You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளம்: 17 வயது சிறுவன் பலி, சிக்கிய 40 பேரின் நிலை என்ன?
- எழுதியவர், சுப கோமதி
- பதவி, பிபிசி தமிழுக்காக
தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்தது. இன்று காலையில் இருந்து வெயில் இல்லாமல் இதமான சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனால் குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.
காலையிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளில் குளித்து வந்தனர். இந்நிலையில் சுமார் 2.30 மணியளவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகப் பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி குற்றாலம் பகுதியில் மழை பெய்யவில்லை என்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் ஐந்தருவியில் முன்னதாகவே சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பழைய குற்றாலத்தில் அறிவிப்புகள் எதுவும் இல்லாததால், தண்ணீரின் வரத்து அதிகரித்தவுடன் சுற்றுலாப் பயணிகள் தாங்களாகவே அருவிக் கரைக்கு வந்தனர்.
சுமார் 300க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பழைய குற்றாலத்தில் குளித்து கொண்டிருக்கையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 40க்கும் மேற்பட்டோர் சிக்கினர். பிறகு, அவர்களைத் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர் . இதில் நெல்லையைச் சேர்ந்த அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். தீயணைப்புத் துறையினர் அவரது உடலை மீட்டனர்.
மேலும் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது. தற்போது சம்பவம் நடைபெற்ற பழைய குற்றாலம் அருவியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முன்கூட்டியே தொடங்கிய குற்றாலம் சீசன்
தென்காசி மாவட்டத்திற்கு கனமழை குறித்து ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த சூழலில், தென்காசியில் நேற்று 9 மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. சங்கரன்கோவிலில் 2மி.மீ, அடைவிநாயனார் அணை 25மி.மீ, ராமனதி அணை 22மி.மீ, சிவகிரி 4மி.மீ, ஆய்க்குடி 3மி.மீ என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.
மேலும் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், புளியங்குடி, குற்றாலம், பகுதியில் இரவு நேரத்தில் கனமழை பெய்தது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றால சீசன் தொடங்கும்.
பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கும் குற்றால சீசன் கோடை மழையின் காரணமாகத் தற்போது முன்னதாகவே தொடங்கியுள்ளது. தற்போது மே மாதத்தில் கோடை மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் குற்றால சீசன் தொடங்கியது. ஆனால், பொதுவாக மே மாதத்தில் வறண்டு, பாறையை ஒட்டியபடியே தண்ணீர் வந்துகொண்டிருக்கும் குற்றாலத்தில் இந்த ஆண்டு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
தற்போது திடீர் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)