You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லண்டன் தாக்குதலில் ஈடுபட்டவர் காலித் மசூத்; அடையாளத்தை வெளியிட்டது காவல்துறை
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் நபர், காலித் மசூத் என்பவர் என்று போலீசார் அடையாளம் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலின்போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட அவர், கென்ட் பகுதியில் பிறந்தவர். தற்போது எந்தவிதமான போலீஸ் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாதவர். ஆனால், முன்பு பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்.
.மேற்கு மிட்லேன்ட்ஸ் பகுதியில் வாழ்ந்து வந்த அவரது வயது 52.
காவலர் கீத் பால்மர், ஆய்ஷா ஃபரேட் என்ற பெண் மற்றம் அமெரிக்க சுற்றுலாப் பயணி குர்த் கோச்ரன் ஆகியோர் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவத்தை நடத்தியது தாங்கள்தான் என இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) என்று கூறிக்கொள்ளும் அமைப்பு தெரிவித்துள்ளது.
முதலில், வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது காரை மோதிய மசூத், அதன் பிறகு நாடாளுமன்ற வளாக மைதானத்துக்குள் காரை ஓட்டிச் சென்றார். அப்போது கத்தியுடன் இருந்தார். போலீசார் அவரைச் சுட்டுக் கொல்வதற்கு முன்னதாக, காவலர் பால்மரை அவர் கத்தியால் குத்தினார்.
ஆசிரியர் என்ற அடையாளத்துடன்
.மசூத்தின் தாக்குதல் நோக்கம் தொடர்பாக முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கவில்லை என பெருநகர போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், போலீசாருக்கு அவரைப் பற்றிய விவரங்கள் தெரிந்திருக்கின்றன. உடலில் காயம் ஏற்படுத்தும் அளவுக்கு தாக்குதல் நடத்துதல், ஆபத்து விளைவிக்கக் கூடிய ஆயுதங்களை வைத்திருத்தல், பொது ஒழுங்கிற்கு கேடு விளைவித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் அறியப்பட்டவர்.
குற்றச் செயல்களுக்காக, முதன் முதலில் 1983-ஆம் ஆண்டு அவர் தண்டிக்கப்பட்டார். கடைசியாக, 2003-ஆம் ஆண்டு கத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார். ஆனால், தீவிரவாதம் தொடர்பான குற்றங்களுக்காக அவர் தண்டிக்கப்படவில்லை.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார், பர்மிங்காம் கிளையிலிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டதாக என்டர்பிரைஸ் என்ற வாடகைக் கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தான் ஓர் ஆசிரியர் என்ற அடையாளம் சொல்லி, ஹூண்டாய் எஸ்யுவி ரக காரை மசூத் வாடகைக்கு அமர்த்தியதாக பிபிசி அறிந்துள்ளது.
அற்புதமான தந்தை, கணவர்
மசூத்தினால் கத்தியால் குத்தப்பட்ட பால்மரின் வயது 48. நாடாளுமன்ற மற்றும் ராஜாங்க பாதுகாப்புப் படையில் ஆயுதம் இல்லாத அதிகாரியாக பணியாற்றி வந்த அவர், ஆயுதம் ஏந்தாத அதிகாரியாக இருந்தார். அவர் ஓர் அற்புதமான தந்தையாகவும், கணவராகவும் நினைவு கூரப்படுவார் என்று அவரது குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் தெரீசா மே, பால்மரின் செயல் எப்போதும் மறக்க முடியாதது என்றும், ஒவ்வொரு அங்குலமும் அவர் கதாநாயகனாகக் காட்சியளிக்கிறார் என்றார்.
ஃபிரேட் என்ற பெண்ணும், அமெரிக்க சுற்றுலாப் பயணி கோச்ரனும் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் மசூத் காரில் மோதியதில் உயிரிழந்தனர்.
ராணி அனுதாபம்
இந்த கொடூர வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது பிரார்த்தனைகள் மற்றும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களை, பிரதமர் தெரீசா மே, மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தார்.
பாதிக்கப்பட்டவர்களில், 12 பேர் பிரிட்டிஷார். 3 பிரான்ஸ் சிறுவர்கள், இரண்டு ரூமேனியர்கள், நான்கு தென் கொரியர்கள், இரண்டு கிரேக்கர்கள், தலா ஒரு ஜெர்மன், போலந்து, அயர்லாந்து, சீனா, இத்தாலி, அமெரிக்கா நாட்டினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பர்மிங்காம், கிழக்கு லண்டன், வேல்ஸ் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக பிபிசி அறிந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்