You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இளைஞரால் எரிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனப்பாளையம் பகுதியில் இளைஞர் ஒருவர் பெண்ணை எரித்துக் கொன்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பெத்தாம்பாளையம் சாலையில் நேற்று மாலை காட்டுப் பகுதியில் இருந்து உடலில் தீக்காயங்களுடன் இளம்பெண் ஒருவர் அலறியபடி பிரதான சாலைக்கு ஓடி வந்தாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இளம்பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர்.
இதனிடையே பெண்ணின் மீது தீ வைத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற வாலிபர் தவறி விழுந்து காயமடைந்தாா். அவரை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். மேலும் இளம்பெண்ணுக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
போலீஸ் விசாரணை கூறுவது என்ன?
இந்த சம்பவம் குறித்து டி எஸ் பி செளனியா மற்றும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தீ வைக்கப்பட்ட பெண் வடமாநிலத்தை சோ்ந்த பூஜா (வயது 19) என்பதும், பல்லடம் ராயா்பாளையம் பகுதியில் உள்ள உறவினா் இப்ராகிம் என்பவா் வீட்டில் தங்கி அருகே உள்ள பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.
வேலைக்கு சென்ற இடத்தில் ராயா்பாளையம் பகுதியைச் சோ்ந்த குணசேகரன் மகன் லோகேஷ் (22) என்பவருடன் பூஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
பூஜா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி லோகேஷை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை பல்லடம் பனப்பாளையம் பெத்தாம்பாளையம் சாலையில் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனா். அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த லோகேஷ் கல்லால் பூஜாவை தாக்கியதுடன் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை, பூஜா மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் உடல் முழுவதும் தீப்பிடித்த நிலையில் பூஜா அலறியபடி சாலைக்கு ஓடி வந்துள்ளாா். இதனைக் கண்ட லோகேஷ் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றபோது தவறி விழுந்து காயமடைந்தது, விசாரணை தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பூஜா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் லோகேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பூஜாவின் சொந்த ஊர் மும்பை. தாய்-தந்தையை இழந்த அவர், ராயர்பாளையத்திலுள்ள உறவினரான இப்ராகிம் வீட்டில் தங்கி, பணிபுரிந்து வந்துள்ளார். இந்தநிலையில் அவர் காதலனால் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்