மும்பையில் இஸ்லாமியர்களின் கடைகளை நொறுக்கிய அரசின் புல்டோசர்கள் - ஏன்?

மும்பையில் இஸ்லாமியர்களின் கடைகளை நொறுக்கிய அரசின் புல்டோசர்கள் - ஏன்?

மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ளது மீரா சாலை. அங்குள்ள நயா நகர் பகுதியில் செயல்பட்டு வந்த கடைகளை ஆக்கிரமிப்பு எனக் கூறி நகராட்சி நிர்வாகம் போலீசார் பாதுகாப்பு மற்றும் புல்டோசர் உதவியுடன் அகற்றியுள்ளது.

ஜனவரி 22ஆம் தேதியன்று, அயோத்தியில் குடமுழுக்கு நடைபெற்றது. அதற்கு முன்னதாக ஜனவரி 21 இரவு, மும்பையின் மீரா சாலையில் இருந்த வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டதாக சொல்லப்பட்டது.

கல்வீச்சு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் எச்சரிக்கை விடுத்தார். இதன் பின்னணியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நயா நகர் பகுதியிலுள்ள ஹைதாரி சௌக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சாலையோரம் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 15-20 கடைகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 21ஆம் தேதியன்று காவிக்கொடி கட்டப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு வாக்குவாதம் நடந்ததாகவும் அதைத் தொடர்ந்து 22ஆம் தேதி நடந்த பேரணியில் சர்ச்சை ஏற்பட்டதாகவும் கூறிய காவல்துறை துணை ஆணையர் ஜெயந்த் பஜ்பலே கல்வீச்சு எதுவும் நடக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த வழக்கில், போலீசார் இதுவரை வாரன்ட் இன்றிக் கைது செய்யக்கூடிய பிரிவில் 10 குற்றங்களும் வாரன்ட் இன்றிக் கைது செய்ய முடியாத பிரிவில் 8 குற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இதுவரை 19 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்து, முஸ்லிம் இரு தரப்பில் இருந்தும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பு தெளிவுபடுத்தியது.

சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவே இந்தச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளார் வஞ்சித் பகுஜன் அகாடியின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர். மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பான மனோஜ் ஜாரங்கேவின் அணிவகுப்பைச் சீர்குலைப்பதற்காகவே இந்தப் பதற்றமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக எம்.ஐ.எம் கட்சியின் எம்.பி இம்தியாஸ் ஜலீல் குற்றம் சாட்டியுள்ளார்.

‘பெயர்களைக் கேட்டு டெம்போவை உடைத்தனர்’

மீரா சாலையில் வசிக்கும் ஒருவர் பிபிசி மராத்தியிடம் அவர்களுக்கு என்ன நடந்தது எனக் கூறினார்.

ஜனவரி 23 அன்று மாலை 7:30 மணியளவில் மீரா சாலையிலுள்ள செக்டார் எண் 3-இன் அருகே கார்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவரும், பாதிக்கப்பட்டவருமான அப்துல் ஹக் சௌத்ரி பிபிசியிடம் பேசியபோது, “பயந்தரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது கார் திடீரென தாக்கப்பட்டது. நீங்கள் இந்துவா, முஸ்லிமா என்று கேட்டனர். அது டெம்போவிலும் எழுதப்பட்டிருந்தது.

பின்னர் அவர்கள் டெம்போவை தாக்கினார்கள். அவர்கள் கையில் வாட்களும் இருந்தன. நாங்கள் அங்கிருந்து ஓடாமல் இருந்திருந்தால் எங்களையும் கொன்றிருப்பார்கள். அவர்கள் ஜெய் ஸ்ரீராம் எனவும் முழக்கமிட்டனர்,” என்றார்.

தாக்குதலில் அப்துல் ஹக் சௌத்ரியின் ஓட்டுநர் காயமடைந்து தையல் போடப்பட்டு, சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் அவர். மேலும் பேசியவர், “அவர்கள் எங்கள் காரை மட்டுமல்ல, சுற்றியுள்ள கார்களையும் தாக்கினார்கள். ரிக்ஷாவை கூடத் தாக்கினார்கள்,” என்றார்.

முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)