ஆப்ரிக்க நாட்டில் 66 குழந்தைகள் சாவுக்கு இந்திய இருமல் மருந்து காரணமா? லஞ்சம் தர முயன்றதாக புதிய புகார்

பட மூலாதாரம், WHO
ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு இந்தியாவில் தயாரான 4 இருமல் மருந்துகளுக்குத் தொடர்பு இருப்பதாக கூறி, உலக சுகாதார நிறுவனம் 'மருந்து எச்சரிக்கை குறிப்பு' விடுத்திருந்தது.
மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் சிறுநீரக காயங்கள் காரணமாக குழந்தைகள் இறந்தது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புலனாய்வுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மெய்டன் ஃபார்மாசூட்டிகல் நிறுவனத்திடமும், இந்திய அதிகாரிகளிடமும் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டு விசாரணைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த சிரப்புகளின் விற்பனையை நிறுத்தும்படி மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு அறிவுரை வழங்கியிருந்தது உலக சுகாதார நிறுவனம்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய சுகாதார அமைச்சகத்தின் தலைமையில் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குற்றச்சாட்டுக்கு உள்ளான 4 இருமல் சிரப்புகளின் மாதிரிகளைப் பரிசோதனை செய்து தாங்கள் கண்டுபிடித்ததை உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குனர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியோசஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார்.
உலக சுகாதார நிறுவனம் கண்டுபிடித்தது என்ன?
மனித உடலுக்கு நஞ்சாகக் கூடிய, சாப்பிட்டால் உயிரைப் பறிக்கக் கூடிய டை எத்திலின் கிளைகோல் மற்றும் எத்திலின் கிளைகோல் ஆகிய பொருள்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு இந்த சிரப்பில் கலந்து இருந்ததை ஆய்வகப் பகுப்பாய்வுகள் காட்டியதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நான்கு மருந்துகளும் காம்பியாவில் இருப்பது கண்டறியப் பட்டுள்ளதாகவும், முறைசாரா சந்தைகள் மூலம் வேறு சில நாடுகளிலும் இந்த மருந்துகள் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது.
"அந்தந்த நாடுகளின் தேசிய மருந்து ஒழுங்குமுறை அமைப்புகள் பகுப்பாய்வு செய்யும்வரை இந்த மருந்து பேட்ச்கள் அனைத்தும் பாதுகாப்பற்றவை என்று கருதப்பட வேண்டும்," என்றும் அது கூறியுள்ளது.
உலகில் உற்பத்தியாகும் இந்த மருந்துகளில் மூன்றில் ஒரு மடங்கு இந்தியாவில் உற்பத்தியாகின்றன. இவற்றில் பெரும்பாலானவை ஜெனரிக் மருந்துகளாகும்.

பட மூலாதாரம், NATALIIA LYSHYK/GETTY
உலகின் மிக வேகமாக வளரும் மருந்து நிறுவனங்களைக் கொண்டுள்ள, 'உலகின் மருந்துக்கூடம்' என்று அறியப்படுகிற இந்தியா, ஆப்பிரிக்க நாடுகளின் மருந்துத் தேவைகளை பெருமளவில் நிறைவு செய்கிறது.
தற்போது சர்ச்சைக்குள்ளாகிய மருந்துகளைத் தயாரிக்கும் மெய்டன் ஃபார்மாசூட்டிகல் நிறுவனம் ஹரியாணா மாநிலத்தில் அமைந்துள்ளது,
இந்நிறுவனம் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது என்று கூறுகிறது ராய்டர்ஸ் செய்தி முகமை.
காம்பியாவில் டஜன்கணக்கான குழந்தைகளுக்கு தீவிரமான சிறுநீரகப் பிரச்னை வந்ததை அடுத்து கடந்த ஜூலை மாதம் இது குறித்த எச்சரிக்கையை எழுப்பினார்கள் காம்பியாவில் உள்ள மருத்துவத்துறை அதிகாரிகள்.
இந்த மருந்துகளின் விற்பனையை தங்கள் நாடு தடை செய்திருப்பதாகவும், கடந்த சில வாரங்களில் இத்தகைய மரணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் காம்பியாவின் சுகாதார சேவைகள் இயக்குநர் முஸ்தபா பிட்டாயே ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார்.
"ஆனாலும், இந்த சிரப்புகள் இன்னும் சில தனியார் மருத்துவமனைகளில் விற்கப்படுகின்றன," என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
லஞ்சம் கொடுக்க முயற்சியா?
உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து புகார் வந்ததை அடுத்து இந்திய சுகாதார அமைச்சரகம் விசாரணைக்கு உத்தரவிட்டது.
தற்போது இந்த விசாரணையில் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ், சோதனைக்காக அனுப்பப்பட்ட மாதிரிகளில் முறைகேடு செய்துள்ளதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டை எழுந்துள்ளது. அதனை அந்த நிறுவனம் மறுத்துள்ளது.
இது குறித்த தனது விசாரணை தற்போது முடியும் நிலையில் இருப்பதாக ஹரியானாவில் இந்த நிறுவனத்தை விசாரித்து வரும் அரசு அதிகாரி ககன்தீப் சிங் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளை மாற்றுவதற்காக மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதா என்று ககன்தீப் சிங் விசாரணை நடத்தி வருகிறார்.
இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனர் நரேஷ் கோயல், தான் லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை என்றும், விசாரணை அதிகாரி தன்னை ஆஜராகும்படி சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த லஞ்ச புகாருக்கு பின்னால் தங்கள் போட்டி நிறுவனத்தின் சதி இருப்பதாக கூறியுள்ளார் நரேஷ் கோயல். ஆனால், அவர் இதில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.
இது குறித்து அரசு அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












