ஆவணப்பட எடிட் தொடர்பாக டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட பிபிசி - இழப்பீடு வழங்க மறுப்பு

பட மூலாதாரம், Reuters / AFP via Getty Images
- எழுதியவர், நூர் நாஞ்சி
- பதவி, பிபிசி
பிபிசி பனோரமா ஆவணப் படத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 6, 2021அன்று வழங்கிய உரையின் வெவ்வேறு பகுதிகளை இணைத்து எடிட் செய்ததற்காக அவரிடம் பிபிசி மன்னிப்பு கேட்டுள்ளது. ஆனால் இழப்பீட்டுக்கான அவரது கோரிக்கைகளை நிராகரித்துள்ளது.
இந்த எடிட் "அதிபர் டிரம்ப் வன்முறை நடவடிக்கைக்கு நேரடி அழைப்பு விடுத்துள்ளார் என்ற தவறான எண்ணத்தை" கொடுத்துள்ளதாகவும், இந்த 2024 நிகழ்ச்சி மீண்டும் திரையிடப்படாது எனவும் பிபிசி கூறியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் காட்டப்பட்டதைத் திரும்பப் பெற்று, மன்னிப்பு கேட்டு, இழப்பீடு வழங்காவிட்டால், பிபிசி மீது ஒரு பில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக டிரம்பின் வழக்கறிஞர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தின் விளைவாக ஞாயிற்றுக்கிழமை பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவி, செய்திகள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்திருந்தனர்.
பிபிசி நியூஸ் கருத்துக்காக வெள்ளை மாளிகையை அணுகியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு நியூஸ்நைட்டில் ஒளிபரப்பப்பட்ட, இதே போல திருத்தப்பட்ட மற்றொரு காணொளியை டெய்லி டெலிகிராஃப் வெளியிட்டது. அது வெளியான சில மணிநேரம் கழித்து பிபிசியின் மன்னிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிபிசி தனது இணையதளத்தின் திருத்தங்கள் மற்றும் தெளிவுபடுத்தல்கள் பிரிவில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டது. அதில், டிரம்பின் உரை எடிட் செய்யப்பட்ட விதம் குறித்த விமர்சனங்களைத் தொடர்ந்து பனோரமா நிகழ்ச்சி மதிப்பாய்வு செய்யப்பட்டதாக பிபிசி கூறியது.
அந்த அறிக்கையில், "நாங்கள் எடிட் செய்த விதம், உரையின் வெவ்வேறு பகுதிகளைக் காட்டுகிறோம் என்ற தெளிவில்லாமல், உரையின் ஒரு தொடர்ச்சியான பகுதியைக் காட்டுவது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம், மேலும் இது அதிபர் டிரம்ப் வன்முறை நடவடிக்கைக்கு நேரடி அழைப்பு விடுத்தார் என்ற தவறான தோற்றத்தையும் ஏற்படுத்தியது," என்று பிபிசி கூறியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பெறப்பட்ட கடிதத்திற்குப் பதிலளிக்கும் விதமாக பிபிசியின் வழக்கறிஞர்கள் அதிபர் டிரம்பின் சட்டக் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக பிபிசி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
அறிக்கையில், "பிபிசி தலைவர் சமீர் ஷா வெள்ளை மாளிகைக்கு ஒரு தனிப்பட்ட கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் அதிபரின் 2021 ஜனவரி 6ஆம் தேதி உரையை எடிட் செய்ததற்காக அவரும் நிறுவனமும் வருந்துவதாகத் தெளிவுபடுத்தியுள்ளார்" என பிபிசி தெரிவித்துள்ளது.
டிரம்பின் 2021ஆம் ஆண்டு உரையில், "நாம் கேபிடல் நோக்கி நடக்கப் போகிறோம்; நமது செனட்டர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண்களை உற்சாகப்படுத்தப் போகிறோம்" என்றார்.
கூடுதலாக, "காணொளி எடிட் செய்யப்பட்ட போக்கிற்கு பிபிசி தீவிரமாக வருந்துகின்ற அதேவேளையில், இழப்பீடு கோருவதற்கு இதில் எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்பதால் அதை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம்" என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே உரையில், 50 நிமிடங்களுக்குப் பிறகு, " நாம் போராடுவோம். நாம் கடுமையாகப் போராடுவோம்" எனக் கூறியிருந்தார்.
ஆனால், பனோரமா ஆவணப் படத்தில் அவர் கூறியதாகக் காட்டப்பட்ட உரையில், "நாம் கேபிடல் நோக்கி நடக்கப் போகிறோம்... நான் உங்களுடன் இருப்பேன். நாம் போராடுவோம். நாம் கடுமையாகப் போராடுவோம்" என்று இருக்கிறது.
ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய டிரம்ப், தனது உரை "படுகொலை செய்யப்பட்டது" என்றும், அது காட்டப்பட்ட விதம் பார்வையாளர்களை "ஏமாற்றியது" என்றும் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரம்பின் வழக்கறிஞர்களிடம் இருந்து பிபிசி கடிதத்தைப் பெற்றது. ஆவணப் படத்தை "முழுமையாகவும் நியாயமாகவும் திரும்பப் பெறவும்" அந்தக் கடிதத்தில் கோரப்பட்டதோடு, மன்னிப்பையும் கோரியது. மேலும், பிபிசி "அதிபர் டிரம்புக்கு ஏற்பட்ட தீங்குகளுக்குப் பொருத்தமான இழப்பீட்டை" வழங்க வேண்டுமென்றும் கூறியது.

பிபிசியின் பதில் என்ன?
டிரம்பின் சட்டக் குழுவுக்கு எழுதிய கடிதத்தில் ஐந்து முக்கிய வாதங்களை பிபிசி முன்வைக்கிறது.
முதலாவதாக, பிபிசிக்கு அதன் அமெரிக்க சேனல்களில் பனோரமா எபிசோடை விநியோகிக்க உரிமை இல்லை என்றும் தான் அதை விநியோகிக்கவில்லை என்றும் கூறியுள்ளது.
ஆவணப்படம் பிபிசி ஐபிளேயரில் கிடைத்தபோது, அது பிரிட்டனில் உள்ள பார்வையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
இரண்டாவதாக, "ஆவணப்படம் டிரம்புக்கு தீங்கு விளைவிக்கவில்லை. ஏனெனில் அவர் இது நடந்த பிறகு விரைவில் மீண்டும் (அதிபராக) தேர்வு செய்யப்பட்டார்" என்று பிபிசி கூறியுள்ளது.
மூன்றாவதாக, "வீடியோ கிளிப்பு தவறாக வழிநடத்துவதற்காக வடிவமைக்கப்படவில்லை, ஆனால் ஒரு நீண்ட பேச்சைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எடிட் தீய எண்ணத்துடன் செய்யப்படவில்லை" என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
நான்காவதாக, "இந்த வீடியோ கிளிப்பு ஒருபோதும் தனிமைப்படுத்திப் பார்ப்பதற்கான ஒன்றாகக் கருதப்படவில்லை என்றும், மாறாக இது ஒரு மணிநேர நிகழ்ச்சியின் 12 விநாடிகளே. இதுபோக அந்த நிகழ்ச்சி டிரம்புக்கு ஆதரவாகவும் நிறைய குரல்களைக் கொண்டிருந்தது" எனத் தெரிவித்துள்ளது.
இறுதியாக, அமெரிக்காவில், பொதுப் பிரச்னைகள் அல்லது அரசியல் தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்தும்போது சட்டத்தின் கீழ் மிகுந்த பாதுகாப்பு கிடைக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.
"பிபிசிக்குள் இருக்கும் ஒருவர், பிபிசியிடம் சரியான விளக்கமும் வலுவான வாதங்களும் இருப்பதாக அங்கிருக்கும் பலர் உறுதியாக நம்புவதாகக் கூறினார்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












