You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை: கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - கணிப்புக்கு மாறாக குறைந்த மழை
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு வடக்கே இன்று அதிகாலையில் கரையை கடந்தது.
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடற்கரையை புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே, சென்னைக்கு வடக்கே இன்று (அக். 17) காலை 4.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தென் கடலோர ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழ்நாட்டின் கடலோரம் உள்ளே செல்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரையிலும் அவ்வாறான கனமழை பெய்யவில்லை. ஆங்காங்கே லேசான மழையே பெய்தது.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டன.
சென்னையில் 70 நிவாரண முகாம்களில் 2 ஆயிரத்து 789 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்தது.
சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், நேற்றும் இன்றும் (அக். 17) இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஏரிகள் வேகமாக நிரம்புகின்றன
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 38 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 30 ஏரிகளும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
130 ஏரிகள் 75 சதவீதத்தை தாண்டியும் 120 ஏரிகள் 50 சதவீதத்தை தாண்டியும் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை குறைந்தது ஏன்?
கனமழை பெய்வதற்கான மேகத்திரள்கள் சற்று மேல்நோக்கி சென்றுவிட்டதால் கனமழைக்கான வாய்ப்பு சென்னைக்கு குறைவாக இருப்பதாக, தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் தன் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
கனமழை பெய்வதற்கான மேகத்திரள்கள் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னை மட்டுமல்லாமல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழையே பெய்யும் என அவர் கணித்திருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)