சிதம்பரம் நடராஜர் கோவில்: கனக சபை என்றால் என்ன? தீட்சிதர்கள் பதாகையை வைத்தது ஏன்? - முழு விவரம்

சிதம்பரம் நடராஜர் கோவில்: கனக சபை என்றால் என்ன? தீட்சிதர்கள் பதாகையை வைத்தது ஏன்? - முழு விவரம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையின் மீது ஏறி நான்கு நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் சார்பில் வைக்கபட்ட பதாகை சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னை எப்போது, ஏன் தொடங்கியது? முழு விவரங்களை இந்தக் கட்டுரையில் காண்போம்...

பக்தர்கள் புகாரால் பதாகையை அகற்றச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தீட்சிதர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் புகழ்பெற்ற ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தேரோட்டம் நடந்து முடிந்த நிலையில், திங்கட்கிழமை ஆனி திருமஞ்சன திருவிழா தரிசனம் நடைபெற்றது.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் திருத்தேர் விழாவையொட்டி, கனகசபையில் பொதுமக்கள் ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் வழிபடத் தடை விதித்துள்ளதாக கோவில் தீட்சிதர்கள் கனகசபை வாயிலில் அதற்கான பதாகையை வைத்தனர். இதனால் திருவிழா முடியும் வரை, கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என கோவில் தீட்சிதர்கள் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகைக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சிதம்பரம் தீட்சிதர்கள் தமிழக அரசின் அரசாணையை மீறினார்களா?

கடந்த ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி வழிபட பெண் ஒருவர் சென்ற நிலையில், அதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் சர்ச்சையாகி தீட்சிதர்களின் செயலுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து கனகசபை மீது ஏறி வழிபடலாம் என கடந்த ஆண்டு மே மாதம் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.

தற்போது, 4 நாட்களுக்கு கனகசபையில் வழிபட பொதுமக்களுக்குத் தடை விதித்து தீட்சிதர்கள் பதாகைகளை வைத்தது தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரானது என்பதால், இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை அம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார், காவல்துறையினர் பதாகையை அகற்ற வந்தனர்.

சிதம்பரம் தில்லைக்காளி கோவில் செயல் அலுவலர் சரண்யா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் சிதம்பரம் தாசில்தார் செல்வகுமாருடன் கோவிலுக்குள் சென்றனர். கோவிலுக்குள் கனகசபை அருகே சென்ற செயல் அலுவலர் சரண்யா, `பக்தர்கள் கனகசபை மேல் ஏறக்கூடாது` என்று இருந்த பதாகையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு அங்கிருந்த தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதாகையை ஏன் அகற்றுகிறீர்கள் என்று கூறி அவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

பதிலுக்கு செயல் அலுவலர் சரண்யா மற்றும் அலுவலர்கள் அரசாணையை மீறி கனகசபை மீது ஏறக்கூடாது எனப் பதாகை வைக்கக்கூடாது. இதை உடனடியாக அகற்றுங்கள் எனக் கூறியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவில்: கனக சபை என்றால் என்ன? தீட்சிதர்கள் பதாகையை வைத்தது ஏன்? - முழு விவரம்

ஆனால் தீட்சிதர்கள் பதாகையை அகற்றாமல் போலீசார் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதனால் பதாகையை அகற்றாமல் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் திரும்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறையின் சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா, “சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி எல்லோரும் சாமி தரிசனம் செய்யலாம் என்பதுதான் அரசாணை.

அந்த அரசாணை நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்பதை தினமும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஆனால் அதற்கு மாறாக தீட்சிதர்கள் இப்போது கனகசபை மேல் ஏறக்கூடாது என பதாகை வைத்துள்ளனர்,” என்று கூறினார்.

அதோடு அந்தப் பதாகையை அகற்றச் சென்றபோது, தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அறநிலையத்துறையின் இணை ஆணையரிடம் அனுமதி பெற்றே பதாகை வைத்துள்ளதாகத் தவறான தகவலைக் கூறியதாகவும் செயல் அலுவலர் சரண்யா கூறுகிறார்.

பதாகையை அகற்ற தீட்சிதர்கள் மறுத்துவிட்டதாகக் கூறும் அவர், இதுகுறித்து காவல்துறையில் புகாரளிக்க முடிவு செய்துள்ளார்.

கனக சபையில் பக்தர்கள் ஏறக்கூடாது என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது ஏன்?

கனக சபையில் பக்தர்கள் ஏறக்கூடாது என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது ஏன்?

நடந்த சம்பவங்கள் குறித்து சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் சிவராம தீட்சிதர் பிபிசி தமிழிடம் கூறுகையில், “இன்று முதல் கோவிலில் பூஜைகள் நிறைய இருப்பதால் நான்கு நாட்களுக்கு பக்தர்கள் கனகசபை மீது ஏறுவதற்கு அனுமதி இல்லை. அதன்பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இன்று தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் அந்தப் பதாகையை எடுக்க சொன்னார்.

ஆனால் நாங்கள் கடலூரில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் அனுமதி பெற்றுத்தான் வைத்திருக்கிறோம் என்று கூறினேன்,” என்கிறார்.

மேலும் தீட்சிதர்களின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்துதான் இந்தப் பதாகையை வைத்திருப்பதாகவும் அவர் நம்மிடம் தெரிவித்தார். அப்படி பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுத்து பதாகையை வைத்ததால், அதைத் திரும்பவும் எடுக்க வேண்டுமெனில் தீட்சிதர்களின் பொதுக்குழு கூட்டத்தில்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தான் செயல் அலுவலரிடம் கூறியதாகவும் அவர் கூறினார்.

“புதன்கிழமை முதல் பக்தர்கள் தொடர்ந்து கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம். செயல் அலுவலர், தாசில்தார் ஆகியோர் ஒன்று சேர்ந்து அறிவிப்புப் பலகையை அகற்றுமாறு கூறினார்கள். எழுத்துப்பூர்வமாகக் கொடுங்கள் எடுக்கிறோம் எனக் கூறினோம். போர்டில் எழுதி இருந்ததை அழித்தனர்,” என்கிறார் சிவராம தீட்சிதர். காவல்துறை இந்தச் சம்பவத்தின்போது அவர்களுக்குப் பாதுகாப்பாக வந்ததாகவும் செயல் அலுவலர் மீது தீட்சிதர்கள் புகார் கொடுக்க இருப்பதாகவும் சிவராம தீட்சிதர் தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவில்: கனக சபை என்றால் என்ன? தீட்சிதர்கள் பதாகையை வைத்தது ஏன்? - முழு விவரம்

இந்தப் பதாகை வைக்கப்பட்டது, பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதியே என்று கூறும் அவர், “எங்களின் பணிகளைச் செய்யவிடாமல் அதிகாரிகள் தொந்தரவு செய்து வருகின்றனர். பக்தர்களின் நலன் கருதி அபிஷேகத்தின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் படிக்கட்டுகளில் அமரக்கூடாது எனவும் போர்டு வைக்க உள்ளோம்.

அதற்காகத் தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலில் தரிசனத்தை விரைவாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். பூஜைகள் அதிகம் இருப்பதால் சில நேரங்களில் தாமதமாவதைத் தவிர்க்க முடியாது,” என்றும் தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை விவகாரம் தொடர்பாக இணை ஆணையர் பரணிதரனை பிபிசி தமிழ் தொடர்புகொண்டு கேட்டபோது,

கனக சபை மீது பக்தர்கள் அனைவரும் நின்று தரிசனம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதைச் செயல்படுத்துவதற்காக தன்னைப் போன்ற அதிகாரிகளை நியமனம் செய்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பிபிசி தமிழிடம் கூறுகிறார் அறநிலையத்துறையின் இணை ஆணையர் பரணிதரன்.

இந்த நிலையில் “தீட்சிதர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது வருத்தம் அளிக்கிறது” என்று கூறுகிறார் பரணிதரன். “இது தொடர்பாக சார் ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக நல்ல முடிவு வரும். இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்பதற்காகவே தமிழ்நாடு அரசு இந்த ஆணையைப் பிறப்பித்தது” என்றும் கூறினார்.

தீட்சிதர்கள் பக்தர் மீது தாக்குதல் நடத்தினார்களா?

சிதம்பரம் நடராஜர் கோவில்: கனக சபை என்றால் என்ன? தீட்சிதர்கள் பதாகையை வைத்தது ஏன்? - முழு விவரம்

பட மூலாதாரம், SOCIAL MEDIA

கனகசபை சர்ச்சை ஒருபுறம் இருக்க, பக்தர் மீது தீட்சிதர் தாக்குதல் நடத்தியதாகவும் வீடியோ வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்பு சிவபுரி கிராமத்தைச் சேர்ந்த கார்வண்ணன் என்பவர் சாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளார். அப்போது, கோவிலில் உள்ள பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. கார்வண்ணன் எதிரில் நின்றதாகவும் அவரைத் தள்ளி நிற்கும்படி தீட்சிதர்கள் சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தீட்சிதர் ஒருவர் கார்வண்ணனை கன்னத்தில் அறையும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய ஐயப்ப தீட்சிதர், “சாமி புறப்பாடு பத்து நாட்களுக்கு 2 வேளையும் நடைபெறும். சாமியைத் தோளில் தூக்கிக்கொண்டு வருவார்கள். அந்த வாகனம் மிகவும் கனமாக இருக்கும். அப்படியிருக்கும்போது, நீங்கள் குறிப்பிடும் நபர் குறுக்கே நின்றுள்ளார்.

அவரைத் தள்ளி நிற்கும்படி கூறியுள்ளார்கள். அவர் கேட்கவில்லை. எனவே, அவரை தீட்சிதர்கள் நகர்த்திதான் விட்டார்கள். இதைத்தான் அடித்துவிட்டதாக அவதூறு பரப்புகின்றனர்,” என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கார்வண்ணன் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் கனகசபாபதி, ஸ்ரீ வர்ஷன் தீட்சிதர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனக சபையில் ஏற அனுமதிக்குமாறு காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டம்

இந்த நிலையில் ஜூன் 27ஆம் தேதியன்று மாலை 5 மணிக்கு காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதா தலைமையில் கனகசபை படியில் அமர்ந்து தீட்சிதர்களுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. பரபரப்பான இந்தச் சூழலில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஒரு வழியாக கனகசபை மீது அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் சென்று தரிசனம் செய்தனர் என்ற போதிலும் இரு தரப்புக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கடந்த ஆண்டிலேயே கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்வதற்கு தீட்சிதரிடம் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டதாகக் கூறுகிறார்.

“நீதிமன்றத் தீர்ப்பில், கோவில் பொதுவானது, மக்களுக்கானது. இது தீட்சிதர்களுக்குச் சொந்தமானது அல்ல எனத் தெளிவாக நீதியரசரகள் கூறியுள்ளார்கள். இது தீட்சிதர்களுக்குச் சொந்தமானது அல்ல,” என்று கூறுகிறார் ராதா.

“அவர்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இந்தக் கோவிலை நிர்வகித்து வரலாம் என்றும் கோவிலில் தவறுகள் நடைபெற்றாலோ, மக்களிடமிருந்து வரும் புகார்கள் அடிப்படையிலோ இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கலாம்” என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர்களுக்கும் இதே நிலைதான் என்று கூறும் அவர், “கடந்த முறை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வந்தபோதும் அவரை அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கிடைத்த நீதியின் அடிப்படையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அதில் கனகசபையில் பக்தர்கள் ஏறி வழிபடலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது நடைமுறைக்கும் வந்தது. இந்த நிலையில் முன்னறிவிப்பின்றி தீட்சிதர்கள் அறிவிப்புப் பலகை வைத்தனர். அதைத் தொடர்ந்து நாங்கள் போராட்டம் நடத்தினோம். சர்ச்சைகள் எழுந்தன. அறநிலையத்துறை அதிகாரிகளும் பதாகையை அகற்றினர்,” என்று கூறினார்.

