You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - பாகிஸ்தான்: காத்திருந்து ஒன்றுசேர்ந்த காதல் ஜோடியின் உணர்ச்சிமிகு தருணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜவேரியா கேனம், கொல்கத்தாவை சேர்ந்த சமீர் கானை திருமணம் செய்வதற்காக, பாகிஸ்தானில் இருந்து சமீபத்தில் இந்தியா வந்தார். ஐந்து ஆண்டுகள் நீண்ட கால காத்திருப்புக்குப் பின்னர் ஜவேரியாவுக்கு விசா கிடைத்தது. இந்தியாவில் சமீர் கான் அவரை வெகு விமரிசையாக வரவேற்றார்.
பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான மக்பூல் அகமது, இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்துகொள்வதற்கு விசா கிடைக்க உதவியுள்ளார். இதற்காக யாரிடமும் அவர் பணம் வாங்குவதில்லை.
இரண்டு முறை விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், விரக்தியில் இருந்த ஜவேரியாவுக்கு விசா கிடைக்க மக்பூல்தான் ஆவணப் பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டார். அவரது முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன.
மக்பூல் அகமது, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள காடியான் என்னும் நகரத்தைச் சேர்ந்தவர். இவர், 2003ஆம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த தாஹிரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், இந்தத் திருமணம் எளிதில் நடைபெறவில்லை.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான உறவு அவர்களின் திருமணத்தைப் பாதித்தது. எனினும், மக்பூலின் காதலும் முயற்சி வெற்றி பெற்று, தாஹிரா இந்தியா வந்தார்.
தாஹிராவை திருமணம் செய்ய மக்பூல் செய்த போராட்டம் தற்போதும் பல ஜோடிகளுக்கு உதவி வருகிறது. எந்த ஜோடியாவது உதவி நாடி வரும்போது தன்னுடைய திருமணம்தான் நினைவுக்கு வருவதாக மக்பூலின் மனைவி தாஹிரா கூறுகிறார்.
இந்தியா-பாகிஸ்தானில் திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகள் பெரும்பாலும் விசா தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள நினைக்கும் மஹியும் ஒருவர். இவர்களுக்கு விசா பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதனால், உதவிக்காக மக்பூல் அகமதுவை நாடியுள்ளார் மஹி.
இரு நாடுகளுக்கு இடையே ஓர் இணைப்புப் பாலமாக மக்பூல் திகழ்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)