You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
85 வயதில் இளவரசியான அழகிய விஞ்ஞானி!
- எழுதியவர், கீதா பாண்டே,
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்திய கலைஞரும், ஆர்வலருமான ஜஸ்மீன் பதேஜாவின் விருப்பம், புகைப்படக் கலைஞர் ஆவது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜாஸ்மீன் தனது பாட்டி இந்தர்ஜித்துடன் பேசிக் கொண்டிருந்தபோது, திரைப்பட கலைஞராகும் அவரது விருப்பத்தை தெரிந்து கொண்டார். இருவரும் இணைந்து தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொண்டர்கள். அதன் விளைவாக, எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களுக்கு 'இந்த்ரியும் நானும்' என்று ஜஸ்மீன் பெயரிட்டிருக்கிறார். 85 வயது இளைஞி, அட்டகாசமான உடைகளில் வலம் வரும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.
"இந்த திட்டம் எப்போது தொடங்கியது என்று எனக்குத் தெரியாது, அனேகமாக எனக்கு மூன்று வயதாக இருந்த போது தொடங்கியிருக்கலாம்."
"கூட்டுக் குடும்பமாக கொல்கொத்தாவில் வசித்து வந்தபோது, என் பாட்டி மதிய நேரத்தில் தூங்கமாட்டார். ஒரு டாக்டராக, நர்ஸாக, டீச்சராக, ஏன் பிரதமராக கூட தன்னால் வந்திருக்க முடியும் என்ற அவரது கனவுகளையும் கதைகளையும், கேட்டே எனது இளமைக்காலம் கழிந்தது. ஒவ்வொரு நாள் மதியமும் நான் ஒவ்வொரு கதாபாத்திரமாக மாறியிருப்பேன், பகல் கனவுகள் காண ஊக்குவிக்கப்பட்டேன்" என்று பிபிசியிடம் பேசிய ஜஸ்மீன் கூறினார்.
இந்திரஜித் கெளரின் கல்வி, இரண்டாம் உலகப்போரின் போது தடைப்பட்டது. பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவை ஜப்பான் தாக்கியபோது, மியான்மரில் பிறந்த இந்திரஜித், குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பித்து, தற்போது பாகிஸ்தானில் இருக்கும் லாகூருக்கு சென்றார். தன்னால் படிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், அவர் சோர்வடையாமல் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருப்பார்.
அவரை புகைப்படம் பிடிப்பது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. கேமரா முன் மிகவும் இயல்பாக இருப்பார் என்று ஜஸ்மின் சொல்கிறார்.
"நான் ஒரு நடிகையாகியிருக்கலாம்" என்று சில ஆண்டுகளுக்கு முன் அவர் சொன்னார். "சரி, நீ நடி, நான் படம் எடுக்கிறேன்" என்று சொல்லி பாட்டியை வைத்து பேத்தி எடுத்த புகைப்படம் இது.
"பிரபல நடிகை இந்த்ரி"
அதோடு, புகைப்படங்களுக்காக கதாபாத்திரங்களை தாங்களே உருவாக்கும் விளையாட்டும் தொடங்கியது.
"அலங்காரத்தில் இந்த்ரி என்ற நடிகை, தலை அலங்காரம், ஒப்பனை பல புது அபாயங்களை எதிர்கொண்டார்" என்று சொல்லும் ஜஸ்மீன், "இந்த்ரியை அழகாகக் காட்டத் தேவையில்லை என்பதில் நான் தெளிவாக இருந்தேன்".
கால மாற்றத்தில், நடிகை இந்த்ரி, அரசியல்வாதியாக, தேவதையாக, விஞ்ஞானியாக என பலவித கதாபாத்திரங்களாக உருமாறினார், புகைப்படங்களில்.
2004 அல்லது 2005 இல் இந்த்ரியை புகைப்படம் எடுக்கத் தொடங்கி, தற்போது ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுத்திருந்தாலும், இன்னும் விருப்பம் தொடர்வதாக ஜஸ்மீன் சொல்கிறார்.
ஆனால் அதே நேரத்தில் அவரது வயது மற்றும் ஆசை குறித்த விமர்சனங்களும் எழாமல் இல்லை.
"அனைவருக்கும் வயதாகிறது, இது தவிர்க்கமுடியாதது. வயதாவது மற்றும் வயதாவதாக உணரச் செய்வது இரண்டிற்கும் இடையே வேறுபாடு இருக்கிறது" என்கிறார் ஜஸ்மீன் பதேஜா.
"வயதாவது, முதுமை, நமது எதிர்காலம் என பல கோணங்களில் நாம் சிந்திக்கவேண்டும். காலத்திற்கு ஏற்ப நமது உடல் மாற்றமடையும். கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒன்று நம்மை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, ஒரு சமூகமாக நாம் முதுமை குறித்த நேர்மறையான அணுகுமுறையை கட்டமைத்து, கற்பனை செய்து, தேவையான இடைவெளியை கொடுத்து, சூழலுக்கு ஏற்றவாறு நமது உடல் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவைப்பது நன்றாக இருக்கும்.
தான் அனுபவிக்கத் தவறிய குழந்தைப் பருவத்தில் மீண்டும் இந்த்ரி
இந்த புகைப்பட தொகுப்புக்கு பரவலாக சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக ஜஸ்மீன் சொல்கிறார்.
"ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் புகைப்படங்களை வெளியிடத் தொடங்கியபோது, பெருமளவிலான பெண்கள், குறிப்பாக வயது முதிர்ந்த பெண்கள், பாராட்டுகளை தெரிவித்து எழுதியவை மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. தனது பேத்திகளிடமும், பாட்டிகளிடமும் நெருக்கமாக இருக்கும் பெண்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது".
இந்தப் புகைப்பட திட்டம் எத்தனை நாட்களுக்கு தொடரும் என்று ஜஸ்மீன் பதேஜாவிடம் கேட்டதற்கு, "இந்த்ரிக்கு நடிக்க விருப்பம் இருக்கும்வரை; எனக்கு புகைப்படம் எடுக்கும் ஆர்வம் இருக்கும் வரை" என்று பதிலளித்தார்.
இந்த செய்திகளையும் நீங்கள் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்