கனகசபை மீது ஏறி தேவாரம் திருவாசகம் பாடிய தெய்வத் தமிழ்ப் பேரவையினர்

கனக சபையில் பக்தர்கள் ஏறக்கூடாது என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது ஏன்?

சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு அரசாணை நடைமுறையில் உள்ள நிலையில், கனக சபை மேடையில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து பதாகை வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தெய்வத் தமிழ்ப் பேரவையினர் சிவனடியார்களுடன் ஜூன் 28ஆம் தேதியன்று காலையில், கனகசபை மேடையில் ஏறி தேவாரம், திருவாசகம் ஓதி வழிபடுவதாக அறிவித்தனர்.

இதன் காரணமாக கோவிலில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்ப்பதற்காக, சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக நகர ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

இதன்படி இன்று காலை 10.00 மணிக்கு சிதம்பரம் கீழ சன்னதி வழியாக தேவாரம் திருவாசகம் ஓதி சிவ வாத்தியங்களுடன் தெய்வத்தமிழ்ப் பேரவை சார்ந்த இருபதிற்கும் மேற்பட்டவர்கள் கோவிலுக்கு சென்றனர். பின்னர் காவல்துறை பாதுகாப்போடு கனக சபை மேடையில் நின்று தேவாரம் திருவாசகம் பாடினர்.

அப்போது அங்கிருந்த தீட்சிதர்கள் தரிசனம் மட்டுமே செய்ய வேண்டும் இங்கு பாடக்கூடாது வேண்டுமானால் மனதிற்குள்ளேயே பாடுங்கள் என சிவனடியார்களை தடுத்தனர்.

சிவனடியார்கள் தேவார திருவாசக பதிகங்கள் பாடியபடியே வழிபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தெய்வத்தமிழ்ப் பேரவை சிதம்பரம் நகர பொறுப்பாளர் ஆ.குபேரன் பேசியபோது, “தீட்சிதர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதும், சிவ பக்தர்களைத் தாக்குவதும் தகாத வார்த்தைகளால் ஏசுவதும் தொடர்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபட்டு வழக்குகள் பதியப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தாக்குதல், தீண்டாமை வழக்குகள் போடப்பட்டவர்கள் சுதந்திரமாக நடந்து வருவது, அவர்களுக்கு பக்தர்களைத் தாக்குவதற்கு துணிச்சலைத் தருகிறது எனவே வழக்குகள் பதிவதோடு மட்டுமல்லாமல் அவர்களைக் கைது செய்ய வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறினார். சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசே ஏற்று நடத்த தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

கனக சபை என்றால் என்ன?

கனக சபையில் பக்தர்கள் ஏறக்கூடாது என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது ஏன்?

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனக சபை என்றால் என்ன என்று டாக்டர் எஸ்.வி.அய்யப்ப தீட்சிதர் கூறும்போது, நடராஜர் கோவிலில் ஐந்து சபைகள் உள்ளதாகக் கூறினார்.

“நடராஜர் இருக்கும் பொன்னம்பலம் என்று சொல்லக்கூடிய சித்சபை, நந்திகேஸ்வரர் இருக்கக்கூடிய கனக சபை, மூன்றாவது கொடி மரத்துக்கு மேல் எதிரில் நடன சபை, நான்காவதாக பேரம்பலம் என்று சொல்லக்கூடிய தேவசபை.

