திட்வா புயல்: சென்னையில் மழை நீடிக்குமா? தற்போதைய நிலவரம் என்ன?

திட்வா புயல், சென்னை, தமிழ்நாடு, இந்தியா

பட மூலாதாரம், IMD

படக்குறிப்பு, வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நிலையைக் காட்டும் இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள வரைபடம்.

வங்கக் கடலில் உருவான திட்வா புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் நாளை (டிசம்பர் 3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைப்படி, "காலை 11.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 60 கி.மீ தொலைவிலும், கடலூருக்கு வடக்கு-வடகிழக்கே 110 கி.மீ தொலைவிலும் புதுச்சேரிக்கு வடகிழக்கே 90 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல், வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரைப் பகுதியையொட்டி மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.''

"இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதியானது, வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையில் இருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கிறது. இது அடுத்த 12 மணிநேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே தொடரும். அதன் பிறகு அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்தப் பகுதியாக மேலும் வலுவிழக்கும்" என்று வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை (டிசம்பர் 3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேநேரம், திருவள்ளூரில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு?

டிசம்பர் 3 காலை 8.30 மணி வரை

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திட்வா புயல்: சென்னையில் மழை நீடிக்குமா? தற்போதைய நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

வேகமான காற்று வீசக்கூடும்

டிசம்பர் 2ஆம் தேதி தமிழ்நாட்டின் வட கடலோரம் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் வேகமான காற்று வீசக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

டிசம்பர் ஒன்றாம் தேதி இரவு 11.30 மணியளவில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடற்கரைகளில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் (அவ்வப்போது மணிக்கு 70 கிமீ வேகத்திலும் வீசியது) வீசி வந்தது. டிசம்பர் 2 காலை இதன் வேகம் மணிக்கு 45-55 கிமீ வேகத்திற்குக் குறையக்கூடும். அவ்வப்போது மணிக்கு 65 கிமீ வேகம் வரை வீசலாம்.

தெற்கு தமிழ்நாடு கடற்கரை, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் (அவ்வப்போது மணிக்கு 65 கிமீ வேகத்திலும் வீசியது) வீசி வந்தது. டிசம்பர் 2 காலை இதன் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்திற்குக் குறையக்கூடும். அவ்வப்போது மணிக்கு 60 கிமீ வேகம் வரை வீசலாம்.

திட்வா புயல்: சென்னையில் மழை நீடிக்குமா? தற்போதைய நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்தப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. மீனவர்கள் இந்தக் காலகட்டத்தில் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலுக்குள் இருப்பவர்கள் டிசம்பர் 2 காலை வரை தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா கடற்கரைகளையும், வன்னார் வளைகுடா, குமரிக்கண்டம் ஆகிய பகுதிகளையும் தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டது.

புயல் எச்சரிக்கைக் கூண்டு

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு