பயங்கரவாதிகளுக்கு மத ரீதியான இறுதி சடங்கு நடத்த முஸ்லீம் தலைவர்கள் எதிர்ப்பு
லண்டனில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பிரிட்டனை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட முஸ்லீம் தலைவர்கள், குற்றம் புரிந்து உயிரிழந்தவர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி இறுதி சடங்கு நடத்ததாங்கள் மறுப்பு தெரிவிக்கப் போவதாக தெரிவித்தனர்.

பட மூலாதாரம், EPA
மான்செஸ்டர் அரீனா இசைக் கச்சேரிக்கு பிறகு நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னரும், உயிரிழந்த குற்றம் புரிந்தவர்கள் தொடர்பாக இதே போன்ற நிலைப்பாட்டை அந்நகர மசூதிகள் எடுத்தன.
இவ்வகையான நிலைப்பாடு பயங்கரவாத எண்ணம் கொண்டவர்களை ஊக்கம் இழக்க செய்யுமா?
அண்மையில், லண்டன் பிரிட்ஜ் மற்றும் பரோ மார்க்கெட்டில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட தாக்குதல்தாரிகள் தாங்கள் இஸ்லாமின் பெயரால் இச்செயலை செய்ததாக அறிவித்தனர்.
ஆனால், இந்த கூற்று பல முஸ்லீம்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
''மன்னிக்க முடியாத செயல்கள்'' என்றும், ''இஸ்லாம் மதத்தின் உயர்ந்த போதனைகளுக்கு முற்றிலும் முரணானவர்கள்'' என்றும் பயங்கரவாதிகளை வர்ணித்து சில நாட்களுக்கு முன்பு, கடும் சொற்களுடன்கூடிய அறிக்கையொன்றை மதத்தலைவர்கள் வெளியிட்டனர்.
குறிப்பாக புனித ரமலான் மாதத்தில் இது போன்ற தாக்குதலை தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம் , தாக்குதல்தாரிகள் எந்தளவு தவறாக வழி நடத்தப்பட்டுள்ளார்கள் என்றும், இஸ்லாம் மதம் குறித்த நம்பிக்கை மற்றும் மதிப்பிலிருந்து எவ்வளவு தூரம் இவர்கள் விலகி சென்றுள்ளார்கள் என தெரிகிறது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பயங்கரவாதிகளுக்கு மேலும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்கள், குற்றம் புரிந்தவர்களுக்கு பாரம்பரிய இஸ்லாமிய முறைப்படி இறுதி சடங்கு நடத்தப் போவதில்லை என்றும், இதனை உதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் இவ்வாறு செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான இஸ்லாமிய அறிஞரும், மனநல மருத்துவருமான டாக்டர் அசீம் யூசுஃப் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ''உயிரிழந்த நபரின் இறுதி சடங்கில் அதிக அளவு மக்கள் இருப்பது, அவர்களுக்கு பலனளிக்கும். பலரும் அவர்களின் ஆன்மாவுக்கு வேண்டுதல் நடத்துவது அவர்களுக்கு பலனளிக்கும்'' என்று தெரிவித்தார்.
இதனை செய்யாத சூழலில், அவர்களை அச்சுறுத்துவதாக இது அமையும். உயிரிழந்தவருக்கு மன்னிப்பு வழங்கும் விதத்தில் நான் வழிபாடு நடத்தப்போவதில்லை என்று கூறுவதாகவே இது அமைகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தீவிரவாதத்துக்கு எதிராக பிரச்சாரம் நடத்தி வரும் அஹ்மத் பட்டேல் தனது உறவினரும், 2005 லண்டன் குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட நான்கு தற்கொலைப்படை குண்டுதாரிகளில் ஒருவருமான முஹமத் சித்திக் கானின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவில்லை.
''நான் அவரது இறுதிச் சடங்குக்கு செல்லவில்லை'' என்று தெரிவித்த முஹமத் சித்திக் கான், ''அவர் எங்கு புதைக்கப்பட்டார் என்று கூட எனக்குத் தெரியாது. அதைப்பற்றி எனக்கு கவலையும் இல்லை'' என்று மேலும் குறிப்பிட்டார்.
இஸ்லாமியர்களின் புனித மறையான குரானில் , வாளின் வசனம் என்றறியப்படும் வசனம் ஒன்றை இஸ்லாமியவாத பயங்கரவாதிகள், தங்களின் செயல்களை நியாயப்படுத்தும் வகையில் மேற்கோள் காட்டுவது வழக்கமாகும்.

பட மூலாதாரம், Getty Images
குறித்த அந்த குரான் வசனத்தில் , ''பிரதான மதங்களைப் பின்பற்றாத புற மதத்தவரை ( pagans) நீங்கள் எப்போது கண்டறிந்தாலும் நீங்கள் அவர்களை பிடிக்கவும், முற்றுகையிடவும் வேண்டும். ஆனால், தங்களின் செயல்களுக்கு அவர்கள் வருந்தினால், அவர்களை தங்கள் வழியில் செல்ல அனுமதிக்கலாம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வசனம் சிலரால் தவறால் புரிந்து கொள்ளப்பட்டதாக டாக்டர் யூசுஃப் தெரிவித்தார்.
இஸ்லாம் மதத்தின் பெயரால் தாங்கள் செயல்பட்டதாக லண்டன் தாக்குதல்தாரிகள் தெரிவித்திருப்பது இஸ்லாம் மதத்துக்கு எதிரான குற்றம் என்றும், மதத்துக்கு இழிவு தேடி தரும் செயல் என்றும் யூசுஃப் தெரிவித்தார்.

பட மூலாதாரம், EPA
''ஒருவரை கொல்வது மிகப் பெரிய பாவம். பலரை கொல்வதை பற்றி சொல்லவே தேவையில்லை'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
''மதத்தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவர், மதம் குறித்து தவறாக வழிநடத்தப்படும் முஸ்லீம்கள் இதை தாங்கள் செய்யும் ஒரு மதக்கடமையாக நினைத்தால், அது குறித்து புரிய வைப்பது அவர்கள் செய்யும் மதக்கடமையாகும்'' என்று யூசுஃப் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












