'இன்னொரு ரசாயன தாக்குதல் நடந்தால் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்' சிரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
சிரியாவில் இன்னொரு ரசாயன தாக்குதல் நடக்க சாத்தியமான ஏற்பாடுகள் நடந்து வருவதை தாங்கள் இனம் கண்டு கொண்டதாக கூறியுள்ள அமெரிக்கா, இது குறித்து சிரிய அரசுக்கு கடுமையான எச்சரிக்கையொன்றை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Image copyrightREUTERS
ஏப்ரல் மாதத்தில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் ராசயன தாக்குதலுக்கு முன்பு இருந்த செயல்பாடுகள் போல தற்போதும் சிரியாவில் செயல்பாடுகள் நிலவுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் நடந்த தாக்குதலில் டஜன்கணக்கானோர் உயிரிழந்தது, சிரியாவின் விமானத் தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட அமெரிக்க அதிபர் டிரம்பை தூண்டியது.
மீண்டும் இது போன்ற தாக்குதல் நடந்தால், சிரிய அரசு மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்று சிரியா அதிபர் பஷர் அல்-அசத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரித்தது.
பஷர் அல்-அசத்தின் ஆட்சிக்காலத்தில் இன்னொரு ரசாயன ஆயுத தாக்குதல் நடந்தால், அது மிகப்பெரிய அளவில் வெகுஜன மக்கள் கொலை செய்யப்படுவதாக அமையும் என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Image copyrightGETTY IMAGES/US NAVY
மேலும், ''முன்னரே நாங்கள் தெரிவித்திருந்தபடி இராக் மற்றும் சிரியாவில் இருந்து இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினரை அகற்ற, சிரியாவில் அமெரிக்க ராணுவம் முகாமிட்டுள்ளது. ஆனால், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பஷர் அல்-அசத் மீண்டுமொரு பெரும் அளவிலான கொலை தாக்குதலில் ஈடுபட்டால், அவரும், அவரது ராணுவமும் இதற்கு பெரும் விலை கொடுக்க நேரிடும்'' என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள கான் ஷேக்கோன் நகரில் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நச்சுவாயு தாக்குதலில் ஏரளாமான குழந்தைகள் உள்பட பல டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












