இத்தாலி நிலநடுக்கம் ; மீள்கட்டமைப்புக்கு அவசர நிதி திரட்ட அமைச்சரவை கூட்டம்

சமீபத்திய நிலநடுக்கத்தை தொடர்ந்து இத்தாலியின் மத்தியில் பாதிப்புக்குள்ளானபகுதிகளை மீண்டும் கட்டியமைப்பதற்கு தேவையான அவசர நிதி திரட்டுவது பற்றி விவாதிக்க இத்தாலி பிரதமர் மட்டயோ ரொன்சி இன்று அமைச்சரவை கூட்டத்தை நடத்தவிருக்கிறார்.

தாற்காலிக முகாம்களில் உள்ளூர் மக்கள்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, உள்ளூ மக்கள் தாற்காலிக முகாம்களில் இரவை கழித்தனர்

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட கட்டடங்களின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்காக கட்டமைப்பு பொறியியலாளர்கள் அவற்றில் சோதனை நடத்தி வருகின்றனர்.

நிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் ஏற்படும் ஆபத்து நிலவுவதால், அந்த பகுதியில் வசிக்கும் மக்களை தொலைவில், எய்டிரியாடிக் கடற்கரையில் இருக்கின்ற தற்காலிக முகாம்களுக்கு செல்ல அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

புனித பென்னடிக்ட் பேராலயம் - நிலநடுக்கத்திற்கு முன்னும் பின்னும்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புனித பென்னடிக்ட் பேராலயமும் ஒன்று.

வீடுகளுக்கு செல்ல மிகவும் பீதியடைந்து, ஆயிரக்கணக்கான மக்கள் கார்களிலும், முகாம்களிலும் இரவை கழித்துள்ளனர்.

1980 ஆம் ஆண்டுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நோர்ட்ச்சா நகரமும் ஒன்று.

இதனால், இடைக்காலத்தை சேர்ந்த புனித பென்னடிக்ட் பேராலயம் தரைமட்டமாகியுள்ளது.