ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான தாக்குதலை தொடங்கியது பாகிஸ்தான்
ஆப்கன் எல்லையில் வட மேற்கு பகுதியில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிற்கு எதிரான தாக்குதலை தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தானுக்குள் தீவிரவாதிகள் காலூன்றியுள்ள போதிலும் அவர்களின் செல்வாக்கு மேலும் அதிகரிப்பதை தடுக்க வேண்டும் என செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வான்வழி படைகளின் ஆதரவு பெற்ற இந்த "கைபர் 4" நடவடிக்கை கைபர் ஏஜென்சியில் உள்ள மலைப் பிரதேசமான ராஜ்கல் பள்ளத்தாக்கில் நடத்தப்படும்.
இதற்கு முன்னர் தங்கள் பிராந்தியத்தில் ஐ.எஸ் அமைப்பினர் இல்லையென பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.
எதுவாயினும் "டாயிஷ்" என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்துவது பாகிஸ்தானிற்கு எச்சரிக்கையை ஏற்படுத்தியது; கடந்த இரண்டு வருடங்களில் பாகிஸ்தானில் நடந்த பல தாக்குதல்களுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றது.
"இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் பெருகி வருவதால் அது ராஜ்கல் பள்ளத்தாக்கின் வழியாக பாகிஸ்தானிற்குள் நுழைவதை தடுக்க வேண்டியது அவசியம்." என லெஃப்டினெட் ஜெனிரல் ஆசிஃப் கஃபூர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்:
ஆப்கன் பகுதியில் உள்ள ஐஎஸ் அமைப்பினர் பெரும்பாலும் முன்னாள் ஆப்கன் மற்றும் பாகிஸ்தானிய தாலிபன் அமைப்பைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தானில் ஐஎஸ் அமைப்பினரின் தாக்கம் இல்லை என்ற அரசின் நிலைப்பாட்டை ஆசிஃப் கஃபூர் மீண்டும் வலியுறுத்தினார்
"அந்த அமைப்பில் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பு இல்லை என்றும் அவர்களை நாட்டில் செயல்பட அனுமதிக்கக் கூடாது" என்றும் அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் வலுவாக இருக்கும் ஐ.எஸ் அமைப்பினரை பற்றி பேசிய அவர் அந்த அமைப்பு வலுவடைந்து வருகிறது. ஆனால் மத்திய கிழக்கில் உள்ள அளவிற்கு இல்லை என தெரிவித்தார் அவர்.

இந்த நடவடிக்கை முதலில் ராஜ்கல் பள்ளத்தாக்கு அருகில் இருக்கும் பகுதியை பாதுகாக்கும் பின்பு பிற பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்படும்.
பாகிஸ்தானில் சமீபத்தில் நடத்தப்பட்ட பல தாக்குதலில் தொடர்புடைய "பயங்கரவாத" அமைப்புகளுக்கு எல்லைப்பகுதியின் மறு புறத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ரஜ்கல் பள்ளத்தாக்கு மற்றும் கைபர் ஏஜென்சி ஆகிய இரண்டும் பதற்றம் நிறைந்த கூட்டாட்சி நிர்வாகம் கொண்ட பழங்குடி பகுதிகளை சார்ந்தது.
ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை ஐ.எஸ் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் முதல் தாக்குதல் நடத்திய போதிலிருந்து அங்கு ஐ.எஸ் அமைப்பை வலுப்படுத்த விரும்புகிறது.
அந்த நேரத்தில் தங்களின் "கோரசான்"(ஆப்கானிஸ்தானின் புராண பெயர்) கிளையை அண்டை பகுதிகளில் அந்த அமைப்பு விரிவுபடுத்தியது.
அரபு பகுதிகளை தாண்டி ஐ.எஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக விரிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












