You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அநுரவின் ஆட்சியில் இந்தியா-இலங்கை உறவு எப்படி இருக்கும்?
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவருடைய கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன ஒரு இடதுசாரி கட்சியாக அறியப்பட்டதால், அவர் இந்தியாவைவிட சீனாவுடன் கூடுதல் நெருக்கம் காட்டுவாரா? எனும் கேள்வி எழுந்துள்ளது.
இலங்கையின் வரலாற்றில் ஒரு இடதுசாரி தலைவர் ஜனாதிபதியாக பதவியேற்பதும் இதுவே முதல் முறை. இந்த நிலையில், இலங்கைக்கு அருகில் உள்ள பிராந்திய சக்திகளான இந்தியாவையும் சீனாவையும் புதிய ஜனாதிபதி எப்படி அணுகுவார் என்பது முக்கிய கேள்வியாக தெற்காசிய பிராந்திய அரசியலில் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் இலங்கை குறித்த கொள்கையை ஜனதா விமுக்தி பெரமுன நீண்ட காலமாக விமர்சித்து வருகிறது. ஒருவித ஆதிக்க மனோபாவத்துடனேயே இலங்கையை இந்தியா அணுகுவதாக குற்றம்சாட்டியும் வந்தது. சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற பேச்சுகள் இல்லை என்றாலும் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் இறுதிக் கட்டத்தில், செப்டம்பர் 16ஆம் தேதியன்று ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியில் இந்தியா பற்றிய அவரது பேச்சு கவனிக்கத்தக்கதாக இருந்தது.
தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் இலங்கையில் அதானி குழும முதலீட்டில் உருவாகும் காற்றாலை மின் திட்டம் ரத்து செய்யப்படும் என்றார். அந்தத் திட்டம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று அவர் குறிப்பிட்டார். அநுரவின் ஆட்சி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)