அவதூறுக்கு எதிராக சட்டநடவடிக்கையில் இறங்கிய பிரான்ஸ் அதிபர் வேட்பாளர்
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் முன்னணியில் திகழும் இமானுவல் மக்ரோன், தனக்கு கரீபியனில் ரகசிய வங்கிக் கணக்குகள் இருப்பதாக இணையத்தில் வெளியான வதந்திகளை அடுத்து சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பாரிஸில் உள்ள அரசாங்க வழக்குத் தொடுனர்கள், புலனாய்வுகளை ஆரம்பித்துள்ளனர்.
ஞாயிறன்று நடக்கவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக நடந்த இறுதி தொலைக்காட்சி விவாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவான, மையவாதியான இவர் முன்னணியில் திகழ்ந்த நிலையில் இந்தச் செய்தி வந்துள்ளது.
அவரது தீவிர வலதுசாரி போட்டியாளரான மரைன் லு பென் இந்த விசயங்களை குறிப்பிட்டு விவாதத்தில் பேசியுள்ளார்.
அதற்கு, ''இது அவதூறு'' என்று இவர் பதிலளித்துள்ளார்.
இந்த தவறான தகவலை மீண்டும் முன்வைக்கும் எவரையும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்க தாம் தயங்க மாட்டோம் என்று அவரது சகா ஒருவர் வியாழனன்று ஏஎஃப்பி செய்தி சேவையிடம் கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை என்று மக்ரோன் தொலைக்காட்சிகளில் பேசியுள்ளார்.
வலதுசாரிகளின் இணைய தளங்களிலேயே இந்த வதந்திகள் உலாவியுள்ளன.













