ரஷ்யா, பிரான்ஸ், மெக்சிகோ, டென்மார்க்கிடம் அமெரிக்கா விலைக்கு வாங்கிய நிலப்பகுதிகள் எவை?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கில்லர்மோ டி. ஓல்மோ
- பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு வேண்டும் என விரும்புகிறார். அதைத் தன்னகத்தே கொண்டுள்ள டென்மார்க் ராஜ்ஜியத்திடமிருந்து வாங்கும் சாத்தியக்கூறுகளையும் அவர் முன்வைத்துள்ளார்.
அதிபர் தனது பதவியேற்பு உரையில், "தனது செல்வத்தை அதிகரித்து, தனது நிலப்பரப்பை விரிவாக்கி, நமது கொடியைப் புதிய மற்றும் அழகான எல்லைகளுக்குக் கொண்டு செல்லும் ஒரு நாடாக அமெரிக்கா தன்னை மீண்டும் முன்னிறுத்தும்," என்று உறுதியளித்தார்.
மிகப்பெரிய தீவைத் தனது நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற அவரது கனவு, அமெரிக்க வரலாற்றின் பிற காலக்கட்டங்களை நினைவுபடுத்துகிறது.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியர் வால்டர் ஏ. மெக்டூகல் பிபிசி முண்டோவிடம் கூறுகையில், "டிரம்பின் கொள்கைகள் 1823 முதல் மேற்கு அரைக்கோளத்தில் ஐரோப்பியத் தலையீடுகளுக்கு எதிராக அமெரிக்காவின் விரிவாக்கத்தை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட 'மன்றோ கோட்பாட்டின்' 'வாக்களிக்கப்பட்ட பூமி' மரபினை நினைவுபடுத்துகின்றன" என்றார்.
மிசௌரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியர் ஜே செக்ஸ்டன் மற்றொரு ஒப்புமையைக் காண்கிறார்: "கிரீன்லாந்து விஷயத்தைப் போலவே, அந்த நிலப்பரப்புகள் மற்ற வல்லரசுகளின் கைகளில் விழுவதற்கு முன்பே அமெரிக்கா அவற்றைக் கைப்பற்ற வேண்டும் என்று வாஷிங்டன் வாதிட்டது."
உண்மையில், அமெரிக்காவை இன்றுள்ள பரந்த நாடாக மாற்றிய நில விரிவாக்கம், நாடு நிறுவப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியது.
போர்கள், பழங்குடியினரை அடிபணியச் செய்தல், குடியேறிகளின் இடப்பெயர்வு அல்லது ஐரோப்பிய வல்லரசுகளுடனான ஒப்பந்தங்கள் ஆகியவை வளர்ந்து வந்த இந்த வல்லரசின் நில விரிவாக்கத்திற்கான பொதுவான வழிகளாக இருந்தன.
ஆனால் கிரீன்லாந்து விஷயத்தில் டிரம்ப் முன்வைத்தது போல, பிற இறையாண்மை கொண்ட நாடுகளிடமிருந்து நிலங்களை விலைக்கு வாங்குவதும் அமெரிக்க தலைவர்கள் தங்கள் நாட்டை விரிவாக்கப் பயன்படுத்திய மற்றொரு வழிமுறையாகும்.
அமெரிக்கா நிலப்பகுதிகளை விலைக்கு வாங்கிய வரலாற்றுச் சம்பவங்களை இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம். சில சமயங்களில் 1819-ல் ஸ்பெயின் நாட்டிடமிருந்து ஃபுளோரிடாவைப் பெற்றது போல, நிலத்தை விட்டுக்கொடுத்த வெளிநாட்டு வல்லரசுகளுக்கு இழப்பீடு வழங்க வாஷிங்டன் ஒப்புக்கொண்ட பிற தருணங்களும் உண்டு. அவை நேரடியான விற்பனை ஒப்பந்தங்கள் அல்ல.
லூசியானா கொள்முதல் (1803)

பட மூலாதாரம், Getty Images
அப்போதைய அதிபர் தாமஸ் ஜெபர்சன், நெப்போலியனின் பிரான்சிடமிருந்து லூசியானா நிலப்பகுதியை வாங்க எடுத்த முடிவு, புதிய தேசத்தின் முதல் பெரிய விரிவாக்கமாகும்.
தற்போதைய ஹைத்தியில் நடந்த அடிமைப் புரட்சிக்குப் பிறகு பிரான்சிற்கான வெளிநாட்டுப் பேரரசை உருவாக்கும் கனவைக் கைவிட்ட நெப்போலியன், தனக்கு மூலோபாய முக்கியத்துவம் குறைந்த, மக்கள் நடமாட்டம் குறைவான அந்த நிலப்பகுதியை விற்க ஒப்புக்கொண்டார்.
அந்த விற்பனைத் தொகையை ஐரோப்பாவில் தனது பேரரசை விரிவாக்க அவர் நடத்திய போர்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அந்தப் படைத்தளபதி கருதினார்.
அப்போதைய லூசியானா என்பது அதே பெயரிலான இன்றைய மாநிலத்தை விட மிகப் பெரிய நிலப்பரப்பாகும். ஜெபர்சன் மேற்கு நோக்கிய விரிவாக்கத்தில் அமெரிக்காவின் எதிர்காலத்தைக் கண்டார்.
அதிபர் மிசிசிபி பள்ளத்தாக்கு மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைக்க விரும்பினார்; மேலும் அக்காலத்தில் பலரும் அஞ்சிய அமெரிக்காவில் பிரெஞ்சுத் தலையீட்டைத் தவிர்க்க விரும்பினார்.
அமெரிக்க மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் ஓர் உடன்பாட்டை எட்டின. நவம்பர் 1803-ல் லூசியானா அமெரிக்காவிற்குச் சொந்தமானது. இதற்காக அமெரிக்கா 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை (அக்கால மதிப்பு) வழங்கியது.
இந்த மிகப்பெரிய இணைப்பானது, இன்றைய தெற்கே உள்ள லூசியானா மாநிலம் முதல் வடக்கே உள்ள வடக்கு டகோட்டா மற்றும் மொன்டானா வரையிலான பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இது யூனியனில் இரண்டு மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான நிலத்தைச் சேர்த்தது, இதன் மூலம் நாட்டின் பரப்பளவு கிட்டத்தட்ட இரட்டிப்பானது.
மேற்கு நோக்கிய விரிவாக்கம் தொடங்கியது.
மெக்சிகோ இழந்த நிலப்பரப்பு (1848)

பட மூலாதாரம், Getty Images
1840-களில், அமெரிக்கப் பொது மக்களில் பெரும்பாலோர் பசிபிக் கடற்கரை வரை மேற்கே விரிவாக்கம் செய்வதே தங்களின் "தவிர்க்க முடியாத விதி" என்று நம்பினர்.
இறுதியில் அவர்கள் அதை மெக்சிகோவின் இழப்பு மூலம் செய்தார்கள்.
இந்த விரிவாக்கக் கொள்கையின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான அதிபர் ஜேம்ஸ் கே. போக், 1845-ல் வெள்ளை மாளிகைக்கு வந்தபோது டெக்சாஸ் மீதான கட்டுப்பாட்டிற்காக மெக்சிகோவுடனான பிரச்னையை எதிர்கொண்டார்.
அதற்கு அடுத்த ஆண்டு, எல்லையில் அமெரிக்க மற்றும் மெக்சிகன் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அவர் மெக்சிகோ மீது அமெரிக்க நாடாளுமன்றத்தை போர் அறிவிக்கச் செய்தார். ஆனால் மோதலுக்கான காரணங்கள் ஆழமானவை.
"அப்போது மெக்சிகோவிற்குச் சொந்தமான கலிஃபோர்னியா மீது அமெரிக்கா தனது ஆர்வத்தைக் காட்டியிருந்தது. அது அமெரிக்காவின் பொருளாதார ரீதியாக மிகவும் துடிப்பான பகுதிகளில் ஒன்றாக இருந்ததுடன், ஆசியாவுடன் வர்த்தகம் செய்யத் தேவையான ஆழ்கடல் துறைமுகங்களையும் கொண்டிருந்தது" என்று செக்ஸ்டன் நினைவுகூருகிறார்.
"ஆனால் எந்தவொரு மெக்சிகன் அரசாங்கமும் கலிபோர்னியாவை விற்பதை ஏற்றுக்கொண்டு ஆட்சியில் நீடிப்பதாக நடிக்க முடியாது" என்று செக்ஸ்டன் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தப் போர் அமெரிக்காவின் வெற்றியுடன் முடிந்தது. 1848 பிப்ரவரியில் 'குவாடலூபே-இடால்கோ' ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி டெக்சாஸ், கலிஃபோர்னியா, நியூ மெக்சிகோ, அரிசோனா, நெவாடா மற்றும் கொலராடோ, வயோமிங், கன்சாஸ், ஓக்லஹோமாவின் சில பகுதிகள் அமெரிக்காவிற்கு கிடைத்தன.
அமெரிக்கா இதற்காக 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது. ஆனால், செக்ஸ்டன் கூறுவது போல, "போரில் தோற்காமல் இருந்திருந்தால் மெக்சிகன் மக்கள் ஒருபோதும் இந்த நிலங்களை விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்கள்; இது துப்பாக்கி முனையில் நடந்த விற்பனை."
மெக்சிகோ தனது முந்தைய நிலப்பரப்பில் பாதியை இழந்தது. இந்தத் தோல்வியும் அதன் விளைவாக ஏற்பட்ட நிலப் பிரிவினையும் அந்த தேசத்திற்கு ஒரு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தின.
லா மெசியா விற்பனை (1853)
சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1853-ல் மெக்சிகோவும் அமெரிக்காவும் இன்றைய அரிசோனா மற்றும் நியூ மெக்சிகோ மாநிலங்களின் தெற்கில் மெக்சிகோவுக்கு சொந்தமான ஒரு சிறிய நிலப்பகுதி விற்பனையை ஒப்புக்கொண்டன.
மெக்சிகோவில் 'லா மெசியா விற்பனை' என்றும் அமெரிக்காவில் 'காட்ஸ்டன் கொள்முதல்' என்றும் அறியப்படும் இது, ஒரு கண்டம் விட்டு கண்டம் செல்லும் ரயில் பாதையை அமைக்க அமெரிக்காவிற்கு இருந்த ஆர்வம் மற்றும் மெக்சிக அரசாங்கத்தின் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் விளைவாகும். இதற்காக 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை மெக்சிகோ ஏற்றுக்கொண்டது.
செக்ஸ்டன் கூற்றுப்படி, "தெற்கின் அடிமை உரிமையாளர்கள்தான் பசிபிக் வரை செல்லும் ரயில் பாதையை விரும்பினர். வடக்கிலுள்ள மாநிலங்கள் பலன் பெறுவதைத் தவிர்க்க அவர்கள் நியூ ஆர்லியன்ஸ் வரை செல்லும் ஒரு தெற்கு ரயில் பாதையை உருவாக்கத் தூண்டினர்."
ரஷ்யாவிடமிருந்து அலாஸ்காவை வாங்குதல் (1867)

பட மூலாதாரம், Al Drago/Getty
1867-ல் அப்போதைய வெளியுறவுச் செயலாளர் வில்லியம் சீவார்ட், ஜார் இரண்டாம் அலெக்சாண்டரின் ரஷ்ய அரசாங்கத்திடமிருந்து தொலைதூர ஆர்க்டிக் பகுதியான அலாஸ்காவை வாங்குவதில் காட்டிய ஆர்வத்தைப் பலர் புரிந்துகொள்ளவில்லை.
அலாஸ்கா ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீவார்ட் நம்பினார். ஏனெனில் இது வட அமெரிக்காவில் பிரிட்டிஷ் தலையீட்டின் அபாயத்தைத் தவிர்க்கும் என்றும், பசிபிக் பகுதியில் வளமான மீன்பிடி இடங்களை அமெரிக்காவிற்கு வழங்கும் என்றும் அவர் கருதினார். அலாஸ்காவை வாங்க ரஷ்யாவுடன் 7.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்தார்.
இந்தக் கொள்முதல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அக்கால நாளிதழ்கள் இதனை "சீவார்டின் முட்டாள்தனம்" (Seward's folly) என்று கேலி செய்தன.

பட மூலாதாரம், Getty Images
ஜார் காலத்து ரஷ்யா, மிகக் குறைந்த மதிப்பைக் கொண்டதும், நிர்வகிப்பதற்கு அதிகச் செலவு பிடித்ததும், தனது முக்கிய எதிரியாக இருந்த கிரேட் பிரிட்டனின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகக் கூடியதுமாகக் கருதப்பட்ட ஒரு நிலப்பகுதியை (அலாஸ்காவை) விற்பதன் மூலம் அதிலிருந்து விடுபட நினைத்தது.
விமர்சனங்கள் இருந்தபோதிலும், அமெரிக்க நாடாளுமன்றம் இந்த விற்பனை ஒப்பந்தத்தை உறுதி செய்தது. அலாஸ்கா அமெரிக்காவின் ஒரு பகுதியானது.
பல தசாப்தங்களுக்குப் பிறகு, தங்கம் மற்றும் பெரிய எண்ணெய் வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், பனிப்போரின் போது அலாஸ்கா பெற்ற ராணுவ முக்கியத்துவமும் அலாஸ்காவை வாங்கும் சீவார்டின் முடிவை சரி என்று நிரூபித்தன.
டென்மார்க்கிடம் வெர்ஜின் தீவுகளை (U.S. Virgin Islands) வாங்குதல் (1917)

பட மூலாதாரம், Sean Gallup/Getty
அமெரிக்கா கடைசியாக ஒரு நிலப்பகுதியை விலைக்கு வாங்கியது டென்மார்க்கிடமிருந்துதான் - அதே டென்மார்க் இப்போது கிரீன்லாந்தை விற்க மறுக்கிறது.
அப்போது 'டேனிஷ் மேற்கு இந்தியத் தீவுகள்' என்று அழைக்கப்பட்ட அந்தத் தீவுக் கூட்டங்கள், 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து அமெரிக்க வியூகம் வகுப்பாளர்களால் விரும்பப்பட்டு வந்தன.
முதன்முதலில் மேற்கொள்ளப்பட்ட அந்தத் தோல்வியுற்ற முயற்சியிலும் சீவார்ட் ஒரு முக்கியப் பங்கு வகித்திருந்தார்.
டேனிஷ் வரலாற்றாசிரியர் ஹான்ஸ் கிறிஸ்டியன் பெர்க் ஒரு கட்டுரையில் விளக்குகையில், "உள்நாட்டுப் போருக்குப் பிறகு, கரீபியன் பகுதியின் மூலோபாய நிலைமைகளைக் கருத்தில் கொள்ள வேண்டிய தருணம் வந்தது. சீவார்ட் மெக்சிகோவை இணைப்பதிலும் கரீபியனில் அமெரிக்க விரிவாக்கத்திலும் கவனம் செலுத்தினார்" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
முதலாம் உலகப் போர் வெடித்ததும், ஜெர்மனியின் அச்சுறுத்தலுக்குரிய 'யூ-போட்' நீர்மூழ்கிகள் அமெரிக்கக் கப்பல்களுக்கு ஏற்படுத்திய ஆபத்தும் வாஷிங்டனின் ஆர்வத்தை மீண்டும் தூண்டின; ஜெர்மனி டென்மார்க்கை ஆக்கிரமித்து செயின்ட் தாமஸ் துறைமுகத்தைக் கைப்பற்றிவிடுமோ என்று அமெரிக்கா அஞ்சியது.
பிபிசி முண்டோவிடம் பேசிய டென்மார்க் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தைச் சேர்ந்த அஸ்ட்ரிட் ஆண்டர்சன், 'இப்போது கிரீன்லாந்து குறித்து நாம் கேள்விப்படும் பலவற்றின் எதிரொலிகள் அப்போதும் இருந்தன, ஏனெனில் அமெரிக்கா அடிப்படையில் என்ன சொன்னது என்றால்: "ஒன்று இதை எங்களுக்கு விற்றுவிடுங்கள் அல்லது நாங்கள் இதை ஆக்கிரமிப்போம்" என்பதுதான்' என்று கூறினார்.
இறுதியாக, 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்தத் தீவுகளை விற்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, டென்மார்க் "கிரீன்லாந்து முழுவதும் தனது அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை விரிவுபடுத்துவதற்கு" அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவிக்காது என்று அமெரிக்கா உறுதியளித்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












