You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் பயங்கர காட்டுத் தீ: உயிர் தப்ப கடலில் குதித்த மக்கள் - 1,000 பேர் கதி என்ன?
அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஒன்றான மாவியில் பற்றி எரிந்து வரும் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. பல நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக அறிவிக்கப்பட்டு, அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்துப் பேசிய ஆளுனர் ஜோஷ் கிரீன், "ஹவாய் வரலாற்றிலேயே இது மிகவும் மோசமான இயற்கைப் பேரழிவாக இருக்கிறது," என்றார்.
மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க லஹைனா கடற்கரையில் 80 சதவீத பகுதிகள் தீக்கு இரையாகிவிட்டன என்றும் கூறினார்.
தீ வேகமாகப் பரவியதால் லஹைனா கடற்கரையில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் குதித்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே பல மணிநேரம் நடந்து தப்பிச் சென்றனர்.
பிபிசியிடம் பேசிய விக்ஸே ஃபோன்ஸேலின்கம், கரையை காட்டுத்தீ முற்றிலுமாக ஆக்கிரமித்த நேரத்தில் கடல்நீருக்குள் குதித்து தப்ப முயன்றவர்களில் அவரது குடும்பமும் ஒன்று எனக் குறிப்பிட்டார்.
அங்கு வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் நெருப்பு காற்றில் மேலெழும்பியதாகவும் அந்தச் சம்பவம் குறித்து விவரித்த அவர், அதிலிருந்து தப்பிக்க முயன்றபோது அவரது குழந்தைகள் கிட்டத்தட்ட கடலோடு அடித்துப் போகும் அபாயத்தையும் எதிர்கொண்டதாக குரல் நடுங்கத் தெரிவித்தார்.
பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கிருந்து மீட்கப்பட்ட நிலையில், தீவின் மேற்குப் பகுதியில் சுமார் 11 ஆயிரம் பேர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தவிக்கும் நிலை உருவானது.
அமெரிக்காவின் மிகப்பெரிய ஆலமரம் கரிக்கட்டையாக நிற்கும் அவலம்
பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க ஏராளமான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தீ எரிந்து வரும் நிலையில், டோரா புயலின் காரணமாக வீசிய சூறாவளிக் காற்று தீ மேலும் பரவக் காரணமாக இருந்தது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அதிவிரைவாக போதுமான நிதி ஆதாரங்கள் கிடைக்கும் வகையில் தீ பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பேரிடர் அவசர நிலையை அதிபர் ஜோ பைடன் பிறப்பித்துள்ளார்.
ஹவாய் தீவின் தலைநகராக இருந்த லஹைனா ஒரு கடற்கரை நகரம். வரலாற்றுச் சிறப்பு மிக்க, சுற்றுலா முக்கியத்துவம் மிக்க இடங்களுக்குப் பெயர்போன நகராக இது திகழ்கிறது. இதுபோன்ற பெரும்பாலான இடங்கள் பற்றி எரிந்த தீயின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் 122 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த பயனீர்ஸ் இன் என்ற விடுதியும் ஒன்று. இந்த விடுதி முழுமையாக தீயில் எரிந்துவிட்டதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லஹைனாவின் புகழ்பெற்ற ஆலமரத்தையும் இந்த தீ விட்டு வைக்கவில்லை. இந்த ஆலமரம் அமெரிக்காவிலேயே மிகப்பெரிய மரமாகக் கருதப்படுகிறது.
தீயில் கருகிய நிலையில் அப்படியே நிற்கும் அந்த ஆலமரம் இனிமேல் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் நிலைக்குத் திரும்பாது என்ற அச்சம் அனைவரிடமும் காணப்படுகிறது.
அமெரிக்காவில் காட்டுத்தீ அதிகரித்து வருவது ஏன்?
ஹவாய் தீவில் இதுபோல் காட்டுத் தீ பற்றி எரிவதற்கு உலக அளவில் நிலவும் மோசமான காலநிலையே காரணமாக அமைந்துள்ளது.
காட்டுத் தீயைப் பொறுத்தளவில் கிரீஸ் நாட்டு வரலாற்றிலேயே இல்லாத ஜுலை மாதமாக கடந்த மாதம் ரோட்ஸ் மற்றும் கோர்ஃபு தீவுகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.
கனடாவிலும் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக மோசமான காட்டுத் தீ சம்பவங்கள் நேரிட்டன. இந்த ஆண்டு தொடக்கத்தில் சிலி மற்றும் ஆஸ்திரேலியாவில் பற்றிய காட்டுத் தீயைத் தொடர்ந்து அங்கு பற்றி எரிந்த தீயில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலப்பரப்பிலான காடுகள் எரிந்து சாம்பலாகின.
அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளில் அண்மைக்காலங்களில் மிக அதிக அளவிலான காட்டுப் பகுதிகளில் தீ பற்றியெரிந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
காலநிலை மாற்றமே இதுபோல் காட்டுத் தீ வேகமாகப் பரவுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது என விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்துவருகின்றனர்.
ஹவாய் தீவில் பெருமளவு காட்டுத் தீ பற்றி எரிவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஆனால் கடந்த சில தினங்களாக எரிந்துகொண்டிருக்கும் தீ வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பயங்கரமான தீயாக உள்ளது.
இதுபோன்ற பயங்கர தீ விபத்து எப்படி, எங்கே தொடங்கியது என்பது குறித்து தெளிவான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
சூறாவளிக் காற்றை எதிர்த்து தீ அணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். இதில் பெரும்பகுதி தீ அணைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அருகில் இருக்கும் பிக் தீவில் 3 இடங்களில் தீ பற்றியதாகவும், ஆனால் அவை அனைத்தும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஹவாய் தீவின் வறண்ட வானிலை காரணமா?
தீ மளமளவெனப் பரவியதற்கு ஹவாய் தீவு முழுவதும் காணப்படும் வறண்ட வானிலையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.
பொதுவாக காட்டுத் தீ பரவுவதற்கு சில விஷயங்கள் காரணமாக அமைந்துவிடுகின்றன. காட்டுப்பகுதியில் காணப்படும் வறண்ட புதர்கள், மரங்கள் மற்றும் இதுபோன்றவற்றில் தீ பற்றும்போது அது வேகமாகப் பரவுகிறது.
ஹவாயில் 14 சதவீத நிலப்பரப்பில் மோசமான அல்லது அதிகமான வறட்சி நிலவுகிறது என்றும், இதில் 80 சதவிகித நிலப்பரப்பு வழக்கத்திற்கு மாறான வறட்சியின் பிடியில் சிக்கித் தவிப்பதாகவும் அமெரிக்க வறட்சி கண்காணிப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
வறண்ட வானிலை நிலவும்போது, பசுமையான செடி-கொடிகள் மற்றும் மரங்களில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சிக்கொள்வதால் அவற்றில் தீ எளிதில் பற்றிப் பரவுகிறது.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஹவாய் தீயில் பெய்த மழை அளவுடன் ஒப்பிடும்போது தற்காலங்களில் 90 சதவிகிதம் குறைவாக அளவுக்குத் தான் மழைப்பொழிவு இருக்கிறது எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் 2008ஆம் ஆண்டுக்குப் பிந்தைய வறட்சி நிலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது.
மாவி தீவிலும் கடும் வறட்சி காரணமாக சிவப்பு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வெப்பமான காலநிலை, குறைந்த ஈரப்பதமான காற்று, சூறாவளிக் காற்று ஆகியவை இணைந்து தீ பற்றுவதற்கான ஆபத்தை அதிகரிக்கும் நிலை என்பதே இதன் பொருள்.
டோராவிலிருந்து பயங்கர சூறாவளிக்காற்று ஹவாய் தீவின் கடலோரப் பகுதிகளை கடந்த செவ்வாய் கிழமை கடந்து சென்றபோது அப்பகுதியில் எரிந்து வந்த தீ வேகமாகப் பரவியது.
அட்லாண்டிக் புயல் பருவத்திலும் இதேபோல் பயங்கர சூறாவளிக்காற்று வீசும் என வானிலை முன்னறிவிப்பு மையம் எச்சரித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்