You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடும் கோவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து சீனாவில் தீவிரமடையும் போராட்டம்
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு எதிராக பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு எதிராக சிலர் வெளிப்படையாகவே கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
ஷாங்காய் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் குவிந்தனர். அங்கே மக்கள் போலீஸ் வண்டிகளில் அவர்களை தூக்கிச் செல்வதை பிபிசி பார்த்தது.
பெய்ஜிங், நான்ஜிங் நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 பேர் உயிரிழந்ததை அடுத்து, கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. கடந்த வியாழன் அன்று அந்தக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கட்டடம் பகுதியளவு பூட்டப்பட்டிருந்ததால், உள்ளே இருந்தவர்கள் சரியான நேரத்தில் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு, 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த மரணங்களுக்கு கோவிட் கட்டுப்பாடுகள்தான் காரணம் என்று கூறப்படுவதை சீன அதிகாரிகள் மறுத்தார்கள். ஆனால், உரும்கியில் உள்ள அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக, இந்த மரணங்களுக்காக மன்னிப்புக் கோரினர். மேலும், கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதன் மூலம் "ஒழுங்கை மீட்டெடுப்பதாக" உறுதியளித்தனர்.
ஆனாலும், தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அரசின் அதீத கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும், அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு எதிராகவும் ஷாங்காய், உரும்கி உள்பட சீனாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதிகளுக்கு வந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கட்டுப்பாடுகளை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
சீனாவின் மிகப்பெரிய நகரமாகவும், உலகளாவிய நிதி மையமாகவும் உள்ள ஷாங்காயில் நடந்த போராட்டத்தில், சிலர் மெழுகுவர்த்தி ஏற்றியதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பூங்கொத்துகள் வைத்ததையும் காண முடிந்தது.
மற்றவர்கள் "ஷி ஜின்பிங், பதவி விலகு" மற்றும் "கம்யூனிஸ்ட் கட்சி, பதவி விலகு" போன்ற முழக்கங்கள் எழுப்புவதைக் கேட்க முடிந்தது.
இத்தகைய கோரிக்கைகள் சீனாவிற்குள் ஒலிப்பது ஒரு அசாதாரணக் காட்சியாகும். அங்கு அரசாங்கத்தையும் அதிபரையும் நேரடியாக விமர்சித்தால் கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும்.
போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர், மக்கள் தெருக்களில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் சற்று உற்சாகமாக உணர்ந்ததாகவும், சீனாவில் இவ்வளவு பெரிய அளவிலான எதிர்ப்பைக் கண்டது இதுவே முதல் முறை என்றும் பிபிசியிடம் கூறினார்.
"அதிபர் ஷி ஜின்பிங்குக்கு எதிராக வழக்கத்துக்குமாறான போராட்டம்"
- டெஸ்ஸா வோங், ஆசியா டிஜிட்டல் செய்தியாளர்
உரும்கி தீ விபத்து, ஒரு கொடுங்கனவு காட்சியாக பல சீனர்களிடம் நிலை கொண்டுள்ளது. அண்மைகாலமாக சீனர்கள் பரவலான கோவிட் கட்டுப்பாடுகளின் கீழ் அடைபட்டுள்ளனர். ஒரு அபார்மெண்டில் அடைபட்டிருந்தோர் தப்பிக்க வழியில்லாமல் தீ விபத்தில் இறந்து போனதாக நேரில் பார்த்தவர்கள் சொல்கின்றனர். அதிகாரிகள் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால், பொதுமக்களின் சீற்றம், கவலை பரவுவதை அது தடுக்க முடியவில்லை.
பெருகிவரும் விரக்தியின் சமீபத்திய முக்கிய புள்ளியாக இது மாறியுள்ளது.தினசரி கொரோனா பரிசோதனைகள், நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் என மூன்று ஆண்டுகளாக லட்சகணக்கானோர் சோர்வுற்றிருக்கின்றனர். இந்த கோபம் சீனாவின் அனைத்து முனைகளிலும் பரவியுள்ளது. முக்கியமான நகரங்களில் இருந்து, ஜின்ஜியாங் மற்றும் திபெத் போன்ற தொலைதூரப் பகுதிகளிலும், சாதாரண குடிமக்கள், தொழிற்சாலை ஊழியர்கள், இளம் பல்கலைக்கழக மாணவர்கள் என சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.
மக்களின் இந்த கோபம் அதிகரிக்கும்பட்சத்தில், கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரிப்பது பொதுவான காட்சியாகிவிடும். இந்த புதிய வழக்கத்தில் போராடியவர்களின் எண்ணிக்கை, அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அரசின் மீதான அவர்களின் விமர்சனங்களின் நேரடி தன்மை ஆகியவை இரண்டும் இந்த வார இறுதி போராட்டங்களை கூட அசாதாரணமானதாகியிருக்கின்றன. நூற்றுகணக்கானோர் பெரும் அளவில் வீதிகளில் குவிந்து, அதிபர் அதிபர் ஷி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்று கோருவது நினைத்துக்கூட பார்க்கமுடியாத்கத கருதப்பட்டது என்பது சமீபகாலம் வரை இருந்தது.
சீன கொடியை அசைத்தபடி எழுந்திரு, எழு என்று மக்களிடையே புரட்சிகர கொள்கைகளை வலியுறுத்தும் தேசிய கீதத்தை பாடியபடி இருந்தனர். இது தேசபக்தியின் ஒரு நிகழ்ச்சியாக, அதிபர் ஷி ஜின்பிங்கின் முற்றிலும் கோவிட் இல்லாத கொள்கையின் கீழ் துன்புறும் சக சீனர்களின் ஒற்றுமையின் ஒரு கூர்மையான வெளிப்பாடாகவும் மற்றும் நடவடிக்கைக்கான அழைப்பாகவும் பார்க்கப்படலாம்.
அண்மைகால இந்த போராட்டங்கள், சீனாவின் முற்றிலும் கோவிட் அல்லாத சூழலுக்கான நடவடிக்கைகளுக்கு எதிரான தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை வேகப்படுத்தியிருக்கின்றன. அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அரசுக்கு எதிரான வலுவான விமர்சனங்களையும் இது அதிகரித்திருக்கிறது.
முற்றிலும் கோவிட் இல்லாத சூழல் என்ற உத்தி உலகின் முக்கிய பொருளாதாரங்களில் கடைசிக் கொள்கையாகும், மேலும் இது ஒப்பீட்டளவில் ஒரளவு சீனாவின் குறைந்த தடுப்பூசி நிலைகள் மற்றும் வயதானவர்களை பாதுகாக்கும் முயற்சியில் தொடர்புடையதாக இருக்கிறது.
முன்னறிவிப்பு இன்றி ஊரடங்கு உத்தரவு போடப்படுவது நாடு முழுவதும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான நடவடிக்கைகள் இருந்தபோதிலும், இந்த வாரம் சீனாவில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இதுவரை இருந்த அளவுகளை விடவும் அதிகமாகும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்