முதுமை, இறப்பு இரண்டையும் வெல்ல முடியுமா? நோபல் பரிசு பெற்ற தமிழர் வெங்கி ராமகிருஷ்ணன் பேட்டி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கார்லோஸ் செரானோ
- பதவி, பிபிசி நியூஸ்
முதுமை அடைவதும், இறப்பதும் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் சந்திக்கும் நிலை. பலர் மரணத்திற்கு பயப்படுகிறார்கள். ஆனால் நாம் ஒவ்வொருவரும் ஏன் வயதாகி இறக்க வேண்டும்? வயதாவதை நிறுத்த முடியுமா அல்லது மரணத்தைத் தவிர்க்க முடியுமா?
இந்தியாவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி மூலக்கூறு உயிரியலாளரான வெங்கி ராமகிருஷ்ணன் தனது முழு வாழ்க்கையையும் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காகவே செலவிட்டிருக்கிறார். ராமகிருஷ்ணன் தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தில் 1952 இல் பிறந்தார்.
தாமஸ் ஏ. ஸ்டைட்ஸ், அடா ஈ யோனத்துடன் இணைந்து 2009 ஆம் ஆண்டு ராமகிருஷ்ணன் நோபல் பரிசு பெற்றார்.
ராமகிருஷ்ணன் எழுதிய வொய் வீ டை: தி நியூ சைன்ஸ் ஆஃப் ஏஜிங் அண்டு தி க்வெஸ்ட் ஃபார் இம்மோர்ட்டாலிட்டி (Why We Die: The New Science of Aging and the Quest for Immortality) என்ற புத்தகம் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆங்கிலத்தில் வெளியிடப்படுகிறது.
ராமகிருஷ்ணனிடம் இந்த விஷயங்களைப் பற்றிப் பேசியபோது, மனிதர்கள் நீண்ட காலம் வாழப் பயன்படும் செல்கள் சுருங்குவதற்குக் காரணமான ரசாயன எதிர்வினைகள் அனைத்தையும் விளக்கினார்.
பிபிசி: முதுமை என்றால் என்ன? மனிதர்களின் உடலில் இந்த செயல்முறை எப்படி நடைபெறுகிறது?
வெங்கி ராமகிருஷ்ணன்: முதுமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று நமது டிஎன்ஏவில் உள்ள மரபணுக்கள் சேதமடைவது. மரபணு மட்டத்தில், புரதங்கள் ஆயிரக்கணக்கான ரசாயன எதிர்வினைகளை இணைக்கின்றன. இந்த செயல்களால் தான் நாம் உயிர்வாழ்கிறோம்.
இவை நமது உடலுக்கு வலிமையையும் வடிவத்தையும் தருகின்றன. புரதங்கள் மரபணுக்களுக்கு இடையே தொடர்பு கொள்ள உதவுகின்றன. நமது நரம்பு மண்டலம் அவற்றைச் சார்ந்து செயல்படுகிறது. மூளையில் உள்ள பல காரணிகள் சேமிப்பிற்கு பங்களிக்கின்றன.
வைட்டமின்கள், ஹார்மோன்கள், என்சைம்கள், ஆன்டிபாடிகள், ஹீமோகுளோபின் போன்றவையும் புரதங்களே. முதுமை என்பது உயிரணுக்களில் புரதங்களை உற்பத்தி செய்யும் திறனை நம் உடல் இழப்பதே ஆகும்.
நமது திசுக்கள், செல்கள், உயிர் மூலக்கூறுகள் மற்றும் இறுதியில் உடலும் சேதமடைவதை நாம் காணலாம். இது நாம் பிறந்தது முதல் படிப்படியாக நடக்கும் ஒரு செயல்.
குழந்தை பருவத்திலிருந்தே நம் வயது அதிகரிப்பதைக் காண்கிறோம். ஆனால், அந்த காலகட்டத்தில் நாம் வயதாவது பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அப்போதும் நாம் வளர்கிறோம்... இளமைப் பருவத்தை அடைகிறோம்.... அது மிகவும் உற்சாகமாக இருக்கிறது.
ஆனால் ஆண்டுகள் செல்லச்செல்ல, இந்த அறிகுறிகள் தீவிரமடைகின்றன. உடலில் உள்ள முக்கியமான அமைப்புகள் தோல்வியடையும் போது, உடல் முழுவதுமாக செயல்படாது. அதுவே மரணத்திற்கு வழிவகுக்கும் விளைவு.
ஆனால் மரணத்தில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நாம் இறந்த பிறகும் குறிப்பிட்ட நேரத்திற்கு, உடலில் உள்ள சில செல்கள் உயிர்வாழ்கின்றன. அதனால்தான் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகின்றன. ஆனால், உடலில் எந்த உறுப்பும் செயலிழந்தால் மரணம்தான் நிகழும்.

பட மூலாதாரம், Getty Images
பிபிசி: உயிரியலில் ஒவ்வொரு மரபணு வரிசையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாக உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். மரபணு ரீதியாக நாம் ஏன் வயதாகிறோம்? ஏன் இறக்க வேண்டும்?
வெங்கி ராமகிருஷ்ணன்: ஏனென்றால் மரபணு பரிணாமம் என்ற மாற்றம் நம்மை தனிநபர்களாக பார்க்கவில்லை. அது எல்லா இடங்களிலும் அதுவாகவே நடந்து கொண்டிருக்கிறது.
மரபணு பரிணாமம் என்பது மரபணுக்களின் பரிமாற்றம்.
நம் உடல்களில் பெரும்பாலானவை வயதானதைத் தடுக்க முயற்சிப்பது உண்மைதான். சிறந்த செயல்களின் மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்ள அவை முயல்கின்றன.
வேட்டையாடுபவர்களால் கொல்லப்படும் அபாயத்தில் உள்ள உயிரினங்களில், மிக நீண்ட காலம் வாழும் உயிரினமாக இருந்தாலும் இந்த பரிணாமம் தடைபடுவதில்லை. இருப்பினும், மிக நீண்ட காலம் உயிர் வாழும் தன்மையும் அதுபோன்ற உயிரினங்களுக்கு எந்தப் பயனையும் அளிப்பதில்லை. ஏனென்றால் அவை ஒரு கட்டத்தில் மற்ற உயிரினங்களின் கைகளில் சிக்கி உயிரிழக்கின்றன.
சிறிய உயிரினங்களுடன் ஒப்பிடுகையில், நடைமுறையில் பெரிய உயிரினங்கள் நீண்ட காலம் வாழ்கின்றன.
எலிகளும் வெளவால்களும் ஒரே எடையில் இருந்தாலும், வெளவால்களே நீண்ட காலம் வாழ்கின்றன. ஏனென்றால் அவை பறக்கின்றன. அதனால் பிற உயிர்களின் கைகளில் சிக்கி அவை உயிரிழப்பதில்லை.

பட மூலாதாரம், Getty Images
பிபிசி: கடந்த 150 ஆண்டுகளில் மனித ஆயுள் காலம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் மக்களின் ஆயுட்காலம் மேலும் அதிகரிக்குமா? அல்லது நமது உயிரினங்கள் வாழக்கூடிய அதிகபட்ச ஆயுட்காலத்தை நாம் ஏற்கனவே அடைந்துவிட்டோமா? இது விஞ்ஞானிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாதத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வெங்கி ராமகிருஷ்ணன்: மேம்பட்ட ஆரோக்கியம் மற்றும் மருத்துவ முறைகளுடன் இன்று நாம் நீண்ட காலம் வாழ்கிறோம்.
அப்படிப்பட்ட காலங்களில் நாம் 120 ஆண்டுகள் வாழலாம். இந்த வயதிற்கு மேல் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
100 வயதை எட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, ஆனால் 110 வயதை எட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நீண்ட ஆயுட்காலம் குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானி டாம் பேர்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
110 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் இயற்கையாகவே உயிரியல் வரம்புகளை எதிர்கொள்வோம் என்று அவர் உணர்ந்தார்.
மரபணு காரணிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறைகளுடன் 110 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் மக்கள் உள்ளனர் என்பது உண்மைதான். ஆனால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அதாவது, இயற்கையாகவே இந்த வயதைத் தாண்டிய பிறகு ஒரு எல்லை இருப்பதாகத் தோன்றுகிறது.
புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடிந்தால்தான் சராசரி ஆயுளை இன்னும் சில ஆண்டுகள் அதிகரிக்க முடியும்.
வயதாவதற்கான காரணங்களை திறம்பட எதிர்த்துப் போராடினால், ஒருவேளை இந்த வரம்பை மீறலாம். ஆனால், அதைச் செய்வது எவ்வளவு எளிது என்று எனக்குத் தெரியவில்லை. இது பற்றி சிந்திக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
பிபிசி: முதுமை ஒரு நோயா என்பதும் விவாதத்திற்குரியது...
வெங்கி ராமகிருஷ்ணன்: புற்றுநோய், ஞாபக மறதி, உடல் உறுப்புகளில் வீக்கம், மூட்டுவலி, இதயம் தொடர்பான நோய்களும் வயதுக்கு ஏற்ப வருகின்றன. அதனால்தான் இந்த நோய்களுக்கு முதுமையே காரணம் என்று கூறப்படுகிறது. முதுமை ஒரு நோயாகத்தான் பார்க்கப்படுகிறது.
ஆனால், முதுமை என்பது ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டிய இயற்கையான நிகழ்வு. இந்த தவிர்க்க முடியாத, பொதுவான செயல்முறையை எப்படி நோய் என்று அழைக்க முடியும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
சமீபத்தில் உலக சுகாதார நிறுவனமும் முதுமை ஒரு நோய் அல்ல என்று கூறியுள்ளது.
முதுமையை ஒரு நோயாகக் கருதும் அழுத்தம் அதிகரித்ததால், ஆராய்ச்சிக்காகப் பெரும் தொகை செலவிடப்பட்டது.
பிபிசி: எதிர் காலத்தில் வயதாவதற்கு எதிரான சிகிச்சையில் எந்தெந்த பகுதிகளில் மேலும் முன்னேற்றங்களைக் காண எதிர்பார்க்கிறீர்கள்?
வெங்கி ராமகிருஷ்ணன்: ''இதில் எதையும் எளிதாகக் கணிக்க முடியாது. குறிப்பாக எதிர்காலத்தைப் பற்றி...’’ என்று கிண்டல் செய்தார் பேஸ்பால் வீரர் யோகி பெர்ரா.
அந்த சிகிச்சைகள் எவ்வளவு மேம்பட்டவையாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், முதுமையை குறைக்க பல நடைமுறைகள் உள்ளன.
உதாரணமாக, கலோரிகளை கட்டுக்குள் வைத்திருப்பது வயதாகும் ஆபத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளம் வயதில் இப்படிச் செய்வதால் பிரச்னைகள் ஏற்படும் என்பதால், கலோரிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க இதேபோன்ற மருந்து தேடப்படுகிறது.
ஆனால், ஐஸ்க்ரீமுடன் கேக் சாப்பிட்டுவிட்டு, எந்தக் கவலையும் இல்லாமல் மருந்து சாப்பிட்டால் போதுமா..? ராபமைசின் என்ற மருந்தில் பலர் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அதிக அளவு எடுத்துக் கொண்டால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை நசுக்கி, கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று கூற்றுகள் உள்ளன.
மற்றொரு செயல்முறை..பரபியோசிஸ். ஒரு இளம் விலங்கிலிருந்து இரத்தம் எடுக்கப்பட்டு ஒரு வயதான விலங்குக்கு செலுத்தப்படுகிறது. அந்த இரத்தத்தைப் பெறும் விலங்கு அதன் உடல் உறுப்புகளில் புத்துணர்ச்சி பெறுகிறது.
முதுமையை ஏற்படுத்தும் பெரும்பாலான காரணிகள் இரத்தத்தில் உள்ளன. அவற்றை அடையாளம் காண பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரு சில முதிர்ந்த செல்கள் வயதுக்கு ஏற்ப வளரும். வீக்கமும் இதன் அறிகுறியாகும்.
வயதான செல்கள் அழிக்கப்பட வேண்டுமா? இதை அடைய முடிந்தால், சில ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற வயதான சில விளைவுகளை மாற்றியமைக்க முடியும் என்று கூறுகிறார்கள்.
மற்றொரு சுவாரசியமான ஆராய்ச்சி... செல்லுலார் ரீப்ரோகிராமிங். இதில், செல்கள் அவற்றின் அசல் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை சமாளிக்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. இந்த செயல்முறை சற்று ஆபத்தானது. ஏனெனில் சில நேரங்களில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இருப்பினும், விலங்குகள் மீதான இந்த சோதனைகள் நம்பிக்கைக்குரிய முடிவுகளை அளித்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
பிபிசி: இவை தவிர, அறிவியல் கட்டுக்கதைகளும் உள்ளன. அது போன்ற கதைகளுக்கு நிறைய விளம்பரங்கள் கிடைக்கின்றன.
வெங்கி ராமகிருஷ்ணன்: ஆமாம். முற்றிலும் அறிவியலுக்கு ஏற்பில்லாத, தவறான கருத்துகளும் உள்ளன. மக்கள் நம்பும் விஷயங்களில் ஒன்று கிரையோனிக்ஸ். இதன் பொருள் ஒருவர் இறந்தால், அவரது உடல் திரவ நைட்ரஜனில் பாதுகாக்கப்படுகிறது. எனவே அவர்கள் மரணத்தை வெல்ல முயல்கிறார்கள்.
ஆனால், அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் உயிர்ப்பிக்கக் கூடிய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் கிடைக்குமா என்பது தெரியவில்லை. இப்போதைக்கு இது வெறும் கட்டுக்கதை தான்.
இது மக்களின் மரண பயத்தை சுரண்டுவதற்கான ஒரு வழியாகும். கிரையோனிக்ஸ் மீது நம்பிக்கை வைத்து பணத்தைச் செலவழிப்பவர்களும் உண்டு. எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கலாம். ஆனால், இளமையை வாங்க முடியாது.
நான் இந்தியாவில் வளர்ந்தவன். ஆப்ரிக்கா மற்றும் அனைத்து பகுதிகளில் இருந்து வரும் பலரை நான் அறிவேன். கிரையோனிக்ஸ் பற்றி யாரும் யோசிக்கவே இல்லை.
பிபிசி: முதுமைப் பயம் பலரிடையே அதிகரித்துள்ளது. அதனால்தான் போடோக்ஸ் பயன்படுத்துகிறோம். அதாவது நரைத்த முடிக்கு கலர் அடிப்பது போல. இப்படிப்பட்டவற்றால் நமக்கு வயதாகிறது என்ற பயம் குறையும் என்று நினைக்கிறீர்களா?
வெங்கி ராமகிருஷ்ணன்: வயது வித்தியாசமின்றி ஒருவருக்கு பல அழுத்தங்கள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு அதிக அழுத்தம் உள்ளது. ஆனால் முதுமையை தடுக்கும் ஆராய்ச்சி முதுமை பயத்தை குறைக்கும் என்று நான் நினைக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
பிபிசி: முதுமையை தாமதப்படுத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. நிறைய பணம் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால், உங்கள் புத்தகத்தில் ஆரோக்கியமாக இருக்க மற்ற வழிகளை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். அவற்றைப் பற்றி விளக்க முடியுமா?
வெங்கி ராமகிருஷ்ணன்: நல்ல தூக்கம், நல்ல உணவு, உடற்பயிற்சி போன்றவை அவசிய தேவை. வயதாவதைத் தடுக்கும் எந்த மருந்தும் சந்தையில் இல்லை.
நமது பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. எந்த பக்க விளைவுகளும் இதில் இல்லை.
நமது உயிரியல் பரிணாமம் சார்பு மற்றும் வேட்டையாடலில் தொடங்கியது. அந்தக் காலத்தில் மக்கள் சீரான முறையில் சாப்பிட்டு வந்தனர். இயற்கையாகவே அவர்கள் மிகச்சரியாக சாப்பிட்டு, நன்றாக உறங்கி வந்த நிலையில், நான் முன்பே குறிப்பிட்டது போல அவை கலோரிகளையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன.
ஆனால் இப்போது பசி இல்லாவிட்டாலும் சாப்பிடுகிறோம். மேற்கில் உடல் பருமன் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. நம் முன்னோர்களை ஒப்பிடும்போது நாம் வயிற்றில் எப்போதும் எதையாவது வைத்திருக்கிறோம். உடற்பயிற்சியையும் போதுமான அளவு நாம் செய்வதில்லை.
மேலும் தூக்கம் வரும்போது, அதன் முக்கியத்துவம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. நன்றாகத் தூங்குவது நமது உடலின் மறுசீரமைப்பு அமைப்புகளில் மிக முக்கியமான பகுதி என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
இப்போது நம் முன்னோர்களின் நடைமுறைகளைப் பின்பற்றினால், தசை, மைட்டோகாண்ட்ரியல் செயல்பாடு, இரத்த அழுத்தம், மன அழுத்தம், நினைவாற்றல் இழப்பு போன்ற அபாயங்களைக் குறைக்கலாம். இவற்றை எப்போதும் பின்பற்றுவது எளிதாக இருக்காது. சில நேரங்களில் மக்கள் ஒரு மாத்திரையை எடுத்துக் கொண்டு அவர்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆனால், அதைக் கடக்க வேண்டும்.
பிபிசி: நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்கள் என்பதல்ல முக்கியம்... எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம் என்ற பழமொழி உங்களுக்கு பிடிக்குமா?
வெங்கி ராமகிருஷ்ணன்: ஆம், நல்ல வார்த்தை. இதற்கு நான் உடன்படுகிறேன். அதுதான் தேவை. வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று தெரிந்து கொண்டால்.. நெஞ்சு வலி அபாயங்கள் குறையும். மனநிலையையும் அது நன்றாக மேம்படுத்துகிறது.
முடிந்தவரை நாம் விரும்பும் வரை வாழ விரும்புகிறோம். அது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நாம் தனிப்பட்ட முறையில் விரும்புவது இந்த சமுதாயத்திற்கோ அல்லது இந்தச் சூழலிற்கோ சிறந்ததாக இருக்காது.
புதைபடிவ எரிபொருள் பயன்பாடு மற்றும் புவி வெப்பமடைதல் காரணமாக பல்லுயிர்ப் பெருக்கத்தின் பாதிப்பை நாம் காண்கிறோம். தனி மனிதனாக நாம் எடுக்கும் முடிவுகள் சமூகத்திற்கு கேடாக அமைகின்றன. அதைக் கடக்க நமக்கு ஒரு உண்மையான உணர்வு தேவை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












