சந்திரயான் - 3: தூங்கும் விக்ரம் லேண்டர் உயிர்த்தெழப் போவது எப்போது?

சந்திரயான்-3

பட மூலாதாரம், NASA

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி நியூஸ்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இந்தப் புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் மையத்தில் ஒரு சிறிய புள்ளியாகத் தென்படுகிறது. "சுற்றியுள்ள பிரகாசமான ஒளிவட்டத்திற்கு அருகே அதன் இருண்ட நிழல் தெரிகிறது" என்று நாசா குறிப்பிட்டுள்ளது.

சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23 அன்று நிலாவில் அதிகம் ஆய்வு செய்யப்படாத தென் துருவத்தின் தரையில் இறங்கியது.

அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து, நிலாவைச் சுற்றிவரும் தனது லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டரில் உள்ள கேமரா இந்தப் புகைப்படத்தை எடுத்ததாக நாசா கூறியிருக்கிறது.

 சந்திரயான்-3

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு, அமெரிக்கா, முன்னாள் சோவியத் ஒன்றியம், சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, நிலாவில் மென்மையான தரையிறங்கிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

கடந்த மாதம், விக்ரம் லேண்டர் - பிரக்யான் என்ற ரோவரை அதன் வயிற்றில் சுமந்து கொண்டு - நிலாவின் தென் துருவத்திலிருந்து சுமார் 600 கிமீ தொலைவில் தரையைத் தொட்டது. இதன் மூலம் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெயர் இந்தியாவுக்குக் கிடைத்தது.

அமெரிக்கா, முன்னாள் சோவியத் ஒன்றியம், சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, நிலவில் மென்மையான தரையிறங்கிய நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.

லேண்டர் மற்றும் ரோவர் நிலாவின் மேற்பரப்பில் சுமார் 10 நாட்கள் செலவிட்டன. தரவு மற்றும் படங்களை சேகரித்தன. "தங்கள் பணி நோக்கங்களை கடந்து விட்டதாக" இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கூறுகிறது.

கடந்த வார இறுதியில், சந்திரனில் சூரியன் மறையத் தொடங்கியதால் லேண்டரும் ரோவரும் உறக்க நிலையில் வைக்கப்பட்டதாக கூறியது.

"சூரிய சக்தி குறைந்து பேட்டரி தீர்ந்தவுடன் லேண்டரும் ரோவரும் தூங்கிவிடும்" என்று இஸ்ரோ கூறியது.

சந்திரனில் சூரியன் கதிர் விழும் அடுத்த நாள் தொடங்கும் போது செப்டம்பர் 22-ஆம் தேதி லேண்டரும் ரோவரும் மீண்டும் உயிர்த்து எழும் என்று நம்புவதாக இஸ்ரோ மேலும் கூறியது. லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை அவற்றின் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கும் செயல்படுவதற்கும் சூரிய ஒளி தேவைப்படுகிறது.

சந்திரயான்-3

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு, பிரக்யான் ரோவர் நிலாவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு நடத்தியது

இந்திய விண்வெளி நிறுவனம் லேண்டர் மற்றும் ரோவரின் இயக்கங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் மற்றும் அவர்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்துள்ளது பற்றிய வழக்கமான புதுப்பிப்புகளை வழங்கியுள்ளது.

இந்த வார தொடக்கத்தில், சந்திர மேற்பரப்பில் விக்ரம் ஒரு "வெற்றிகரமான ஹாப் பரிசோதனை" செய்ததாக இஸ்ரோ கூறியது. இந்தப் பரிசோதனையின்போது விக்ரம் லேண்டர் மீண்டும் ஒருமுறை நிலவின் தரைப்பரப்பில் இருந்து குதித்து மீண்டும் தரையிறங்கியது.

சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் "அதன் சிறு ராக்கெட்டுகளை உயிர்ப்பித்தவுடன் அது சுமார் 40 உயரத்துக்கு குதித்து 30-40 தொலைவில் தரையிறங்கியது" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் நிலாவில் இருந்து பொருள்களை கொண்டு வரவும், மனிதர்களை அழைத்துச் செல்லவும் விண்கலம் பயன்படுத்தப்படலாம் என்று அது மேலும் கூறியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: