2.4 லட்சம் கார்களை திரும்பப்பெற தென் கொரியா அரசு உத்தரவு ; சிக்கலில் ஹுண்டாய் நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images
ஒருவர் ரகசியமாக கொடுத்த தகவலைத் தொடர்ந்து, கார் உற்பத்தி நிறுவனங்களான ஹுண்டாய் மற்றும் கியா மோட்டர்ஸ் ஆகியவற்றிடம் சுமார் 2.4 லட்சம் கார்களை திரும்பப்பெற தென் கொரிய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மற்ற 12 கார் மாடல்களைப் பாதித்தது போன்ற அதே பிரச்சனை இந்தக் கார்களிலும் ஏற்பட்டிருப்பதாக ஹூண்டாய் நிறுவன முன்னாள் ஊழியர் ஒருவர் கவலை வெளியிட்டிருந்தார்.
ஒரு நாட்டின் அரசாங்கம் வாகனங்களை கட்டாயமாக திரும்பப்பெற வேண்டும் என்று உத்தரவிடுவது இதுவே முதன்முறையாகும்.
வாகனங்களில் எவ்விதமான கோளாறுகள் இருந்தாலும் அது பாதுகாப்பை சமரசம் செய்து கொள்ளாது என்று கூறியுள்ள அந்நிறுவனங்கள், இந்த விவகாரத்தில் சுயமாக நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டன.
ஹுண்டாயின் இணை நிறுவனம்தான் கியா.

பட மூலாதாரம், KEN SHIMIZU
கார் உற்பத்தியாளர்கள் இந்த கோளாறுகளை மூடி மறைக்கும் வேலைகளில் ஈடுபட்டதற்கான சான்றுகள் உள்ளனவா என்பது குறித்து நாட்டின் வழக்கறிஞர்களிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
பாதிப்படைந்துள்ளதாக சொல்லப்படும் கார் மாடல்களில் ஹுண்டாய் ஐ30 ஹேட்ச்பேக், சோனாட்டா, ஜெனிசிஸ் மற்றும் கியாவின் மேஹாவி, கார்னிவல் ஆகிய மாடல்கள் அடங்கும்.
இந்த மாடல்கள் மற்றும் பிற மாடல் கார்களில், வெற்றிட குழாய்கள், எரிபொருள் குழாய்கள் மற்றும் பார்க்கிங் பிரேக் லைட் ஆகியவற்றில் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவைத்தவிர, பல குறையுள்ள பாகங்களும் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே என்ஜின் திடிரென நிற்கும் கோளாறு தொடர்பாக கடந்தமாதம் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சுமார் 1.5 மில்லியன் கார்களை மாற்றித்தர ஹுண்டாய் மற்றும் கியா நிறுவனம் முன் வந்திருந்த நிலையில், தற்போது இந்த 2.4 லட்சம் கார்களும் எண்ணிக்கையில் இணைந்துள்ளன.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












