You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இம்ரான் கானுக்கு நேற்று 10, இன்று மேலும் 14 ஆண்டு சிறைத் தண்டனை - பாகிஸ்தானில் என்ன நடக்கிறது?
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022இல் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏற்கெனவே மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
செவ்வாயன்று அவர் நாட்டின் ரகசியங்களைக் கசியவிட்டதற்காக 10 ஆண்டுகள் தண்டனை பெற்றார். புதன்கிழமையன்றும் ஓர் ஊழல் வழக்கில் மேலும் 14 ஆண்டுகள் வழங்கப்பட்டது.
தனக்கு எதிரான பல வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.
ரகசியங்களை கசியவிட்ட வழக்கு என்ன?
மார்ச் 2022இல் அமெரிக்காவில் அந்நாட்டு உயர் மட்ட அதிகாரிகளுடன் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றில் பங்கேற்றார். அப்போது அங்கு பேசப்பட்ட முக்கிய விவகாரங்கள் உள்ளடங்கிய ரகசிய ஆவணங்களை இஸ்லாமாபாத்திற்கு அனுப்பி வைத்தார்.
மார்ச் 2022இல் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் கட்சி பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். மேடையில் பேசிய இம்ரான் கான் தனது ஆட்சியைக் கவிழ்க்க வெளிநாட்டு சக்திகள் திட்டம் போடுவதாகக் கூறி தனது சட்டைப் பையில் இருந்து ஒரு காகிதத் துண்டை வெளியே எடுத்துக் காட்டினார்.
இம்ரான் கான் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டால் அனைவரும் மன்னிக்கப்படுவீர்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக இம்ரான் கான் கூறினார். இதற்குப் பின்னணியில் எந்த நாடு இருக்கிறது என்பதை இம்ரான் கான் வெளிப்படையாகச் சொல்லவில்லை.
அதேநேரம், அவர் அமெரிக்காவை விமர்சிக்கவும் தவறவில்லை. இந்தச் சம்பவம் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது. தன்னை ஆட்சியில் இருந்து அகற்ற சதி வேலை நடப்பதாக இம்ரான் கான் முன்வைத்த குற்றச்சாட்டை அமெரிக்கா நிராகரித்தது.
பாகிஸ்தான் தூதர் இஸ்லாமாபாத்திற்கு அனுப்பிய ரகசிய தூதரக கடிதங்களை பொதுவெளியில் பிரதமரே பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதன் பின்னணியிலும் அமெரிக்கா இருப்பதாக இம்ரான் கான் சந்தேகம் தெரிவித்தார்.
10 ஆண்டு சிறை
இந்த நிலையில் இம்ரான் கானின் பதவி பறிபோன பிறகு, ஜூலை 2023இல் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் 1923இன் படி, முன்னாள் பிரதமர் மீது அரசு ரகசியங்களை பொது வெளியில் கசியவிட்டதாகக் குற்றம்சாட்டி பாகிஸ்தான் அரசு வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்துமாறு நீதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கை விசாரித்த பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம், இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷாஹ் மஹ்மூத் குரைஷி ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
நீதிமன்றத் தீர்ப்பு கேலிக்கூத்தானது என்றும் தீர்ப்பை மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் இம்ரான் கானின் பிடிஐ கட்சி தெரிவித்துள்ளது.
இம்ரான் கானின் எக்ஸ் பக்கத்திலும் இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து பதிவிடப்பட்டுள்ளது.
தீர்ப்பு பற்றி இம்ரான் கான் கருத்து
"சைஃபர் வழக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தால் இரண்டு முறை செல்லாது என அறிவிக்கப்பட்டு மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட ஒரு வழக்கு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இரண்டு முறையும் இந்த வழக்கு அரசமைப்பு மற்றும் சட்டத்தை மீறி நடத்தப்பட்டது. இந்த வழக்கு பொய், மிரட்டல், சதி, வஞ்சகத்தால் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. அதனால்தான் உச்சநீதிமன்றமும் எனக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கியது.
இப்போது முக்கிய சாட்சிகளின் வாக்குமூலத்தில் எனக்கும், ஷா மெஹ்மூத்துக்கும் எதிராக எதுவும் வெளிவராததால், இதன் பின்னணியில் உள்ளவர்கள் பீதியடைந்துவிட்டனர்.
மேலும் சட்ட விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் இதை விரைவாக முடித்துவிட நினைக்கிறார்கள்," என இம்ரான் கானின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட முடியுமா?
முன்னதாக, 2023 ஆகஸ்ட் மாதத்தில் அரசுக் கருவூலமான தோஷகானாவிடம் இருந்த பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தண்டனையை உச்ச நீதிமன்றம் அண்மையில் நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது சைஃபர் வழக்கில் 10 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தண்டனை அனுபவித்து வரும் இம்ரான் கானால் அதில் போட்டியிட முடியாது. தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் பிடிஐ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)