You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கத்தார்: 50 ஆண்டுகளாக வயிற்றில் துப்பாக்கிக் குண்டுடன் வாழ்ந்து மறைந்த புரட்சிப் பாடகர்
புரட்சிகர பாடகர் கத்தார், ஆகஸ்ட் 6ஆம் தேதி, ஹைதராபாத்-இல் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். நுரையீரல் மற்றும் சிறுநீரகத் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது இயற்பெயர் கும்மடி வித்தல் ராவ் ஆகும். 76 வயதான அவருக்கு விமலா என்ற மனைவியும் சுர்யுது என்ற மகனும், வெண்ணிலா என்ற மகளும் உள்ளனர்.
கத்தார், 1948-ம் ஆண்டு தெலங்கானாவில் உள்ள மேடக் மாவட்டம் தூப்ரான் பகுதியில் தலித் குடும்பத்தில் பிறந்தவர். 1970களில் சில காலம் கனரா வங்கியில் பணி புரிந்தார். அதன் பின், திரைப்பட இயக்குநர் பி நரசிங்கராவ் தொடங்கிய, கலை ரசிகர்கள் சங்கத்தில் இணைந்து, வீதி நாடகங்கள் மூலம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நக்சல் இயக்கத்தின் பரப்புரையாளர்
பின்னர், நக்சல் அரசியல் இயக்கத்தில் செயலாற்ற தொடங்கினார். மக்களின் போர் குழு என்ற நக்சல் அமைப்பின் கலாச்சார குழுவான ஜனநாட்டிய மண்டலியின் நிறுவன உறுப்பினர் இவர். மக்கள் போர் குழு என்பது முன்னதாக சிபிஐ (மார்க்சிய-லெனினிய) மக்களின் போர் என்றழைக்கப்பட்ட அமைப்பாகும்.
நக்சல் இயக்கப் பணிகளின் ஒரு பகுதியாக கத்தார் , தலைமறைவாக வாழ்ந்து வந்தார். அப்போது குஜராத் மற்றும் பிற பகுதிகளில் மார்க்சிய – லெனினிய சிந்தாந்தங்களின் அடிப்படையில் இயங்கும் பல்வேறு கலாச்சார அமைப்புகளை ஒன்றிணைக்கும் பணியை மேற்கொண்டார். தெலுங்கு தேசத்தில் இளைஞர்கள் பலர் இவரது பாடல்களால் கவர்ந்திழுக்கப்பட்டு நக்சல் இயக்கத்தில் இணைந்தனர். ஆகவே, அவர், “ப்ரஜா யுத்த நௌகா” (மக்கள் போரின் போர்க்கப்பல்) என்றழைக்கப்பட்டார்.
நக்சல் இயக்கத்துடன் கருத்து மோதல்
1990களின் தொடக்கத்தில் தலைமறைவு வாழ்விலிருந்து வெளியே வந்து, மக்கள் உரிமைகளுக்கான அமைப்புகள் மற்றும் பிற செயற்பாட்டாளர்களுடன் பணியாற்ற தொடங்கினார். 1990களின் இடைக்காலத்தில் நக்சல் இயகத்துடனான தனது கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தினார். அப்போது முதல் அவருக்கும் நக்சல் இயக்கத்துக்குமான கருத்து மோதல்கள் வளர தொடங்கின.
1997-ல் தெரியாத நபர்களால் தன்னை கொல்வதற்கான தாக்குதலிலிருந்து உயிர் தப்பினார். அவரது உடலில் இறக்கும் வரை ஒரு புல்லெட் இருந்தது. மக்கள் உரிமை இயக்கங்கள், அந்த தாக்குதலுக்கு காவல்துறையை குற்றம் சாட்டுகின்றனர்.
1990களின் இறுதியில் அவர் தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அம்பேத்கரியத்தை நோக்கி நகர்ந்தார். அம்பேத்கரியமும் மார்க்சியமும் இணைய வேண்டிய அவசியம் குறித்து அவர் பேசி வந்தார்.
2000-ம் ஆண்டு முதல் தெலங்கானா இயக்கத்தில் ஆர்வமாக பங்கேற்றார். அவரது பாடல் “போஸ்துஸ்துன்னா பொதுமேடா, நாடுஸ்துன்னா காலமா” தெலங்கானா இயக்கத்தின் பிரபலமான பாடலாகியது.
தேர்தல் அரசியல் மீது புது நம்பிக்கை
கடந்த பத்து ஆண்டுகளில் நாடாளுமன்ற அரசியல் பங்கேற்பு குறித்தும் வாக்கு அரசியல் மூலம் மாற்றத்தைக் கொண்டு வருவது குறித்தும் பேச தொடங்கினார். தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் என்ற அவரது முந்தைய கருத்துக்கு மாறாக 2018-ம் ஆண்டு முதல் முறையாக தேர்தலில் தனது வாக்கை செலுத்தினார். அவர் காங்கிரஸ் கட்சியுடன் சிறிது காலம் பயணித்தார். ஆனால், திடீரென் இரண்டு மாதங்கள் முன்பு, புதுக் கட்சி தொடங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த போவதாக அறிவித்தார்.
கடந்த மாதம் உடல் நலமில்லாததால் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். சமீபத்தில் அவருக்கு இருதய பை பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தீவிர நுரையீரல், சிறுநீரகத் தொற்று காரணமாகவும் வயது மூப்பு காரணமாகவும் அவர் ஞாயிற்றுகிழமை உயிரிழந்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்