அமெரிக்காவில் ஐ.எஸ் நடத்த இருந்த தாக்குதல் முறியடிப்பு: ஓராண்டு கழித்து வெளியாகும் செய்தி

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கம் மற்றும் ரங்க ரயில் அமைப்பு மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜிஹாதி தாக்குதல், ரகசியப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு எஃப்.பி.ஐ அதிகாரியின் உதவியுடன் முறியடிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஐ.எஸ். அமைப்பின் பெயரால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக, அமெரிக்காவில் வசிக்கும் கனடா நாட்டைச் சேர்ந்த அப்துல்ரஹ்மான் எல் பஹ்னாசாவி, 19, பாகிஸ்தானில் வசிக்கும் அமெரிக்கரான தல்ஹா ஹாரூன் (19), மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ரஸ்ஸல் சாலிக், 37, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்களில் ஒருவர் "அடுத்த செப்டம்பர் 11'' தாக்குதலை நடத்த விரும்பியதாக தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. அரட்டையடிக்க பயன்படும் செயலிகளைப் பயன்படுத்தி அந்த மூவரும் 2016-ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் போல நடித்து அவர்களிடம் தொடர்பு கொண்ட ஒரு எஃப்.பி.ஐ அதிகாரியால் இந்தத் திட்டம் கடந்த ஆண்டே முறியடிக்கப்பட்டபோதிலும், இந்த விவரங்கள் கடந்த வெள்ளியன்றுதான் வெளியிடப்பட்டன.

அப்துல்ரஹ்மான் எல் பஹ்னாசாவி கடந்த மே 2016-லும், ஹாரூன் செப்டெம்பர் 2016-லும், சாலிக் ஏப்ரல் 2017-லும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட ஹாரூன் மற்றும் பிலிப்பைன்ஸில் கைது செய்யப்பட்ட சாலிக் ஆகிய இருவரும் இன்னும் அமெரிக்கா அழைத்து வரப்படவில்லை.

2010-இல் டைம்ஸ் சதுக்கத்தில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பெட்ரோல் மற்றும் சில வேதிப்பொருட்களை வைத்து ஃபைசல் ஷாசாத் என்னும் நபர் வைத்த வெடிபொருள் செயல்படாமல் போனதால் அவரின் திட்டம் தோல்வியில் முடிந்தது. பின்பு கைது செய்யப்பட்ட அவர் தற்போது சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :