம் முதல், குடும்பங்களை அனுமதிக்க தயாராகும் வகையில்` ஆயத்தப்பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ளது.
உணவகங்கள், தேநீர் விடுதிகள் மற்றும் விளையாட்டை பார்க்க பெரிய திரை உள்ளிட்டவை அரங்கினுள் வைக்கப்பட உள்ளது என அது தெரிவித்துள்ளது. தற்போது வரை, இந்த அரங்கங்கள் ஆண்கள் மட்டுமே செல்லக்கூடிய இடங்களாக உள்ளன.
மாற்றங்களை புரிந்துகொள்ளுதல்
`விஷன் 2030` என்ற பெயரின் கீழ், நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை கொண்டு வருவதற்காக இளவரசர் முகமது அறிவித்த பல சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன.

பட மூலாதாரம், AFP
வரும் ஜூன் மாதம் முதல், பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்படுகின்றனர் என்று, கடந்த மாதம் அரசு ஆணை பிறப்பித்தது. மீண்டும் இசைநிகழ்ச்சிகள் நடக்க உள்ளதோடு, திரைப்படங்களும் மீண்டும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை பேசிய இளவரசர் முகமது, `நவீன இஸ்லாமே` தனது நாட்டை நவீனமயமாக்க கடவுச்சாவி என்றார்.
70 சதவிகித சவுதி மக்கள் 30 வயதுகுட்பட்டவர்கள் என்றும், அவர்கள், `தங்களின் மதம், சகிப்புத்தன்மை என குறிப்பிடுதையே வாழ்க்கையாக` வேண்டும் என விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய நாளன்று, ரியாட்டில் உள்ள அரசர் ஃபாட் அரங்கில், நடந்த நிகழ்ச்சியில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இதற்காக, சமூக வலைதளங்களில், பல பழமைவாதிகள் மூலம், அரசு பின்னடைவை சந்தித்தது.
சமீபத்திய மாற்றங்களையும் தாண்டி, வஹாபிசம் என்ற பெயரில், சுன்னி முஸ்லிம்கள் முறைப்படி, பெண்கள் பல தடைகளை சந்திக்கின்றனர்.
பெண்கள் மிகவும் கடுமையான ஆடைக்கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். தங்களுக்கு சம்மந்தமில்லாத ஆண்களோடு பழக கூடாது. பயணிக்க, வேலைபார்க்க, உடல் நலத்தை பரிசோதிக்க வேண்டும் என்றால், தங்களுக்கு சம்மந்தப்பட்ட ஒரு ஆணின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதம் தேவை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












