You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போராடும் விவசாயிகளுக்கு தினமும் உணவு சமைத்துக் கொடுக்கும் பெண்கள்
பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் ஷம்பு என்ற இடத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்காக, பட்டியாலா அருகே உள்ள சுஜாகர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அதிகாலை 5 மணிக்கே லங்கர் எனப்படும் உணவு தயாரிக்க தொடங்கிவிடுகின்றனர்.
"சில சமயங்களில் காலை 8 அல்லது 9 மணிக்கு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு கிளம்புவோம் அல்லது லங்கர் சமைப்பதற்கான பணிகளை முடித்துவிட்டு வீட்டு வேலைகளை கவனிக்கச் செல்வோம்" இந்த கிராமத்தைச் சேர்ந்த நிர்மத் கவுர்.
"போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்காக லங்கர் தயாரிக்கிறோம். அவர்கள் அமிர்தசரஸ் மற்றும் குர்தாஸ்பூர் போன்ற தொலைதூர இடங்களிலிருந்து வந்தவர்கள். போராட்டத்தின் போது அவர்கள் கஷ்டப்படுவதையோ, பசியுடன் இருப்பதையோ நாங்கள் விரும்பவில்லை. அவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்" என்கிறார் அவர்.
சுஜாகர் கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஜிந்தர் கவுர் பேசுகையில், "மாலையில் காய்கறிகளை நறுக்கி வைத்துவிடுவோம், பின்னர் காலையில் அதைக் கொண்டு சமைக்கிறோம். அதிகாலையில் பெண்கள் இங்கு வந்து உணவு சமைப்பார்கள். எங்களது விவசாய சகோதரர்களை ஆதரிப்பதற்காக இதைச் செய்கிறோம். உரிமைகளுக்காக போராடும் விவசாயிகள் பசியோடு இருக்கக் கூடாது" என்கிறார்.
இந்த கிராம மக்கள் காலை 9 மணியளவில் லங்கர் தயாரிக்கும் பணியை முடித்து விடுகிறார்கள். பின்னர் தயாரிக்கப்பட்ட லங்கர் மற்றும் பாலை டிராக்டர்கள் மூலமாக போராட்டம் நடக்கும் இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.
"போராட்டம் நடத்தும் எங்களது பிள்ளைகளுக்காக நாங்கள் உணவு சமைக்கிறோம். காலை 8 மணிக்கு முன்பே இங்கு வந்து விடுவோம். பெண்கள் தங்கள் வீடுகளையும் குழந்தைகளையும் கவனித்து கொண்டு அதே நேரத்தில் விவசாயிகளுக்கும் உதவுகிறார்கள். விவசாயிகளுக்கு உணவு சமைப்பதில் தங்களது முழு பங்களிப்பையும் அளித்த பிறகே அன்றாட பணிகளுக்கு திரும்பிச் செல்கிறார்கள் இந்தப் பெண்கள். விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்
எனது மகன்கள் இராணுவத்தில் பணிபுரிகிறார்கள். விவசாயிகள் மட்டுமல்ல, காவலர்கள், இராணுவ வீரர்கள் என எல்லோரும் எங்கள் பிள்ளைகளே" என்கிறார் லங்கர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பசந்த் கவுர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)