You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் தாக்கிய ஜம்மு காஷ்மீரின் உரி - என்ன நிலையில் உள்ளது?
ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள சலாமாபாத் என்ற சிறிய கிராமத்திற்கு பிபிசி குழு சென்றது.
அங்கிருந்து பேசிய பிபிசி செய்தியாளர் ஆமிர் பீர்ஜதா, "இப்பகுதி பேய் நகரம் போல இருப்பதை நாங்கள் பார்க்கிறோம். இப்பகுதி பொதுமக்கள் யாருமின்றி காணப்படுகிறது. இந்த இரண்டு வீடுகளும் இன்னமும் எரிந்துகொண்டிருக்கின்றன. என்ன நடந்தது என்று தெரியவில்லை. புகலிடங்களில் தங்கியிருக்கும் உள்ளூர் மக்களிடம் தொலைபேசியில் பேசினோம்.
அவர்கள் எங்களிடம் சொல்வது என்னவென்றால், இன்று காலை எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு அப்பாலும் பாகிஸ்தானிலும் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கியதாக இந்தியா கூறியதற்கு பிறகு, எல்லையை கடந்து, பாகிஸ்தான் தாக்குதலை தொடங்கியது. சில ஷெல் குண்டுகள் இந்த வீடுகள் மீது விழுந்தன. இந்த பகுதியில் சில பொதுமக்களும் காயமடைந்ததாக எங்களிடம் சொல்லப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்." என்றார்.
எல்லை கடந்து தீவிரமான ஷெல் குண்டுவீச்சசு தாக்குதல் நடந்த நிலையில், நள்ளிரவில் இருந்து இன்று காலை வரை என்ன நடந்தது என்று சொல்வதற்கு இப்பகுதியில் யாருமில்லை.
"தொலைபேசியில் உள்ளூர் மக்களிடம் பேசியபோது, அனைவரும் சொல்வது என்னவென்றால், அமைதி நிலவும் என்று உறுதியாக தெரியும் வரை திரும்பி வர முடியாது என்று கூறுகிறார்கள். அமைதி எப்போது வரும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை." என்கிறார் ஆமிர் பீர்ஜதா.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு