வென்றது சிஎஸ்கே: ஒற்றை கையால் சிக்சர் அடித்த வின்டேஜ் தோனி

லக்னெளவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 6 ஆண்டுகளுக்குப் பின் ஆட்டநாயகன் விருது வென்றார் தோனி.

பந்து வீச்சில் சிறப்பாக லக்னௌவை கட்டுப்படுத்திய சென்னை அணி, எளிதான இலக்கை நோக்கி ஆடத் தொடங்கியது.

போட்டி லக்னௌ அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்றாலும், ரசிகர்கள் முழுவதும் மஞ்சள் படையாகவே இருந்தது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே பேட்டிங் செய்த சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது.

இளம் வீரர் ஷேக் ரஷீத் கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தினார். 19 பந்துகளை சந்தித்த இவர் 27 ரன்களை எடுத்தார். மறுமுனையில் ரச்சின் ரவீந்திரா 22 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார்.

ராகுல் திரிபாதி, ரவீந்திர ஜடேஜா ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய ஷிவம் துபே, இன்று தனது பொறுப்புக்கு ஏற்ப ஆடி 37 பந்துகளில் 43 ரன்களை எடுத்தார்.

ஜேமி ஓவர்டனை அமர வைத்து விட்டு முன்னதாகவே களம் கண்டார் தோனி. 16வது ஓவரை ஆவேஷ் வீசிய நிலையில் பவுண்டரி அடித்து அதிரடியைத் தொடங்கினார் தோனி.

ஷர்துல் தாகூர் வீசிய 17வது ஓவரில் ஒற்றைக் கையால் தோனி சிக்சர் அடிக்கவே அரங்கம் அதிர்ந்தது. இந்த ஓவரில் 13 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் 18 பந்துகளில் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது.

19வது ஓவரையும் ஷர்துல் வீச அதே ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் சிக்சர் பறந்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் சென்னை அணி எளிதாக வெற்றி இலக்கை எட்டியது.

11 பந்துகளில் 26 ரன்களை எட்டிய தோனி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றறார். 2019ம் ஆண்டுக்குப் பின் தோனி பெறும் முதல் ஆட்ட நாயகன் விருது இதுவாகும்.

முன்னதாக முதலில் பேட் செய்த லக்னெள அணி ஆரம்பம் முதலே தடுமாறியது.

கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில் பவர் பிளேயில் விக்கெட் இழக்காத லக்னௌ அணி இன்று இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

லெக்சைடில் மார்க்ரம் விளாசிய பந்தை ராகுல் திரிபாதி அபாரமாக ஓடிச் சென்று கேட்ச் செய்தார் ராகுல் திரிபாதி. மறுபுறம் நிகோலஸ் பூரனின் விக்கெட்டை எல்பிடபுள்யூ முறையில் கம்போஜ் வீழ்த்தினார். இருப்பினும் மிட்செல் மார்ஷ் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் அவருக்கு துணையாக கேப்டன் ரிஷப் பண்ட்டும் களமிறங்கி ரன்களைத் திரட்டினார்.

நிலைத்து ஆட முயன்ற இந்த இணையை ரவீந்திர ஜடேஜா பிரித்தார். 10வது ஓவரில் மார்ஷ் கிளீன் பவுல்டாகி ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய பதோனி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஜேமி ஓவர்டன் வீசிய 12 வது ஓவரில் இரண்டு சிக்சர்களை அடுத்தடுத்து விளாசினார் பதோனி.

இருமுறை அவுட் ஆவதிலிருந்து தப்பிய பதோனி ஜடேஜா வீசிய பந்தை இறங்கி வந்து ஆட முயற்சிக்கும் போது, தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

இதன் பின்னர் சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி அழுத்தம் ஏற்படுத்தினர். குறிப்பாக நூர் அகமது வீசிய 15வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இக்கட்டான சூழலில் பொறுப்பாக பேட்டிங் செய்த லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அரை சதம் கடந்தார்.

இரண்டுமுறை அவுட் ஆவதிலிந்து தப்பிய ரிஷப் பண்ட் , கடைசி ஓவரில் பதிராணா பந்து வீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் லக்னௌ அணி 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.

சென்னை அணியில் மாற்றம்

சென்னை அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்,டெவோன் கான்வே நீக்கப்பட்டு ஷேக் ரஷீத் மற்றும் ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிளேயிங் லெவன்: ரச்சின் ரவீந்திரா, ஷேக் ரஷீத், ராகுல் திரிபாதி, ரவீந்திர ஜடேஜா, விஜய் ஷங்கர், ஜேமி ஓவர்ன், எம்எஸ் தோனி, அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிராணா

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விவரம்

மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரண், ரிஷப் பண்ட், ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், திக்வேஷ் ரதி, ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான்.

குரு Vs சிஷ்யன் நேருக்கு நேர்

"நான் தோனியுடன் அனைத்தையும் ஆலோசிப்பேன். நான் மனம் விட்டுப்பேசக் கூடிய வெகுசிலரில் அவரும் ஒருவர். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். தோனியிடம் பகிர்ந்த விஷயங்களை வேறு யாருடனும் நான் பேசியது இல்லை" இது தோனி குறித்து ரிஷப் பண்ட் பேசிய வார்த்தைகள்.

இவ்வாறு குரு-சிஷ்யன் உறவுடை இருவரின் தலைமையில் இரு அணிகளும் இன்று மோதுகின்றன. சென்னை அணியைப் பொருத்தவரையிலும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. முதல் 6 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் லக்னௌ அணி 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. அதிலும் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் லக்னௌ அணி வென்றுள்ளது. இந்த 3 போட்டிகளிலுமே லக்னௌ பவர்பிளேயில் விக்கெட்டை இழக்கவில்லை.

ஆனால் சென்னை அணி பவர்பிளேயில் தொடர்ந்து தடுமாறி வருகிறது. ஐபிஎல் தொடரின் டாப் 10 பேட்டர்கள் வரிசையில் ஒரு சென்னை வீரர் கூட இல்லை.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு