You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதானியை அமெரிக்கா கைது செய்ய முடியுமா? மற்ற நாடுகளிலும் அதானி குழுமத்திற்கு சிக்கல் வருமா?
- எழுதியவர், ஜுகல் புரோஹித்
- பதவி, பிபிசி நிருபர்
62 வயதான கௌதம் அதானி, இந்தியாவின் பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த தொழிலதிபர்களில் ஒருவர்.
அமெரிக்காவில் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இதுவே மிகக் கடுமையானதாக உள்ளது.
அமெரிக்க நீதித்துறை , பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) போன்ற அமெரிக்க அரசு அமைப்புகளால் இக்குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவற்றை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்றும் கூறியுள்ளது.
- அதானி ரூ.1750 கோடி லஞ்சம் கொடுத்தாரா? அமெரிக்கா குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது ஏன்?
- அமெரிக்காவின் குற்றச்சாட்டு அதானி குழுமத்தின் சர்வதேச முதலீடுகளை எந்தளவுக்கு பாதிக்கும்?
- தமிழ்நாட்டிற்கு தரம் குறைந்த நிலக்கரியை 3 மடங்கு அதிக விலைக்கு விற்றதா? பிபிசிக்கு அதானி குழுமம் பதில்
- அதானி மோசடி வழக்கில் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் - நிபுணர்கள் விளக்கம்
அதானி மீதான குற்றச்சாட்டால் எழும் கேள்விகள்
இந்த குற்றச்சாட்டுகளால் அதானி குழும நிறுவனப் பங்குகளின் மதிப்பு பெரும் சரிவைக் கண்டது.
குற்றச்சாட்டுகளின் தீவிரத்தையும் அவற்றுக்கான எதிர்வினைகளையும் பார்க்கும் போது, இந்த விஷயம் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை என்பது தெளிவாகிறது.
அமெரிக்காவில் இந்த வழக்கு தொடர்பான சட்ட நடைமுறை என்னவாக இருக்கும்? இந்த குற்றச்சாட்டுகள் அதானி குழும வணிகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
கெளதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் சிறைக்குச் செல்ல வாய்ப்புள்ளதா? எதிர்காலத்தில் அதானி குழுமம் தனது திட்டங்களுக்கு வெளிநாட்டில் இருந்து எப்படி நிதி திரட்ட முடியும்? என்பன போன்ற பல கேள்விகள் உள்ளன.
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள, பிபிசி ஹிந்தி இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல நிபுணர்களிடம் பேசியுள்ளது.
சட்ட செயல்முறை மற்றும் சவால்கள்
கௌதம் அதானி மற்றும் பிறர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நியூயார்க்கில் அரசு வழக்கறிஞராக உள்ள பிரையன் பீஸ் விளக்கமளித்தார்.
“பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டம் தீட்டப்பட்டது” என்கிறார் பீஸ் .
கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து மூலதனத்தை திரட்ட முயன்றனர். அந்த முதலீட்டாளர்களிடம் பொய் சொல்லியுள்ளனர்.
ஆனந்த் அஹுஜா அமெரிக்காவில் வழக்கறிஞராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார்.
“குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது என்று நினைக்கிறேன். இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறேன்.” என்று பிபிசி ஹிந்தியிடம் பேசிய போது அவர் கூறினார்.
முதலாவதாக, “ லஞ்சம் பெற்றவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அப்படியானால், இந்தியாவில் உள்ளவர்களிடம் அமெரிக்க அதிகாரிகள் எவ்வாறு வாக்குமூலம் பெற முடியும்? இதில், இந்தியாவின் சட்ட முறைகளையும் பார்க்க வேண்டும். அதில் யாராவது அரசு அதிகாரியாக இருந்தால், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசிடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும். அதனால் இது ஒரு சிக்கலான வழக்காக மாறக்கூடும்." என்று அவர் கூறினார்.
"அமெரிக்காவின் அரசு வழக்கறிஞர்கள் இந்தியாவில் வாழும் மக்களை, குறிப்பாக அரசு அதிகாரிகளை எந்த அளவிற்கு விசாரிக்க முடியும் என்பது குறித்தும் இனிமேல் தான் தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய உச்ச நீதிமன்றமும் எதிர்காலத்தில் இதில் பங்கு வகிக்கலாம். ஏனென்றால், சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி உச்ச நீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்க முடியும். குற்றம் சாட்டப்பட்டவரின் செயல் மற்றும் நோக்கம் இரண்டும் ஒரே நேரத்தில் மோசடியை வெளிப்படுத்துகின்றதா? என்பதை நீதிபதி முன்பாக நிரூபிக்க வேண்டும்” . என்றார் அவர்.
மேற்கூறிய இந்த இரண்டு காரணங்களும் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு கடினமானதாக்குவதாக ஆனந்த் அஹுஜா தெரிவிக்கின்றார்.
"உதாரணமாக, நீங்கள் சில வேலைகளைச் செய்தால், அதை தவறான நோக்கத்துடன் செய்யவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடிந்தால், அதை மோசடி என்று அழைக்க முடியாது. எனவே அமெரிக்க அரசாங்க வழக்கறிஞர்கள் இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும்." என்று அவர் தெரிவித்தார்.
அதானியை அமெரிக்கா கைது செய்ய முடியுமா?
“இது போன்ற முந்தைய வழக்குகளைப் பார்த்தால், வழக்கமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதிலிருந்து விசாரணை முடியும் வரை ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும்” என இந்தக் கேள்விக்கு அஹுஜா பதில் கூறினார்.
தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதா?
“இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. அவை நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அவர் இழப்பீடு வழங்க வேண்டும். அல்லது இரண்டு தண்டனைகளும் கொடுக்கப்படலாம்” என மூத்த வழக்கறிஞரான ஹெச்பி ரனினா கூறுகிறார்.
"குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நடுவர் மன்றம் கருதினால், பெரும்பாலும் அங்குள்ள நீதிபதியின் தீர்ப்பைப் பொறுத்து தண்டனை அமையும்."
ரனினாவின் கூற்றுப்படி, "அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தைப் பொருத்தவரை, அவர்கள் சேதங்களுக்கு தீர்வு காண விரும்புவர்."
" இருப்பினும், குற்றச்சாட்டுகளின் தன்மையைப் பொருத்தவரை, அபராதத்தின் அளவு அதிகமாக இருக்கலாம். அந்த அபராதத்தை செலுத்துவது அதானி குழுமத்தின் மற்ற நிறுவனங்களையும் பாதிக்கலாம்."
1997-ம் ஆண்டு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டது.
கௌதம் அதானியை அமெரிக்கா கைது செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி நடந்தால் அதற்கு இந்தியாவின் பதில் என்ன?
“இது ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளைப் பொருத்தது. இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படலாம்” என ரனினா கூறினார்.
பங்குச் சந்தை மற்றும் அதானி பிராண்ட் - இதன் தாக்கம் என்ன?
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அதானி குழுமத்துடனான இரண்டு ஒப்பந்தங்களை ரத்து செய்ய கென்ய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஒப்பந்தங்களின்படி, கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தில் அதானி குழுமம் 1.85 பில்லியன் டாலர் முதலீடு செய்ய இருந்தது.
அதற்கு ஈடாக விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நடத்த ஒப்பந்தம் பெற்று இருந்தது. இது தவிர 736 மில்லியன் டாலருக்கு இன்னொரு ஒப்பந்தமும் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, அங்கு மின்கம்பி அமைக்கும் பணியை அதானி குழுமம் பெற்றது.
இரண்டு ஒப்பந்தங்களிலும் ஊழல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
கென்ய அதிபர் வில்லியம் ருடோ, வியாழக்கிழமையன்று இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கும் போது ஊழல் குறித்து மேற்கோள் காட்டினார்.
“ ஊழல் பற்றிய மறுக்க முடியாத ஆதாரங்களையும் நம்பத்தகுந்த தகவல்களையும், எங்கள் புலனாய்வு அமைப்புகள் மற்றும் கூட்டணி நாடுகள் வழங்கிய புதிய தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன. இது குறித்து நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்” என கென்ய நாடாளுமன்றத்தில் ரூட்டோ கூறினார்.
அதானி குழும நிறுவனங்கள், கென்யாவைப் போல பல நாடுகளில் இயங்குகின்றன அல்லது அங்கு திட்டங்களைத் தொடங்க முயற்சிக்கின்றன.
இந்தக் குழுமம் இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகளுடனும், பல வெளிநாட்டு அரசுகளுடனும் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
இருப்பினும், கென்யா நடவடிக்கை எடுத்த விதத்தை போன்று , மற்ற நாடுகளிலும் நடக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த வியாழக்கிழமைய அன்று அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் பங்கு மதிப்பில் சரிவு ஏற்பட்டது.
இருப்பினும், குற்றச்சாட்டுகள் காரணமாக பங்குகளின் விலையில் வீழ்ச்சி இதற்கு முன்பும் காணப்பட்டுள்ளது. பின்னர் அவற்றில் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
அம்ப்ரிஷ் பலிகா ஒரு பங்குச் சந்தை நிபுணர். அவர் எந்த நிறுவனத்துடனும் தொடர்புடையவர் அல்ல.
“ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு நாம் பார்த்ததைப் போல இந்த முறை அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு பெரிய வீழ்ச்சியை சந்திக்காது என்று நான் நினைக்கிறேன்."என பலிகா பிபிசி இந்தியிடம் கூறினார்.
ஜனவரி 2023 இல், ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ என்ற அமெரிக்க நிறுவனம் தனது அறிக்கையில் அதானி குழுமத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
அதே வாரத்தில், அதானி குழும நிறுவனங்களின் மொத்த பங்குச் சந்தை மதிப்பு சுமார் 50 பில்லியன் டாலர் வரை குறைந்தது.
“அதானி குழுமம் சவால்களை சமாளிப்பதில் வெற்றிகரமானதாக இருக்கிறது. ஆனால், அத்தகைய அறிக்கைகள் அந்த குழுமத்தின் நற்பெயரை கேள்விக்குட்படுத்துகின்றன" என்று பலிகா விளக்குகிறார்.
“இதன் காரணமாக, நிதி திரட்டுவது இக்குழுமத்திற்கு தாமதமாகிறது. இந்த முறை குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட போது அதானி கிரீன் நிறுவனத்துக்கு நிதி திரட்டி கொண்டிருந்தனர். ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தபோது அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு நிதி திரட்டிக் கொண்டிருந்தனர்." என்று அவர் கூறினார்.
அதானி குழுமத்தின் நன்மதிப்பு பாதிக்கப்படுமா?
இந்த சர்ச்சை அதானி குழுமத்தின் நன்மதிப்பைப் பாதிக்கும் என சந்தோஷ் தேசாய் எனும் ஆய்வாளர் கருதுகின்றார்.
“முதலீட்டாளர்கள் பயப்படுவார்கள். எதிர்காலத்தில் அதானி குழுமம் வெளிநாட்டில் நிதி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது” என்று நினைப்பதாக தேசாய் தெரிவிக்கின்றார்.
“ஆனால் கேள்வி என்னவென்றால், அவர் மீதான பொதுமக்களின் பார்வையை இந்த வழக்கு மாற்றுமா? அவரை விரும்பும் மக்கள் அவரை ஒரு வெற்றியடைந்த மனிதராகப் பார்ப்பார்கள். அதனால் அவர் குறிவைக்கப்படுகிறார் என நினைப்பார்கள். அவரைப் பிடிக்காதவர்கள் இந்தக் குழுமத்தைப் பற்றி முன்னமே தாங்கள் சரியாகச் சொன்னதாகச் கூறுவார்கள்." என்று தேசாய் கூறுகிறார்.
சந்தோஷ் தேசாய் கூறுகையில், “முதலீட்டாளர்கள் லாபத்தையும் நிலைத்தன்மையையும் விரும்புகிறார்கள். இந்தியா இதை வழங்க முடிந்தால், எந்த நிறுவனம் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் அது ஒரு பொருட்டாக இருக்காது. அதுபோலவே, வணிக உலகில் ஓரளவு அரசியல் ஆதரவு தேவை என்ற கருத்தும் இந்த வழக்கின் மூலம் மேலும் அதிகரிக்கலாம்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)