பூமியின் மையப் பகுதி எதிர்த் திசையில் சுழலத் தொடங்கியதா? இதனால் நடக்கப் போவது என்ன?

குறைந்த பூமியின் மையப்பகுதியின் வேகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இன்றுவரை பூமிக்கு கீழ் 12 கிமீ அளவிற்கு மட்டுமே துளையிட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

பூமியின் மேற்பகுதி மற்றும் விண்வெளி குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. நிலவில் குடியேறுவது, செவ்வாய் கிரகத்தில் குடியேறுவது குறித்து விவாதிக்கப்பட்டு வரும் இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில் கூட, பூமியின் மையப்பகுதியை பற்றி முழுமையாக அறிந்துகொள்வது என்பது அறிவியலின் நீங்காத மர்மமாகவே இருக்கிறது.

காரணம் இந்த பூமியின் மையப்பகுதி என்பது சுமார் 5000 கிலோ மீட்டர்கள் ஆழத்தில் இருப்பது. இன்றுவரை பூமிக்கு கீழ் 12 கிமீ அளவிற்கு மட்டுமே துளையிட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கலிஃபோர்னியா பல்கலைகழகம் மற்றும் சீன அறிவியல் அகாடமியின் விஞ்ஞானிகள் குழு, பூமியின் மையப்பகுதியானது பூமியின் மேற்பகுதியுடன் ஒப்பிடும்போது மெதுவாக அல்லது எதிர்திசையில் சுழல்கிறது எனக் கண்டறிந்துள்ளனர்.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த 2010 முதல், 14 ஆண்டுகளாக மையப்பகுதியின் சுற்று வேகம் குறைந்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என விஞ்ஞானிகள் குழு கூறுகின்றது. ஆனால் பூமியில் 5000 கிமீ துளையிட்டு, நேரடியாக மையப்பகுதியை அணுகாமல் இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தது எப்படி? பூமியின் மையப்பகுதி எதிர்திசையில் சுழல்வதால் பூமியின் மேற்பகுதியில் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

பூமியின் மூன்று அடுக்குகள்

பூமியின் மூன்று அடுக்குகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பூமியின் மேற்பரப்பு பகுதியை முட்டை ஓடாகவும், மேண்டில் பகுதியை வெள்ளை கருவாகவும் மற்றும் மையப்பகுதியை மஞ்சள் கருவாகவும் நாம் புரிந்துகொள்ளலாம்

பூமியின் அமைப்பு என்பது பூமியின் மேற்பரப்பு பகுதி (Crust), மேண்டில் (Mantle - மேற்பரப்பிற்கும் மையப்பகுதிக்கும் இடைப்பட்ட குளிர்ந்த பாறைகளினால் ஆன திடப்பகுதி) மற்றும் மையப்பகுதி (core) என்னும் மூன்று வெவ்வேறு அடுக்குகளினால் அமைந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்த Core எனும் மையப்பகுதி குறித்து இதுவரை பல்வேறு அனுமானங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பல்வேறு கற்பனை கதைகளும் உலாவுகின்றன. 1864இல் வெளியான 'ஜர்னி டு தி சென்டர் ஆஃப் தி எர்த்' என்ற நாவலும் அதைத் தழுவி எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்களும் மிகவும் பிரபலமானவை.

இதை இன்னும் எளிதாக புரிந்துகொள்ள வேண்டுமானால் பூமியை நாம் முட்டையுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். அதாவது பூமியின் மேற்பரப்பு பகுதியை முட்டை ஓடாகவும், மேண்டில் பகுதியை வெள்ளை கருவாகவும் மற்றும் மையப்பகுதியை மஞ்சள் கருவாகவும் நாம் புரிந்துகொள்ளலாம்.

பூமியின் உள் மையப்பகுதியானது இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய உலோகங்களால் உருண்டையான வடிவில் காணப்படுகிறது. அதனுடைய ஆரம் (radius) சுமார் 1221 கிமீ தொலைவிற்கு இருக்கிறது. இதன் வெப்பநிலை 5400 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உள்ளது. இது கிட்டதட்ட சூரியனுக்கு நிகரான வெப்பநிலை (5700 டிகிரி) என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முந்தைய ஆராய்ச்சிகளில் இந்த மையப்பகுதியானது பூமியின் மற்ற பகுதிகளில் இருந்து தனித்து இருக்கிறது என்றும், ஒருவகையான உலோக திரவங்களால் இது பூமியில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது எனவும் கூறப்பட்டது. அதாவது பூமிக்கு உள்ளே இது தனித்து சுற்றுகிறது எனவும் இதற்கும் பூமியின் மற்ற பகுதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்பட்டது.

ஆனால் சமீபத்திய ஆய்வு முடிவுகளின் மூலம், ஏறக்குறைய 40 ஆண்டுகளில் முதல் முறையாக பூமியின் மேண்டிலை விட சற்று மெதுவாக மையப்பகுதி நகர்வதால், கிரகத்தின் மேற்பரப்புடன் ஒப்பிடும்போது மையப்பகுதி எதிர்திசையில் சுழல்வதாக கருதப்படுகிறது.

பூமியைத் துளையிடாமலே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

பூமியைத் துளையிடாமலே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது எப்படி?

நிலநடுக்கத்தின் போது ஏற்படும் நில அதிர்வு அலைகள் (seismic waves) மூலமாக பூமியை துளையிடாமலேயே பூமியின் மையப்பகுதி குறித்து அறிந்துகொள்ள முடியும்.

பூமியின் மேற்பரப்பில் மாபெரும் நிலநடுக்கங்கள் ஏற்படும்போது இந்த நில அதிர்ச்சி அலைகளின் ஆற்றல்கள் பூமியின் உள் மையப்பகுதி வரை கடத்தப்பட்டு மீண்டும் மேற்பரப்பிற்கு பாய்ந்து வருகிறது.

அப்படி பூமியின் உட்பகுதி வரை சென்று மேற்பரப்பிற்கு திரும்ப வரும் இந்த நில அதிர்ச்சி அலைகளுடைய ஆற்றல்களின் வழித் தடங்களை விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்தது.

இதற்காக, 1991 மற்றும் 2023க்கு இடையில், தெற்கு சாண்ட்விச் தீவுகளைச் சுற்றி (அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள மக்கள் வசிக்காத தீவுகள்) பதிவு செய்யப்பட்ட 121 தொடர்ச்சியான பூகம்பங்களில் இருந்து கிடைத்த நில அதிர்வுத் தரவுகளைத் தொகுத்து பகுப்பாய்வு செய்தனர். அது மட்டுமல்லாது, 1971 மற்றும் 1974க்கு இடையில் நடந்த சோவியத் அணுசக்தி சோதனைகளின் தரவுகளையும், பிரெஞ்சு மற்றும் அமெரிக்க அணுசக்தி சோதனைகளின் தரவுகளையும் பயன்படுத்தினர்.

மையப்பகுதி எதிர்திசையில் சுழல்கிறதா?

மையப்பகுதி எதிர்திசையில் சுழல்கிறதா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உண்மையில் எதிர்த்திசையில் பூமியின் மையப்பகுதி சுழல்கிறது என்று சொல்லிவிட முடியாது என்கிறார் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER- மொஹாலி) பேராசிரியர் டி.வி.வெங்கடேஸ்வரன், "உண்மையில் எதிர்த்திசையில் பூமியின் மையப்பகுதி சுழல்கிறது என்று சொல்லிவிட முடியாது. இதை ஒரு எளிய உதாரணம் மூலம் விளக்கலாம்" என்று கூறியவர் தொடர்ந்து பேசினார்.

"நீங்கள் ஒரு காரில் 100 கிமீ வேகத்தில் செல்கிறீர்கள், அருகில் உங்கள் நண்பர் ஒருவர் அவரது காரில் அதே 100 கிமீ வேகத்தில் செல்கிறார், இருவரும் ஒன்றாகப் பயணிப்பது போலத் தோன்றும். இப்போது திடீரென அந்த நண்பர் 20 கிமீ வேகத்தைக் குறைத்து 80 கிமீ வேகத்தில் பயணித்தால், உங்கள் இடத்திலிருந்து பார்க்கும்போது அவர் சாலையில் பின்னோக்கி செல்வது போலத் தோன்றும். காரணம் நீங்கள் அதே 100 கிமீ வேகத்தில் பயணிக்கிறீர்கள் அல்லவா? இதேபோல தான் பூமியின் மேற்பரப்பு சுற்று வேகத்துடன் ஒப்பிடும்போது மையப்பகுதியின் வேகம் குறைவதால், அது எதிர்திசையில் பயணிப்பது போல கருதப்படுகிறது." என்கிறார் பேராசிரியர் டி.வி.வெங்கடேஸ்வரன்.

டி.வி.வெங்கடேஸ்வரன்
படக்குறிப்பு, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER- மொஹாலி) பேராசிரியர் டி.வி.வெங்கடேஸ்வரன்

இந்த ஆய்வு முடிவுகள் கூட அனுமானிக்கப்பட்டவை தான் என்கிறார் அவர்.

"பூமியின் மையப்பகுதி குறித்து இன்னும் நாம் முழுமையாக தெரிந்துகொள்ளவில்லை. ஆய்வுகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. இந்த 'core' எனப்படும் மையப்பகுதியின் வடிவம் கூட தரவுகளின் மூலம் அனுமானிக்கப்பட்டது தான். காரணம் 5000 கிமீ என்ற ஆழத்தை நம்மால் அடைய முடியாது. நில அதிர்வுத் தரவுகள் மூலம் மையப்பகுதியின் சுற்று வேகம் குறைந்துள்ளது என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். இது எதிர்காலத்தில் மாறவும் கூடும்" என்று கூறினார்.

விளைவுகள் என்ன?

நில அதிர்வுத் தரவுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நில அதிர்வுத் தரவுகள் மூலம் மையப்பகுதியின் சுற்று வேகம் குறைந்துள்ளது என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

பூமியின் மையப்பகுதியின் சுற்றுவேகம் குறைவதால் காந்த மண்டலத்தில் மாற்றம் ஏற்படும் என்கிறார் பேராசிரியர் டி.வி.வெங்கடேஸ்வரன்.

"இந்த மையப்பகுதி (Core) என்பது இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய உலோகங்களால் உருவானது. எனவே அதன் சுற்றுவேகத்தில் பாதிப்பு ஏற்படும் போது, அது பூமியின் மேற்பரப்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன." என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த மாற்றங்களுக்கு காந்த மண்டலம் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. அண்டத்தில் பூமி தனது பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும்போது, பூமிக்குள் உலோகங்களால் ஆன அதன் மையப்பகுதியும் சுழன்றுக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு இயக்கங்களினால் பூமியை சுற்றி ஒரு காந்த சக்தி உருவாகிறது. இதுவே காந்த மண்டலம்" என்று கூறினார்.

இந்த காந்த மண்டலத்தின் கதிர்வீச்சுகள் சூரியனிலிருந்து பூமியை காக்கும் அரணாக திகழ்கின்றன. ஆனால் அதேசமயம் இந்த காந்த மண்டலமானது பூமி தனது பாதையில் சுற்றி வரும் நேர அளவுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது நமது நாளின் நீளங்களை தீர்மானிப்பதிலும் காந்தமண்டலம் பங்கு வகிக்கிறது.

"ஆனால், இது பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆயிரத்தில் ஒரு பங்கு பாதிப்பு என்று கூட சொல்லலாம். ஒருநாளின் காலநேரத்தில் மைக்ரோ நொடி மாற்றத்தை இது ஏற்படுத்தக்கூடும். இது இப்போது கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தான். ஒருவேளை இந்த மையப்பகுதியின் சுற்றுவேகம் என்பது மேலும் பலவற்றுக்கு காரணமாக இருக்கலாம். இன்னும் பல வருங்கால ஆராய்ச்சிகள் மூலம் தான் நாம் அதைத் தெரிந்துகொள்ள முடியும்" என்று கூறுகிறார் பேராசிரியர் டி.வி.வெங்கடேஸ்வரன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)