You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கத்தார்: வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான கடுமையான சட்டத்தை மாற்ற அரசு முடிவு
கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறவும்,வேறு பணிகளுக்கு செல்லவும் அவர்கள் பணி புரியும் நிறுவனத்தின் அனுமதியை வாங்க வற்புறுத்தும் தொழிலாளர் ஆளெடுப்பு குறித்த சட்ட அமைப்பினை அந்நாடு நிறுத்த முடிவு செய்துள்ளது.
தற்போது அமலில் உள்ள ''கஃபாலா'' அமைப்புக்கு பதிலாக அதிக நெகிழ்வுத்தன்மையுள்ள மற்றும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் புதிய ஒப்பந்த அடிப்படையிலான சட்டம் கொண்டுவரப்படும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, வரவிருக்கும் 2022 கால்பந்து உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு கட்டட தொழிலாளர்களை தங்கள் நாட்டுக்கு கத்தார் அரசு வரவழைத்தது.
இவர்களில் பலர் தங்கள் பணியிடங்களில் நிலவிய மோசமான சூழல்களால் இறந்துவிட்டதாக மனித உரிமை குழுக்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இது தொடர்பாக ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்படுவதாக கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
கத்தார் அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, ''தற்போது நடைமுறையில் அமலில் உள்ள சட்டங்கள் மற்றும் திட்டமிடப்பட்ட சீர்திருத்தங்களுக்கான அரசின் அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் இணைந்து , கத்தாரில் மட்டுமல்லாது , இங்கு வரும் தொழிலாளர்களின் பூர்விக நாட்டிலும் ஏற்படுத்தப்படும் புதிய அமைப்பு ரீதியிலான மாற்றங்கள், தொழிலாளர்களுக்கு அவர்கள் உரிமைகளை பெற்று அவர்கள் மதிக்கப்பட ஆவண செய்யும்'' என்று தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுக்காது என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.