தமிழ்நாட்டில் ஜனவரி மாதமும் தொடரும் கனமழை - 'லா நினோ' காரணமா?

கனமழை
படக்குறிப்பு, புதுச்சேரி மழை பாதிப்புகள்

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. ஜனவரி முதல் வாரத்தைக் கடந்தும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கடந்த இரு தினங்களாகவே பரவலாக கனமழை பெய்துவருகிறது.

திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக, சென்னையில் ஜன. 07 அன்று நாள் முழுவதும் மழை தொடர்ந்தது. புதுச்சேரியிலும் மழை பெய்துவருகிறது.

இன்று (ஜன. 08) மதியம் ஒரு மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 24 செ.மீ., கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 23 செ.மீ., நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 22 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கனமழை

பட மூலாதாரம், Tamilnadu Weatherman/X

வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழை பெய்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜன. 9, 10 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 3-4 ஆண்டுகளாகவே ஜனவரி மாதத்தில் மழை பெய்வது வழக்கமாகியுள்ளது. இதுவொரு `புதிய இயல்பா?`, இதற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணமா? விவசாயிகள், பொதுமக்கள் இதற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டுமா என்ற கேள்விகள் இதையொட்டி எழுகின்றன.

தமிழகத்தில் கனமழை

பட மூலாதாரம், Tamilnadu Weatherman/X

லா நினோ காரணமா?

இதுதொடர்பாக, தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் `எக்ஸ்` (ட்விட்டர்) தளத்தில், "கடந்த 4 ஆண்டுகளாகவே ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் மழை பெய்வது வழக்கமாகிவிட்டது. தமிழ்நாட்டுக்கு அருகே கிழக்கு நோக்கி வீசும் காற்று, மேற்கு நோக்கி வீசும் காற்றுடன் தொடர்புகொள்வதால் இந்த மழை பெய்துவருகிறது" என பதிவிட்டிருந்தார்.

ஜனவரி மாதத்திலும் தமிழகத்தில் ஏன் மழை பெய்கிறது என்ற கேள்வியை தனியார் வானிலை ஆர்வலர் ஸ்ரீகாந்திடம் எழுப்பினோம்.

"கடந்த 2-3 ஆண்டுகளாக லா நினோ விளைவு இருந்தது. அப்படியிருந்தால் பருவமழை சிறிது தாமதமாகத்தான் முடிவுக்கு வரும். இப்போது ஜனவரி முதல் வாரம் தான். அதனால் இதனை டிசம்பர் கடைசி வாரம் என்றே எடுத்துக் கொள்ளலாம். மேலும் பருவமழை தாமதமாக தொடங்கியதும் ஜனவரி மாதமும் பெய்யும் இந்த மழைக்குக் காரணமாக இருக்கலாம்" என்றார்.

மேலும், 2022-ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் வாரத்திற்கு பிறகும் மழை தொடர்ந்தது என தெரிவித்த அவர், இந்தாண்டு அப்படியிருக்காது என்றும் கூறினார்.

1964-ஆம் ஆண்டில் தனுஷ்கோடியில் டிசம்பர் இறுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட `தானே` போன்ற புயல்களை ஸ்ரீகாந்த் உதாரணமாக காட்டுகிறார். `தானே` புயலின் போது லா நினோ விளைவு இருந்ததாக கூறுகிறார். லா நினோ இருந்தால் டிசம்பர் இறுதி, ஜனவரி முதல் வாரத்தில் மழை தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் அவர்.

தமிழகத்தில் கனமழை

பட மூலாதாரம், Tamilnadu Weatherman/X

லா நினோ என்பது என்ன?

"லா நினோ என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியில் வெப்பநிலை குறைந்து, மழைக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் நிலவும் வானிலையாகும். வெப்ப மண்டல காற்றுக்கூறுகள் மெதுவாகத்தான் பூமத்திய ரேகைக்கு தெற்கே நகரும். பூமத்திய ரேகையை நெருங்கி சென்றால்தான் மழை குறையும். லா நினோ வானிலையின் போது இந்த செயல்முறை மெதுவாக நடக்கும். எனவே, மழை தொடரும்" என்றார்.

எனினும், இப்போது பெய்யும் மழை `லா நினோ` விளைவால் ஏற்பட்டதல்ல என்கிறார் ஸ்ரீகாந்த்.

ஜனவரி மழைக்கு என்ன காரணம்?

"வடகிழக்குப் பருவ மழை மற்றும் தென்மேற்கு பருவமழை காலத்திற்கு இடைப்பட்ட காலங்களில் மேற்கத்திய கலக்கம், மேடேன் ஜூலியன் ஒத்த அலைவு (MJO) மற்றும் வெப்ப மண்டல காற்று குவிதல் பகுதி (ITCZ) இவைகளின் நிலையே மழைக்கான முக்கிய காரணிகள். இந்த மூன்று காரணிகளில் ஏதேனும் ஒன்று சாதகமான சூழலில் இருந்தால் குளிர்கால / வெப்ப சலன மழை தென் இந்திய பகுதியில் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும்" என்பது ஸ்ரீகாந்த் போன்ற வானிலை ஆர்வலர்களின் விளக்கமாக இருக்கிறது.

இதில், மேற்கத்திய கலக்கம் (Western disturbance) என்ற வானிலை நிகழ்வு, மழையை ஏற்படுத்தி வெப்பநிலையை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேடன் -ஜூலியன் அலைவு ( MJO ) என்பது வெப்பமண்டல வளிமண்டலத்தில் உள்ள பருவகால மாறுபாட்டின் முக்கிய அங்கமாகும்.

தற்போது தமிழகத்தில் பெய்யும் மழைக்கு எம்.ஜே.ஓ, மேற்கத்திய கலக்கம் போன்ற இரு சூழல்களும் சாதகமாக இருப்பதே காரணம் என்கிறார் அவர்.

"இந்த சாத்தியக்கூறுகள் இல்லையென்றால் இம்மழை இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். தென் தமிழகத்தில் மட்டும் ஒருவேளை மழை பெய்திருக்கலாம்" என்கிறார் ஸ்ரீகாந்த்.

கடல் வெப்பம் அதிகமானால் மழையின் தன்மையில் இத்தகைய மாறுதல்கள் ஏற்படலாம் என அவர் கூறுகிறார்.

இப்படி பருவமழை அல்லாத காலங்களில் பெய்யும் மழையை ஓரளவு கணிக்க முடியும் எனக்கூறும் அவர், எனினும் எந்த பகுதிகளில் அதிக மழை இருக்கும் என்பதை சொல்ல முடியாது என தெரிவித்தார்.

வானிலை

பட மூலாதாரம், GETTY IMAGES

புதிய இயல்பா?

காலநிலை மாற்றம் இதற்கு காரணமா என `பூவுலகின் நண்பர்கள்` அமைப்பின் சுந்தர்ராஜனிடம் கேட்டபோது, "கடந்த நான்கு ஆண்டுகளாகவே தமிழகத்தில் ஜனவரி மாதமும் மழை பெய்துவருகிறது. இதுவொரு புதிய இயல்புதான். பருவமழை தன்மைகள் மாறுபடுவதே காலநிலை மாற்றத்தால்தான். வளைகுடா நீரோட்டம், எம்.ஜே.ஓ போன்றவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

அரபி கடலிலும் வெப்பம் அதிகரித்து அங்கேயும் பல புயல்கள் உருவாகி வருகின்றன.

இந்த வானிலை மாறுதல்கள், இந்திய பருவமழையில் குறிப்பாக வடகிழக்குப் பருவமழையில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.

பாதிக்கப்படும் விவசாயிகள்

இப்படி பருவம் தப்பிய மழையால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர். ஜனவரி மாதம் பெரும்பாலான பகுதிகளில் அறுவடை காலம்.மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

கள்ளக்குறிச்சி அருகே மரூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாண்டு கூறுகையில், "பருவம் தவறி பெய்த மழையால் தனது மூன்று ஏக்கர் நிலத்தில் விளைந்திருந்த நெல் முற்றிலும் நாசமாகி போனது. எப்போதும் `தை பிறந்தால் வழி பிறக்கும்` என்பதற்கு ஏற்ப தை மாத அறுவடைக்குத் தயாராக இருக்கும் இந்த நேரத்தில் பெய்த மழையானது முழுமையான சேதத்தைக் கொடுத்து விட்டது" என தெரிவித்தார்.

புதுச்சேரி பகுதி கருக்கலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் கூறுகையில், "நெல் அறுவடை செய்ய வேண்டிய இந்த நேரத்தில் கதிர் முற்றி இருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த மழை எதிர்பார்க்காத ஒன்று. இதனால் செய்த செலவு கூட வராது அனைத்து பயிர்களும் தண்ணீரில் மூழ்கி விட்டன என்ன செய்வது என்று தெரியவில்லை. வரத்து வாய்க்காலை தூர்வாரி இருந்தால் நஷ்டத்தை சற்று குறைத்திருக்கலாம் அல்லது தடுத்திருக்கலாம்" என தெரிவித்தார்.

எங்கெல்லாம் பாதிப்புகள்?

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வலங்கைமான் பேரூராட்சி 14-வது வார்டு கோவில்பத்து பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள உப்பளங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட தாமரைக்குளம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமத்திற்கு ஆளாயினர்.

புதுச்சேரி கிருமாம்பாக்கம், ஏம்பலம், பாகூர் உள்ளிட்ட பகுதியில் 100 ஏக்கரில் பயிரிட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)