'நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கேடயம் அல்ல' - உச்ச நீதிமன்றம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் நீதிமன்றங்கள் தங்கள் அதிகாரத்தை கவனத்துடன் கையாள வேண்டும் , இந்த அதிகாரம் நீதிபதிகளின் தனிப்பட்ட கவசம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்கு என்ன காரணம்?
நீதிமன்ற உத்தரவை மீறுவதும் நீதிமன்றம் பற்றி அவதூறாகப் பேசுவது, விசாரணையை பாதிப்பது போல் நடந்து கொள்வது போன்ற நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் எந்தவொரு செயலும் நேரடியாகநீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு வழிவகுக்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படலாம் .
இந்நிலையில், நவி மும்பையைச் சேர்ந்த வினிதா ஸ்ரீநந்தன், தெருநாய்களுக்கு உணவளிப்பது தொடர்பான வழக்கில் நீதிபதிகளை "நாய் மாஃபியா" என குறிப்பிட்டு சர்க்குலர் விநியோகித்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் அவரை குற்றவாளி எனக் கூறி மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு ஒரு வாரம் சிறை தண்டனை விதித்தது.
அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்தது.
‘Contempt power என்பது நீதிபதிகளின் தனிப்பட்ட கேடயம் இல்லை, விமர்சனத்தை அடக்கும் ஆயுதமும் இல்லை’ என குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், 'கருணை என்பது நீதித்துறை மனசாட்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும். நீதிமன்றத்தை அவமதித்தவர் தனது தவறை நேர்மையாக ஒப்புக்கொண்டு, அதற்குக் மன்னிப்பு கேட்கும் போது அதை ஏற்றுக்கொண்டு கருணை வழங்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



