You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மசூத் அசார் யார்? இந்தியா ஏன் இவரது கூட்டாளிகளை குறிவைத்தது?
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் இந்தியா நடத்திய தாக்குதலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு நெருங்கிய கூட்டாளிகள் கொல்லப்பட்டதாக மசூத் அசார் அறிவித்துள்ளார்.
யார் இந்த மசூத்? இவரது கூட்டாளிகளை இந்தியா குறிவைத்தது ஏன்?
ஜம்மு காஷ்மீரில் பிப்ரவரி 2019ஆம் ஆண்டு 40 இந்திய வீரர்களைக் கொன்ற தற்கொலைத் தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர்தான் இந்த மசூத் அசார்.
இந்தியாவையும் பாகிஸ்தானையும் போரின் விளிம்புக்குக் கொண்டு வந்த கொடிய குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த மசூத் அசாரை ஐ.நா. பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டு அப்போது தாலிபன்களால் ஆளப்பட்ட ஆப்கானிஸ்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டதற்கு ஈடாக விடுவிக்கப்பட்ட மூன்று பேரில் மசூத் அசார் ஒருவர் ஆவார்.
ஜெய்ஷ்-இ-முகமது என்பதன் நேரடி அர்த்தம் முகமதுவின் ராணுவம் எனப் பொருள். இந்த அமைப்பை 1999ஆம் ஆண்டு இந்தியாவால் விடுவிக்கப்பட்ட பிறகு மசூத் அசார் தொடங்கினார்.
தற்போது இந்தியா நடத்திய தாக்குதலில் இறந்தவர்கள் குறித்து, ஜெய்ஷ் இ முகமது புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மசூத் அஸாரின் மூத்த சகோதரி மற்றும் ஐந்து குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு