கத்தார்: மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கு தண்டனை குறைப்பு - முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தீபக் மண்டல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
கத்தாரில் இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்களுடைய தண்டனை தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பின் முழு விவரங்கள் கிடைப்பதற்காகக் காத்திருப்பதாகவும் செய்திறிவிப்பில் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
“கத்தாருக்கான இந்திய தூதர், ஏனைய அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்தனர். இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதல் இந்திய அரசு அவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. மேலும் அனைத்து தூதரக, சட்ட உதவிகளைத் தொடர்ந்து வழங்குவோம்.
இந்த வழக்கு குறித்த விவரங்கள் ரகசியமானது மற்றும் உணர்திறன் மிக்கது என்பதால், இந்த நேரத்தில் மேற்கொண்டு எந்தக் கருத்தையும் கூற இயலாது,” என்றும் அந்தச் செய்தியறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேர் யார்?
முன்னதாக, கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இந்திய அரசுக்குப் பெரும் சவாலாக மாறியது.
இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.
இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்த இந்திய அரசு, ஆனால் இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கான அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்வதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
கத்தார் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் இந்திய கடற்படை ஊழியர்களை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றுவது இந்தியாவுக்கு பெரிய ராஜ்ஜீய சவாலாகக் கருதப்படுகிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களில் கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சௌரப் வசிஷ்டா, கேப்டன் வீரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுக்னகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால் மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் அடங்குவர். இவர்கள் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர்.
இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

பட மூலாதாரம், Getty Images
இவர்கள் கடந்த ஆண்டு(2022) ஆகஸ்ட் 30ஆம் தேதி கத்தாரில் கைது செய்யப்பட்டனர். அன்றிலிருந்து அவர்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தொடங்கியது.
அவர்கள் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டதற்கும் அவர்களுக்கு மரண தண்டனை விதித்ததற்கும் எந்தக் காரணமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை.
'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியின்படி, முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும் அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை.
மோதி அரசு மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்த விவகாரத்தில் மோதி அரசு தலையிட வேண்டும் என்று இந்தியாவில் அழுத்தம் எழுந்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக ஊடக பக்கத்தில், “கத்தாரில் 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் தொடர்பான விவகாரத்தில் மிகவும் மோசமான முன்னேற்றங்கள் இருப்பதை இந்திய தேசிய காங்கிரஸ் மிகுந்த வருத்தத்துடனும், வேதனையுடனும், உணர்ந்துள்ளது.
மேல்முறையீடு செய்வதில் அதிகாரிகளுக்குப் போதுமான ஆதரவு கிடைப்பதை உறுதி செய்ய இந்திய அரசாங்கம் கத்தார் அரசுடனான தனது ராஜஜீய மற்றும் அரசியல் செல்வாக்கை முடிந்தவரை பயன்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம். மேலும், அவர்களை விரைவில் விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று பதிவிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இதேபோல், ஏஐஎம்ஐஎம் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தனது X சமூக ஊடக பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோதி முன்னாள் பணியாளர்கள் அனைவரையும் திரும்ப அழைத்து வர வேண்டும். கத்தாரில் சிக்கித் தவிக்கும் முன்னாள் கடற்படை அதிகாரிகளின் பிரச்னையை ஆகஸ்ட் மாதம், நான் எழுப்பினேன். இன்று அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நாடுகள் தன்னை எவ்வளவு நேசிக்கின்றன என்பதைப் பற்றி பிரதமர் மோதி பெரிதாகப் பேசுகிறார். அவர் முன்னாள் அதிகாரிகளைத் திரும்ப அழைத்து வர வேண்டும். அவர்கள் மரண தண்டனையை எதிர்கொள்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது,” என்று கூறியுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் ஷீலா பட், “தனியார் நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு இந்திய அரசாங்கம் உதவ முயன்றபோது, கத்தார் ஒத்திசைய விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் இந்த வழக்கு மூலம் பேரம் பேச விரும்பினர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சௌதி அரேபியாவுடனான இந்தியாவின் நிலையான இருதரப்பு உறவுகளை அது விரும்பவில்லை. ஆகவே, இந்தப் பிராந்தியத்தில் துருக்கி மற்றும் இரானுடன் இணைந்து கத்தார் ஒரு பெரிய அரசியல் ஆட்டத்தை விளையாடுகிறது,” என்று தனது சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் அல் டஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற பாதுகாப்பு சேவைகளை வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள்.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிறுவனம் ஓமன் குடிமகன் காமிஸ் அல்-அஜ்மிக்கு சொந்தமானது. அஜ்மி ராயல் ஓமன் விமானப்படையின் படைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்த எட்டு இந்தியர்களுடன் அவரும் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவர் நவம்பர் 2022இல் விடுவிக்கப்பட்டார்.
நிறுவனத்தின் செயல்பாடுகள் என்ன?
நிறுவனத்தின் பழைய இணையதளம் இன்னும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. கத்தார் அமிரி தேசியப் படைக்கு (QENF) பயிற்சி, தளவாடங்கள் மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கியுள்ளது என்று நிறுவனத்தின் இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய இணையதளத்தில் நிறுவனத்தின் பெயர் டஹ்ரா குளோபல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கத்தார் அமிரி தேசிய படைக்கு வழங்கப்பட்ட அதன் சேவைகள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதன் தலைமைப் பொறுப்புகளில் இருந்த கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு கத்தார் அரசுக்கு இந்நிறுவனம் உதவுவதாக பல ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன. இருப்பினும், இதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு நிறுவனத்துடனான தொடர்பு என்ன?
மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களில் ஒருவரான கமாண்டர் பூர்ணேந்து திவாரி இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2019இல் அவருக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டது.
அப்போது கத்தாருக்கான அப்போதைய இந்தியத் தூதரும், கத்தார் பாதுகாப்புப் படைகளின் சர்வதேச ராணுவக் கூட்டுறவின் முன்னாள் தலைவருமான பி.குமரன் மூலம் கௌரவிக்கப்பட்டார்.
இந்திய கலாசார மையத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி கேப்டன் கவுசிக் விழாவில் கலந்துகொண்டார்.
தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் நான்கு முதல் ஆறு ஆண்டுகள் டஹ்ராவில் பணிபுரிந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
எதற்காக, எப்படி இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன?
மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளை கத்தாரின் உளவுத்துறை நிறுவனமான ஸ்டேட் செக்யூரிட்டி பீரோ கைது செய்துள்ளது.
அவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் நடுப்பகுதியில் இந்திய தூதரகத்துக்கு தெரிய வந்தது.
செப்டம்பர் 30 அன்று, இவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் சிறிது நேரம் பேச அனுமதிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக அவர்களுக்கு தூதரக அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, இந்திய தூதரக அதிகாரி ஒருவர் இவர்களைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு, அடுத்த சில மாதங்களுக்கு கைது செய்யப்பட்ட இந்தியர்கள் ஒவ்வொரு வாரமும் தங்கள் குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இதை இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சியும் உறுதி செய்துள்ளார்.
விசாரணையின் போதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார். முன்னாள் கடற்படை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை இந்திய அரசோ அல்லது கத்தார் அரசோ பொதுவெளியில் தெரியப்படுத்தவில்லை.

பட மூலாதாரம், Getty Images
குடும்பத்தினர் என்ன கூறுகின்றனர்?
எட்டு பேரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட பிறகு, ஒரு இந்திய இணைய ஊடகம் கமாண்டர் பூர்ணேந்து திவாரியின் சகோதரி மருத்துவர் மிது பார்கவா மற்றும் கேப்டன் நவ்தேஜ் சிங் கில்லின் சகோதரர் நவ்தீப் கில் ஆகியோரிடம் பேசியது.
அப்போது, கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோதி அரசுக்கு மிது கார்கவா வேண்டுகோள் விடுத்திருந்தார். தனது சகோதரர் வயது முதிர்ந்தவர் என்றும் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
அவர் 63 வயதில் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் என்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்பதைth தன்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்று மிது தெரிவித்திருந்தார்.
பூர்ணேந்து திவாரி சிறையில் இருந்து தங்களின் 83 வயதான தாயுடன் பேசியதாகவும், மகனின் பாதுகாப்பு குறித்து தாயார் கவலைப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
கேப்டன் நவ்தேஜ் சிங் கில்லின் பிறந்த நாளான செப்டம்பர் 6ஆம் தேதி அவருக்கு வாட்ஸ் ஆப்பில் வாழ்த்து செய்தி அனுப்பியதாகவும் அதற்கு அவர் பதிலளிக்காததால் சந்தேகம் அடைந்ததாகவும் அவரது சகோதரர் நவ்தீப் கில் கூறினார்.
பின்னர் அவருடனான தொலைபேசி தொடர்பு நின்றுபோனது. நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கத்தாரின் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. நவ்தீப் கில், தனது சகோதரருக்கு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாகக் கூறினார்.
தனது சகோதரர் ஓய்வு பெறும் வரை இந்திய கடற்படையில் பணியாற்றியதாகவும் தனது அண்ணனை இந்தியாவுக்கு கொண்டு வருவது அரசின் பொறுப்பு என்றும் நவ்தீப் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கைது செய்யப்பட்ட இந்தியர்களை அழைத்து வருவதற்கு அரசு முன்னுரிமை அளிப்பதாகக் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கு இது எத்தகைய சவாலாக இருக்கிறது?
இந்த விவகாரம் இந்தியாவுக்கு எவ்வளவு பெரிய அரசியல் சவாலாக இருக்கிறது? இந்தப் பிரச்னையைத் தீர்க்கவும் தனது முன்னாள் கடற்படை அதிகாரிகளை விடுவிக்கவும் இந்தியாவால் என்ன செய்ய முடியும்?
இதைப் புரிந்துகொள்ள, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் முடாசர் கமரிடம் பிபிசி ஹிந்தி பேசியது.
ராஜஜீய மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படாவிட்டால், இந்த விவகாரம் எந்தத் திசையில் செல்லும் என்று கூறுவது கடினம் என்று அவர் கூறினார். மேலும், நிச்சயமாக இது இந்திய பொதுமக்களின் கருத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஆம், ஆனால் இது கண்டிப்பாக இந்தியாவில் பொதுமக்களின் கருத்தை பாதிக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, முன்னாள் கடற்படை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை இந்தியாவோ அல்லது கத்தாரோ வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இதற்கு என்ன காரணம்?
“இதுவோர் உணர்வுப்பூர்வமான விஷயம். இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயம் தொடர்பாக பிரச்னை எழும்போது, நட்புறவு கொண்ட நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகின்றன.
இரு நாடுகளும் எந்த உடனடி எதிர்வினையும் தெரிவிக்காத விதத்தை வைத்தே இது மிகவும் முக்கியமான விஷயம் என்று தெரிகிறது. அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படாததால், இதுவொரு முக்கியமான விஷயமாக இருக்காது என்று கூறிவிட முடியாது.
மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கலாம் அல்லது அவர்கள் ஏதேனும் கடுமையான குற்றம் செய்திருக்கலாம்,” என்று கமர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கு இது பெரிய ராஜதந்திர சவாலா?
“இதை ராஜதந்திர சவால் என்று அழைப்பது சரியாக இருக்காது. ஏனெனில் அங்கு சென்றவர்கள் இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள். ஆனால் அவர்கள் அரசு பணி நிமித்தமாகச் செல்லவில்லை. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்கள். எனவே இதை ராஜதந்திர சவால் என்று கூறுவது கடினம்.
இது அரசியல் ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் சில தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதை இப்போதே சொல்வது கடினம்,” என்கிறார் கமர்.
மேலும் பேசிய அவர், “இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருந்ததால், இது குறித்து பொதுவெளியில் எந்தத் தகவலும் பகிரப்படவில்லை. எனவே, வெளிவிவகாரக் கொள்கையின்படி நிதானமான முறையில் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய அரசுக்கு முடிவு குறித்த விவரங்களை முதலில் தெரிவிக்க வேண்டும். இதில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதை இந்திய அரசு ஆராயும். கத்தாரில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருந்தால், அதிலிருந்து எவ்வளவு அதிகபட்ச பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்,” என்றும் கூறினார்.
“இந்த விவகாரம் சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுமா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் பல அம்சங்களைப் பார்க்க வேண்டும். இதை இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும்,” என்கிறார் கமர்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா- கத்தார் இடையிலான உறவு எப்படிப்பட்டது?
இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே நட்புறவு உள்ளது. ஆனால் இந்த உறவில் முதல் சவால் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வந்தது. பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபியைப் பற்றி இழிவான கருத்துகளை வெளியிட்டார்.
அந்த நேரத்தில், இந்தியா 'பொது மன்னிப்பு' கோர வேண்டும் என்று கூறிய முதல் நாடு கத்தார். கத்தார் இந்திய தூதரை அழைத்து தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. இஸ்லாமிய நாடுகளில் கோபம் பரவாமல் இருக்க, பாஜக உடனடியாக நூபுர் ஷர்மாவை நீக்கியது.
இப்போது எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை, இந்தியா-கத்தார் உறவுகளுக்கு இடையிலான இரண்டாவது பெரிய சவாலாகக் கருதப்படுகிறது. கத்தாரில் சுமார் 8-9 லட்சம் இந்தியர்கள் பணிபுரிவதால், அங்குள்ள இந்தியர்களின் நலன்களுக்குப் பங்கம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க இந்திய அரசு முயலும்.
இந்தியா கத்தாரில் இருந்து இயற்கை எரிவாயுவையும் இறக்குமதி செய்கிறது. கத்தார் மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடு.
காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அதிக அமெரிக்க பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று கத்தார் இஸ்ரேலுடனும் பாலத்தீனத்துடனும் மத்தியஸ்தம் செய்ய முயலும் நேரத்தில் இந்த விவகாரம் வெளிச்சம் பெற்றுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