இதுதான் கோவில் உற்சவ மூர்த்திகள் நகை ஆபரணங்கள் இருக்கக்கூடிய இடமாகும். ஐந்தாவது ராஜசபை எனும் ஆயிரம் கால் மண்டபம் என ஐந்து சபைகள் உண்டு,” என்று விளக்குகிறார் அவர்.

கனக சபை இருக்கும் இடம்தான் மக்கள் நின்று வழிபாடு செய்யக்கூடிய இடம். “மற்ற கோவில்களில் ஆகம விதிப்படி கற்ப கிரகம், நந்தி மண்டபம் அர்த்தமண்டபத்தில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.”

“வெளியில் எந்தக் கோவிலுக்குச் சென்று பார்த்தாலும் இதைத் தெரிந்து கொள்ளலாம். மகா மண்டபத்தில் இருந்து மட்டுமே வழிபடலாம். ஆனால் நமது கோவிலில் அர்த்த மண்டபத்தில் நின்று வழிபாடு செய்யலாம்.

நான்கு நாட்களுக்கு பாதுகாப்பு கருதியே பதாகை வைக்கப்பட்டது அதைப் புரிந்து கொள்ள வேண்டும். தற்பொழுது இங்கு உள்ளவர்கள் எங்களுக்கு இடையூறு தந்து கொண்டிருக்கிறார்கள். அதை இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்,” என்று கூறினார்.

அறநிலையத்துறை அதிகாரிகள் மீது தீட்சிதர்கள் குற்றச்சாட்டு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் வழிபாட்டு முறைகளுக்கு இடையூறு செய்யும் வகையில் காவல்துறையினர் மூலம் இந்து சமய அறநிலையத் துறையினர் அச்சுறுத்துவதாக பொது தீட்சிதர்கள் குழு செயலர் சிவராம் தீட்சிதர் குற்றம் சாட்டினார்.

ஆனால், ஆனித் திருமஞ்சனம் உற்சவம் நடைபெறும் நேரத்தில் பூஜை வழிபாடுகளுக்கும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும் இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் கோவில் எதிர்ப்பாளர்களின் தூண்டுதல் காரணமாக இந்து சமய அறநிலையத்துறையினரும் அவர்களுக்கு உதவியாக காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் கோவிலுக்குள் வந்து அச்சுறுத்துவதாக சிவராம் தீட்சிதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, சிதம்பரம் நடராஜர் கோவில் இந்து சமய அறநிலை துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “சிதம்பரம் கோவிலை பொறுத்தவரையில் தீட்சிதர்கள் அந்தக் கோவிலில் ஓர் அதிகார மையத்தை ஏற்படுத்தி, செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்,” என்று கூறினார்.

சேகர் பாபு

மேலும், வழிபாட்டு முறைகளை மாற்றும் எண்ணம் இந்து சமய அறநிலையத்துறைக்கு இல்லையென்று கூறிய அவர், “கோவிலில் உள்ள ரொக்கப் பணம் எவ்வளவு என்பதைத் தணிக்கை செய்யவும் தங்க நகைகள் மற்றும் ஆபரணங்களைக் கணக்கீடு செய்வதற்கு அனுமதி மறுக்கிறார்கள்.

வரவுகள் குறித்து தகவல் தெரிவிக்க மறுப்பதோடு தங்கள் சொந்த நிறுவனத்தைப் போல் கோவிலைப் பாவித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் நன்கொடையால் இந்தக் கோவில் செயல்படுகிறது,” என்றும் குற்றம் சாட்டினார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கனக சபையின்மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க “சன்னிதானத்தில் இருப்பவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபட்டால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றும் சேகர் பாபு பேசினார்.

இது சட்டத்தின்படி நடக்கும் ஆட்சி என்றும் சட்ட மீறல்கள் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறிய சேகர் பாபு, “ஒட்டுமொத்த பக்தர்களும் இந்து சமய அறநிலையத்துறைதான் சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன் அடிப்படையில், ஆவணங்கள் திரட்டப்பட்டு, அதற்கான பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகிறது,” என்றும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: