You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாட்டிலேயே மிகப்பெரிய நிதி மோசடி - பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்தது என்ன?
நாட்டிலேயே மிகப்பெரிய நிதி மோசடியாக கருதப்படும் பஞ்சாப் தேசிய வங்கி முறைகேடு குறித்த தகவல்கள் என்ன? எவ்வளவு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது? இதன் பாதிப்புகள் என்னென்ன?
ஐந்து முக்கிய தகவல்கள்
- சுமார் 11 ஆயிரத்து 360 கோடி ரூபாய் அளவுக்கு தங்கள் வங்கியில் நிதி மோசடி மற்றும் அங்கீகரிக்கப்படாத நிதி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளதாக நேற்றைய தினம் (புதன்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது பஞ்சாப் தேசிய வங்கி.
- மும்பை பிராடி ஹவுஸில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கி சட்ட விரோதமாக ஹாங்காங்கில் உள்ள இரு இந்திய வங்கிகளான ஆக்சிஸ் மற்றும் அலகாபாத் வங்கிகள் மூலம் குறிப்பிட்ட சில நபர்கள் நடத்தி வந்த நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்க அதிகாரம் கொடுத்துள்ளது.
- நிறுவனங்களின் பங்குதாரர்களான நிரவ் மோதி, நிஷால் மோதி, அமி நிராவ் மோதி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோர் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும், மோசடிக்கு உதவியதாக வங்கி ஊழியர்கள் கோகுல்நாத் ஷெட்டி மற்றும் மனோஜ் ஹணுமந்த் காரத் ஆகியோர் மீதும் வழக்கு பதிய வேண்டும் என்றும் சிபிஐயிடம் பஞ்சாப் தேசிய வங்கி கேட்டு கொண்டுள்ளது.
- பஞ்சாப் தேசிய வங்கியின் மோசடி குறித்த செய்தி வெளியான நிலையில் பங்குச்சந்தையில் வங்கி சார்ந்த பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. பஞ்சாப் தேசிய வங்கியின் பங்கு மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் சரிவை சந்தித்து வருகின்றன.
- இந்த மோசடியில் தொடர்புடைய 10 வங்கி ஊழியர்களை பஞ்சாப் தேசிய வங்கி இடைநீக்கம் செய்துள்ளது. நிரவ் மோதி மற்றும் பிற குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை நிதி மோசடி வழக்கு பதிந்துள்ளது. நிரவ் மோதியின் அலுவலகம் மற்றும் கடைகளில் அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :