அமேசான் காட்டில் குழந்தைகளை கண்டுபிடித்துவிட்டு தொலைந்த நாய் - தேடுதல் பணியில் ராணுவம்

அமேசான் காட்டில் 40 நாட்கள் சிக்கியிருந்த குழந்தைகளை மீட்க உதவிய நாய் - அடர்காட்டில் தொலைந்த பரிதாபம்

பட மூலாதாரம், EJÉRCITO NACIONAL DE COLOMBIA

தொலைந்த குழந்தைகளைக் கண்டடைய மிகவும் உதவிய நாய்

“தேடுதல் வேட்டை இன்னும் முடியவில்லை,” என்று கொலம்பியாவின் ராணுவம் ஞாயிற்றுக் கிழமை அறிவித்தது.

ஒரு விமான விபத்தில் சிக்கி, 40 நாட்கள் அமேசான் அடர்காடுகளில் தொலைந்து போயிருந்த நான்கு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதை, கொலம்பியா கொண்டாடி வருகிறது. ஆனால் இந்தத் தென் அமெரிக்க நாட்டின் ராணுவமோ தொலைந்து போனவர்களில் கடைசியாக ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறது.

வில்சன் என்று பெயரிடப்பட்ட மீட்பு நாய்தான் அந்த ஒருவர்.

கொலம்பியா, அமேசான் காடுகள், குழந்தைகள், நாய், மீட்பு

பட மூலாதாரம், EJÉRCITO NACIONAL DE COLOMBIA

படக்குறிப்பு, குழந்தைகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் வில்சன்

தொலைந்துபோன குழந்தைகள் காட்டுக்குள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கான தடயங்களைக் கண்டறிய மிகவும் உதவியாக இருந்தது ஆறு வயதான இந்த பெல்ஜியன் ஷெபர்ட் வகை நாய். கொலம்பியாவின் தேசிய ராணுவம் டிவிட்டரில் இத்தகவலைப் பகிர்ந்திருக்கிறது.

காட்டுக்குள், ‘குழந்தைகளின் கால்தடங்கள்’ என்று கருதப்பட்ட சிறிய மனிதக் கால்தடங்களுக்கு அருகில், ‘நாயின் கால்தடங்கள்’ கண்டுபிடிக்கப்பட்டன. இதன்மூலம், இந்த நாயும் குழந்தைகளுடன் சிலகாலம் இருந்திருக்கலாம் என்று ராணுவம் எண்ணுகிறது.

ஆனால் இப்போது வில்சன் என்னும் இந்நாய் தொலைந்துபோய்விட்டது. மோசமான வானிலை மற்றும் பயங்கர மிருகங்கள் நிறைந்த காட்டில் அது தொலைந்து போனதாகச் சொல்லப்படுகிறது.

'யாரையும் கைவிடுவதில்லை' என்னும் கொள்கையின்படி, மீட்புப் படையினரில் ஒருவர் தொலைந்து போயிருந்தால் எப்படித் தேடுதல் வேட்டை நடக்குமோ, அதேபோல வில்சனையும் தேடி வருவதாக ராணுவம் தெரிவித்திருக்கிறது.

முதல் தடயத்தைக் கண்டுபிடித்த வில்சன்

 கொலம்பியா, அமேசான் காடுகள், குழந்தைகள், நாய், மீட்பு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, குழந்தைகள் ஜுன் 9ஆம் தேதி ராணுவம் மற்றும் சில பழங்குடி மக்களின் உதவியோடு மீட்கப்பட்டனர்

கொலம்பியாவின் அமேசான் காடுகளில் சிக்கியிருந்த நான்கு பழங்குடிக் குழந்தைகளான லெஸ்லி, சொலெய்னி, தியென், மற்றும் க்றிஸ்டின் ஆகியோரை மீட்கும் பணியின்போது வில்சன் தொலைந்துபோனது.

குழந்தைகள் ஜுன் 9ஆம் தேதி ராணுவம் மற்றும் சில பழங்குடி மக்களின் உதவியோடு மீட்கப்பட்டனர். தற்போது அவர்கள் நாட்டின் தலைநகரான பொகோடாவில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

குழந்தைகளைத்தவிர, அவர்கள் பயணித்த விமானத்திலிருந்த அனைவரும் – குழந்தைகளின் தாய், விமானி, மற்றும் ஒரு பழங்குடித் தலைவர் - விபத்தில் இறந்தனர்.

கொலம்பியா, அமேசான் காடுகள், குழந்தைகள், நாய், மீட்பு

பட மூலாதாரம், EJÉRCITO NACIONAL DE COLOMBIA

படக்குறிப்பு, வில்சன் செடிகளுக்கு நடுவே ஒரு பிங்க் நிற ஃபீடிங்க் பாட்டிலைக் கண்டுபிடித்த போதுதான் குழந்தைகள் உயிருடன் இருக்கின்றனர் என்ற நம்பிக்கை வலுப்பட்டது

மீட்புப் பணிகளில் நாயின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது, என்கின்றனர் ராணுவத்தினர். மார்ச் 15ஆம் தேதி காட்டுச்செடிகளுக்கு நடுவே ஒரு பிங்க் நிற ஃபீடிங்க் பாட்டிலைக் கண்டுபிடித்தது வில்சன். இதுவே அக்குழந்தைகள் உயிருடன் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியது.

வில்சன் தொலைந்துபோன தகவலை கொலம்பிய ராணுவம் சென்ற வியாழக்கிழமை தெரிவித்தது.

“சிக்கலான காட்டு நிலப்பரப்பு, ஈரப்பதம், மற்றும் மோசமான வானிலை காரணமாக அது வழிதவறிப் போயிருக்கலாம்,” என்று ராணுவம் தெரிவித்தது.

வில்சன், மற்ற அனைவருக்கும் முன் குழந்தைகளிடம் சென்று, அவர்களுடன் சிலகாலம் இருந்திருக்கலாம் என்பதற்கான சில ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

காட்டில் குழந்தைகளுக்குத் துணையாக இருந்த நாய்

கொலம்பியா, அமேசான் காடுகள், குழந்தைகள், நாய், மீட்பு

பட மூலாதாரம், EJÉRCITO NACIONAL DE COLOMBIA

படக்குறிப்பு, குட்டியாக இருந்தபோதே வில்சன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டது

குழந்தைகள், காட்டில் இருந்தபோது ‘ஒரு நாயைச்’ சந்தித்ததாகக் கூறினர் என்று, கொலம்பியா அரசின் குடும்ப நல நிறுவனத்தின் இயக்குநர் ஆஸ்ட்ரிட் காசெரெஸ் தெரிவித்தார். ஆனால் அவர்கள் அது வில்சன் தானா என்று சொல்லவில்லை.

‘தொலைந்துபோன ஒரு நாய்க்குட்டி தங்களுக்குத் துணையாகச் சிலகாலம் இருந்தது, ஆனால் இப்போது அது எங்கு இருக்கிறதென்று தெரியவில்லை,’ என்று குழந்தைகள் சொன்னதாகக் காசெரெஸ் தெரிவித்தார்.

இதனோடு சேர்ந்து ராணுவத்தினர் காட்டுக்குள் கண்டுபிடித்த நாயின் கால்தடங்களும் முக்கியமான ஆதாரங்கள்.

கொலம்பியா, அமேசான் காடுகள், குழந்தைகள், நாய், மீட்பு

பட மூலாதாரம், EJÉRCITO NACIONAL DE COLOMBIA

படக்குறிப்பு, குழந்தைகள் சில படங்களை வரைந்து காட்டியதாகவும், அவைு வில்சனைப்போல தோற்றம் கொண்டிருந்ததாகவும் ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்

முப்படைத் தளபதி ஹெல்டெர் ஃபெர்னான் கிரால்டோ, மீட்கப்பட்டக் குழந்தைகளை மருத்துவமனையில் சந்திக்கச் சென்றிடுந்தார். அப்போது, லெஸ்லி, சொலெய்னி ஆகிய பெண்குழந்தைகள் சில படங்களை வரைந்து காட்டியதாகவும், அவற்றில் இருந்த நாய் 'வில்சனைப்போல தோற்றம் கொண்டிருந்ததாகவும்' அவர் சொன்னார்.

இந்த ஓவியங்கள் ‘நமது நான்கு கால் நண்பனின்’ அசாத்திய முயற்சிக்கான சான்று, என்றும் வில்சன் ‘கைவிடப்பட மாட்டான்’ என்றும் ராணுவம் தெரிவித்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: